தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஹரி நாமம் போதுமே!

ஹரி நாமம் போதுமே!

ஹரி நாமம் போதுமே!


PUBLISHED ON : டிச 13, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 13, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொத்து, சுகம், பேர், புகழ் மற்றும் பதவி என, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை. ஆனால், கடவுளை உணர்ந்து, அவரின் அருள் வெள்ளத்தில் இரண்டற கலக்க வேண்டும் என்பதில், ஒரு சிலருக்கே ஆசை ஏற்படும். அத்தகையோரில் ஒருவள் தான் சூராபாய்!

ஏழை புரோகிதருக்கு மகளாய் பிறந்து, சிறு வயதில் இருந்தே இறை பக்தியில் ஈடுபட்டு வந்தாள் சூராபாய். உரிய பருவத்தில், அவளை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை. புகுந்த வீட்டிலும், அவள் எப்போதும் ஹரிபக்தியில் ஈடுபட்டு வந்ததால், அவ்வீட்டினர், அவளுக்கு பல்வேறு இடையூறு விளைவித்தனர்.

இதனால், மனம் நொந்த சூராபாய், 'இறைவனை வணங்குவதற்கு இப்போதே இவ்வளவு தடைகள் ஏற்படுத்துகின்றனரே... குழந்தைகள் பிறந்து விட்டால், கரையேற வேண்டிய நாம், மேலும் பந்தப்பட்டு, பிறவி சுழலில் சிக்கி விடுவோமோ...' என நினைத்து, வீட்டை விட்டு வெளியேறி, பிருந்தாவனம் சென்றாள்.

அங்கிருந்த பாகவதர்களுக்கு, தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி, தானமாக அளித்து விட்டு, ஒரு ஓரமாக அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்தாள்.

அவளுக்கு காட்சி அளித்த பகவான், 'ராதை குண்டம் எனும் பகுதியில் இரு; உரிய நேரத்தில் உன்னை ஆட்கொள்வேன்...' என கட்டளையிட்டார். அவ்வாறே செய்தாள் சூராபாய். இத்தகவலை அறிந்து, அவளை காண வந்த தந்தை, துறவு கோலத்தில் இருந்த மகளைப் பார்த்ததும், மன வேதனை அடைந்தவர், அவளை வீட்டிற்கு அழைத்தார்.

'தந்தையே... எல்லாரையும் போல பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்பதற்காக, நான் பிறக்கவில்லை. எனக்கு இறைவனின் அருள் கிடைத்துள்ளது. அப்படியிருக்க, வழிகாட்ட வேண்டிய தாங்களே இப்படி வேதனைப்படலாமா...' என்றாள்.

தந்தைக்கு நல்லறிவு பிறந்தது; இருந்தாலும் பெற்றவரல்லவா... அதனால், 'சூராபாய்... நீ சொல்வதை நான் கேட்கிறேன்; ஆனால், ஹரி தியானத்தை, நம் வீட்டில் வந்து செய்...' என வேண்டுகோள் விடுத்தார்; சூராபாயும் ஒப்புக் கொண்டாள்.

வீட்டில் அவள் எப்போதும் தியானத்திலேயே மூழ்கியிருந்ததால், அவளுடைய மாசற்ற மன அழகு, முகத்திலும் பிரதிபலித்து, அவளை பேரழகியாக காட்டியது.

ஒருமுறை, அவ்வூர் அரசன், சூராபாயின் அழகைப் பார்த்து, மனதை இழந்து, அவள் நினைவாகவே இருந்தான். அன்று இரவு, பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் அக்கரையில் இருந்து, இக்கரையில் இருக்கும் அரசனை, 'வெள்ளத்தை கடந்து வா...' என சூராபாய் அழைப்பது போல், கனவு கண்டான்.

விடிந்ததும், பெரியவர்களிடம் இக்கனவை கூறி விவரம் கேட்க, 'மன்னா... பிறவிக் கடலைக் கடக்க உன்னாலாகாது; சூராபாயிடம் சென்று, உபதேசம் பெறு; கனவின் விவரம் இதுவே...' என்றனர்.

தன் தவறை உணர்ந்த மன்னன், சூராபாயின் கால்களில் விழுந்து வணங்கி, மன்னிப்பு வேண்டி, உபதேசம் பெற்றான்.

'தான் மட்டுமன்றி, மற்றவர்களையும் பிறவி கரையேற்றியவர்கள் வாழ்ந்த நாடு இது. நம்மால் அப்படி இருக்க முடிகிறதோ இல்லையோ, அப்படி இருந்தவர்களை வணங்கினால் கூடப் போதும்; நாமும் கரையேறி விடலாம்...' என்பார் காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!

பொன்னைக் கடந்து இலங்கும் புலித்தோலினன்

மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை

துன்னிக் கிடந்த சுடுபொடி ஆடிக்குப்

பின்னிக் கிடந்தது என் பேரன்பு தானே!

விளக்கம்: பொன்னின் ஒளியை விட, மிகுந்து ஜொலிக்கும் திருமேனி கொண்டவர்; ஒளிரும் புலித்தோலை அணிந்தவர்; திருமுடியில் மின்னல் போல மிளிர்ந்து, ஒளிவீசும் பிறை நிலவை அணிந்தவர். திருநீற்றை அணிந்த திருமேனியர். அப்படிப்பட்ட நடராஜப் பெருமானிடம் பேரன்பு கொண்டேன். அதன் விளைவாக, அவரும், நானும் இரண்டற இணைந்தோம்.

கருத்து: நடராஜப் பெருமானின் திருவடிவை பற்றி, திருமூலர் கூறும் இப்பாடலை, தியான ஸ்லோகமாகக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us