PUBLISHED ON : ஜூலை 16, 2023

திரைப்பட நடிகர், மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
ஒருசமயம், கோவை பொருட்காட்சியில், எங்களது, 'மணிமகுடம்' மற்றும் 'புதுவெள்ளம்' ஆகிய நாடகங்கள் நடைபெற்றன. நாடகம் முடிந்து சிலர், என்னிடம் கையெழுத்து வாங்க வந்தனர்.
அவர்களில் ஒரு பெண், நல்ல நிறம், அழகான தோற்றத்துடன் இருந்தார். கையெழுத்து போட்டவாறே, 'எங்கள் நாடகத்தில் நீ நடிக்கலாமே...' என்றேன்.
பெருமகிழ்ச்சியுடன் கும்பிட்டு, 'நானே கேட்கலாம் என்றிருந்தேன். என் பெயர், ஷீலா...' என்றார்.
சென்னைக்கு அவர் அம்மாவுடன் வர ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் நாடக குழுவில், அவரும் மாதச் சம்பள நடிகையானார்.
மதுரை திருமாறன் எழுதிய, 'தென்பாண்டி வீரன்' என்ற சரித்திர நாடகம், நெல்லை பொருட்காட்சியில், அண்ணாதுரை தலைமையில் அரங்கேறியது. அதில், ஒரு சிற்பியின் மகளாக நடித்தார், ஷீலா.
எங்களது பல நாடகங்களில் நடித்து வந்த, ஷீலா தான், மலையாள பட உலகின் ராணியாக திகழ்ந்து, பெரும் புகழ்பெற்று, ஜனாதிபதி பரிசு மற்றும் ஊர்வசி உட்பட பல பாராட்டுகளை பெற்றவர்.
'எஸ்.எஸ்.ஆரால் தான் நான் இந்த நிலைக்கு வந்தேன்...' என பத்திரிகைகளிலும், வேறு பேட்டிகளிலும், தெரிவித்திருந்தார், ஷீலா.
லேனா செட்டியாரின், 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' பெயரில், அக்காலத்தில் பிரபலமாக இருந்த, பி.யு.சின்னப்பாவை கதாநாயகனாக நடிக்க வைத்து, சில வெற்றிப் படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தனர்.
பிறகு, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, மதுரை வீரன் படத்தை தயாரித்து பெரு வெற்றி பெற்றார்.
அடுத்து, ராஜாதேசிங்கு என்ற படத்தை தயாரிக்க முற்பட்டு, திரைக்கதை, வசனம், பாடல்களை கண்ணதாசனை எழுதச் செய்தார்.
ராஜாதேசிங்கு கதை, உண்மையில் நடந்த சரித்திரக் காவியம். செஞ்சிக்கோட்டையை தலைநகராகக் கொண்டு, அப்பகுதியில் நல்லாட்சி நடத்தி வந்தான், ராஜாதேசிங்கு. அவனுக்கு உயிருக்கு உயிராக இணைபிரியா நண்பன், முகமத்கான்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க, நடிகை பத்மினியும், எம்.ஜி.ஆரின் தளபதியும், அவரது உயிருக்குயிரான நண்பன் முகமத்கானாக என்.டி.ராமாராவும், அவருக்கு காதலியாக, நடிகை பானுமதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதலில் எம்.ஜி.ஆர்., சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கத் துவங்கினர்.
ஒரு காட்சியில், வீரன் ஒருவன் பதட்டத்தோடு ஓடி வந்து, 'தளபதி முகமத்கானிடம் அவசரமான செய்தி ஒன்றை சொல்லப் போகிறேன். முன் அறிவிப்பு ஏதுமின்றி, ஆற்காடு நவாப் நம் நாட்டின் மீது போர் தொடுத்து விட்டான். நம் படையினரும் அவர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர்...' என்று சொல்வான்.
இக்காட்சிக்கு, கவிதை நடையில், மிக அற்புதமாக வசனம் எழுதியிருந்தார், கண்ணதாசன்.
செட்டியாரை அழைத்து, 'ஏய்யா இந்த கவிதை நடைத் தமிழ் வசனங்களை என்.டி.ராமாராவால் பேச முடியுமா, பேசினா நல்லா இருக்குமா...
'மேலும், முகமத்கான் வேடத்துக்கு தோற்றப் பொலிவும், நடிப்புத் திறனும், வெண்கலக் குரலெடுத்து பேசிடவும் நம்மகிட்ட ஒரு ஆள் இருக்கிறான்யா... அவன் தான் தம்பி ராஜேந்திரன், அவனை போடு. எல்லா வகையிலும் பொருத்தமாக இருக்கும்...' என்று சொல்லியிருக்கிறார், என்.எஸ்.கிருஷ்ணன்.
