PUBLISHED ON : ஏப் 12, 2020

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின், கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம், சிட்கல். இதை, 'கின்னாரஸ்' என்றும் அழைப்பர்.
இதன் பொருள், 'கடவுளுக்கும், மனிதனுக்கும் இடைப்பட்ட பூமி' என்பதாகும்.
இந்தியாவின் கடைசி கிராமம், இது. இத்துடன், தரை வழி சாலை முடிகிறது. 'பர்மிட்' இல்லாமல் பயணிக்கும் கடைசி கிராமமும், இது தான். இதையடுத்து, சீன எல்லை துவங்குகிறது.
* நவம்பர் முதல், மார்ச் கடைசி வரை, குளிர் காலம். பனி மூடி, கிராமமே தெரியாது. சாலையை மூடி விடுவர்
* கிராமத்தின் மொத்த ஜனத்தொகை, 882 பேர். அனைவரும், ஹிமாச்சல் பிரதேசத்தின் மற்ற கிராமங்களுக்கு சென்று பிழைப்பர். மார்ச் மாத கடைசியில், இதற்கான சாலை திறக்கும்போது, கிராம மக்கள் திரும்ப வந்து, அக்டோபர் வரை இங்கு வாழ்வர்
* இயற்கை கொஞ்சும் பனி மலைகளையும், ஆப்பிள் பண்ணைகளையும், மர வீடுகளையும் ரசிக்கலாம். கண்கொள்ளா பள்ளத்தாக்குகள், கூடுதல் கவர்ச்சி. இச்சமயத்தில், சுற்றுலா பயணியர் ஏராளமாய் இங்கு வருவர்
* இங்குள்ள வீடுகள், மரத்தால் ஆனவை. பள்ளி உட்பட பொது இடங்களில், மேலே தகடு கூரை போட்டிருப்பர்
* புத்த கோவிலும், இந்து பெண் தெய்வ கோவிலும் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து, 3,450 மீட்டர் உயரத்தில் உள்ளது, இக்கிராமம்.
'இந்தியாவின் மிக துாய்மையான காற்றை கொண்ட கிராமம்' என, டில்லி, ஐ.ஐ.டி., ஆய்வுக்குழு சான்று வழங்கியுள்ளது.
டில்லியிலிருந்து, 600 கி.மீ., தொலைவிலும், சிம்லாவிலிருந்து, 250 கி.மீ., தொலைவிலும், இக்கிராமம் உள்ளது.
ஜோல்னாபையன்