PUBLISHED ON : ஜன 15, 2017

பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
இமைக்கா நொடிகள் படத்தில், போலீசாகவும், அறம் படத்தில், கலெக்டராகவும் நடித்து வரும் நயன்தாரா, தொடர்ந்து, கொலையுதிர்காலம் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை முடித்ததும், பிரான்ஸ் நாட்டில் தயாராகும் ஒரு படத்தில், பத்திரிகை நிருபராக, கதைப்படி, தொலைந்து போன தன் குடும்பத்தை, பல நாடுகளுக்கு சென்று, தேடும் வேடத்தில் நடிக்கிறார்.
—சினிமா பொன்னையா
பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
தன் பல படங்களில், வடிவேலுவுடன் கூட்டணி அமைத்து, காமெடி காட்சிகளில் நடித்து வந்த பார்த்திபன், தற்போது, தான் இயக்கியுள்ள, கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில், தம்பி ராமையாவுடன், காமெடி கூட்டணி அமைத்துள்ளார். காமெடி காட்சிகளில், பார்த்திபனிடம் சிக்கி, எப்படி வடிவேலு அவஸ்தைப்பட்டாரோ, அதேபோல், இப்படத்தில், தம்பி ராமையா அவரிடம் சிக்கி, சிதைந்து போகிறார்.
—சி.பொ.,
வில்லியான இனியா!
வாகை சூடவா உட்பட, பல படங்களில் நடித்த இனியாவுக்கு, தற்போது, கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், 'கேரக்டர்' நடிகையாகி விட்ட அவர், செல்வா இயக்கத்தில், அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கயிருக்கும் படத்தில், அதிரடி வில்லியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, சிறந்த வில்லி நடிகையாக, தென்னிந்திய படங்களில் வலம் வர வேண்டும் என்பது தான், இனியாவின், தற்போதைய நோக்கமாக உள்ளது. ஆனை மேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன்!
—எலீசா
ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
ஓரம்போ பட இயக்குனர், புஷ்கர் காயத்ரி இயக்கும், விக்ரம் தேவா என்ற படத்தில், மாதவன் மற்றும் விஜயசேதுபதி இருவரும் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாலிவுட் பாணியில் இப்படம் படமாகி வருவதால், படத்தின் பின்னணி இசையை, ஹாலிவுட் இசைக் கலைஞர்களை வைத்து, ஹாலிவுட், 'ரெக்கார்டிங்' தியேட்டர்களிலேயே இசையமைக்கிறார், இசையமைப்பாளர், சாம்.
—சி.பொ.,
கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
விஜயுடன், பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக, மேலும், சில முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், மணிரத்னம் மற்றும் கவுதம்மேனன் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கும் கல்லெறிந்து வருகிறார்; இதில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை அடுத்து, கவுதம்மேனன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. உபாயத்தில் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
— எலீசா
விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
ஆர்யாவின் மார்க்கெட் சறுக்கி வருவதால்,'வில்லனாக நடித்தாவது, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வோம்...' என்று, விஷால் நடிக்கயிருக்கும், இரும்புத்திரை படத்தில், வில்லனாக ஒப்பந்தமானார், ஆர்யா. ஆனால், தற்போது, காட்டுவாசியாக அவர் நடித்துள்ள, கடம்பன் படம், வெற்றி பெறும் என்று எண்ணி, 'இந்நேரத்தில் வில்லனாக நடித்து, கதாநாயகன், 'இமேஜை' கெடுத்துக் கொள்ள வேண்டாம்...' என நினைத்து, கடைசி நேரத்தில், அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.
—சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
அட்டகத்தி நடிகை, அடக்கி வாசித்தது வரை, ஓரளவு மவுசு இருந்தது. ஆனால், நியூ நடிகருடன் நடித்த படத்தில், கட்டவிழ்த்து விட்டதால், தற்போது, அவரை யாரும் கண்டு கொள்வது இல்லை. அதனால், புதிய பட வாய்ப்புகள் இல்லாமல், ஆந்திரா பக்கம் தஞ்சமடைந்துள்ளவர், ஆபாச புயலாக உருவெடுத்துள்ளார். அத்துடன், தமிழில் பெரிதாக துட்டு சம்பாதிக்காத நடிகை, அங்கு, லட்சங்களை சொல்லியடித்து வருகிறார்.
நடன சூறாவளியை, மும்பை யிலுள்ள அவரது இருப்பிடத்திற்கு சென்று, அடிக்கடி சந்தித்ததால், கிசுகிசுவில் சிக்கியுள்ளார், பையா நடிகை. இருப்பினும், மேற்படி நடிகர், நடிகைக்கு இந்தி படங்களுக்கு, சிபாரிசுகளை முடுக்கி விட்டுள்ளார். இதனால், பாலிவுட்டில், 'அவர்கள் விரைவில், தம்பதிகளாகி விடுவர்...' என்கிற அளவிற்கு, பரபரப்பு செய்தி பரவி வருகிறது.
சினி துளிகள்
* தினேஷுடன் நந்திதா நடித்த, உள்குத்து படம், விரைவில் திரைக்கு வர உள்ளது.
* பாகுபலி இரண்டாம் பாகத்தில், புரட்சி பெண்ணாக நடிக்கும் தமன்னா, இரண்டு சண்டை காட்சிகளில் நடிக்கிறார்.
அவ்ளோதான்!