பிறகு, 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' சார்பில், என்னிடம் விபரத்தை கூறினர். நான் தயங்கினேன். பிறகு, எம்.டி.ராமாராவே, என்னை அந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்படி தகவல் சொல்லி அனுப்பினார். அதன்பிறகே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
படப்பிடிப்பு நாளன்று, எம்.ஜி.ஆருடன் நானும், பானுமதி மற்றும் பத்மினியும் படப்பிடிப்பு நிலையத்துக்கு வந்தோம்.
பானுமதிக்கு, அப்போது தான், நான் அவருக்கு காதலனாக நடிக்கப் போகும் விபரம் தெரிவிக்கப்பட்டது. அவர் அதை ஏற்க மறுத்து, பொருத்தமான காரணமும் சொன்னார்.
அது என்ன காரணம்...
- தொடரும்.
படத்தில் நடிக்க, என்னை ஒப்பந்தம் செய்தனர். எனக்கு அன்னையாக நடித்தவர், பண்டரிபாய். ஒருநாள், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர், என்னை அழைத்து, 'முன்பொரு சமயம், ஆண்டாள் படத்தில் நடிக்க உன்னை அழைத்து வந்தனர். அப்போது, 'நீ அழகாக இருக்கிறாய். நன்றாக நடிக்கிறாய். ஆனால், சின்னப் பையனாக இருக்கிறாய், கொஞ்சம் வயதாகட்டும், பிறகு நானே உன்னை கதாநாயகனாக நடிக்க வைக்கிறேன்...' என்று சொல்லி அனுப்பினேனே ஞாபகம் இருக்கா...' என, கேட்டார்.'நீங்கள் நினைவில் வைத்திருப்பது தான் சார் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...' என்றேன்.'இனிமே, என் படங்களில் தொடர்ந்து நீ நடிக்கப் போற...' என்றார்.'ரொம்ப மகிழ்ச்சி சார்...' என்றேன்.
பணம் படத்தில், என்.எஸ்.கே., நடித்த ஒரு காட்சி...'இன்றைக்கு இருக்கிற பிரபல சினிமா நடிகர்களெல்லாம் எனக்குள்ளே தான் அடங்கியிருக்கிறாங்க. காட்டுறேன் பார்க்கறீங்களா...' என சொல்லி, தன் உடைக்குள் மறைத்து வைத்திருக்கும் அக்கால பிரபல நடிகர்களின் புகைப்படங்களை காட்டுவார்.அதாவது, 'நீங்க தியாகராஜ பாகவதரைப் பார்க்கணுமா. இதோ பாருங்க...' என, மடியிலிருந்து, பாகவதர் படத்தை எடுத்துக் காட்டுவார். இப்படியே தான் மறைத்து வைத்திருந்த நடிகர், நடிகையர் படங்களையெல்லாம் காட்டி, வேடிக்கையாக பேசி, அறிமுகப்படுத்துவார்.அத்துடன் அன்றைய படப்பிடிப்பு முடிந்திருக்க வேண்டியது. ஆனால், 'இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. மீண்டும் படப்பிடிப்பை துவங்க ஏற்பாடு செய்யுங்கள்...' என்றார், என்.எஸ்.கே.,யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.'ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். காளி என்.ரத்தினத்தின் படத்தை, என் முதுகு பக்க சட்டைக்குள் கையை நுழைத்து எடுத்து, 'இதோ பாருங்கள், உங்கள் காளி என்.ரத்தினம்' என்று காட்டுவதாக படமாக்கி விட்டோம்.'அப்படியானால் என்ன அர்த்தம், எனக்குப் பின்னால் தான் காளி என்.ரத்தினம் என்று, நான் சொல்வது போலாகி விடுமல்லவா... அதை மாற்றி இப்போ, வேற மாதிரி எடுக்கப் போறேன்...' என்று கூறினார், என்.எஸ்.கே.,அதன்பின், காளி என்.ரத்தினத்தின் அருமை, பெருமை, சிறப்புகளையெல்லாம் எடுத்துக்கூறி, 'அவரை நான் எங்கே தெரியுமா வெச்சுருக்கேன்? பாருங்க...' என சொல்லி, தன் சட்டையின் முன் பக்கம் கையை நுழைத்து, 'இதோ என் நெஞ்சுக்குள்ளேயே வெச்சுருக்கேன்...' என்று, காளி என்.ரத்தினம் படத்தை எடுத்து காட்டுவது போல், காட்சியை படமாக்கினார்.அந்த நிகழ்ச்சியை கண்ட அனைவரும், என்.எஸ்.கே.,வின் உயர்ந்த பண்பை நினைத்து, மகிழ்ந்தனர்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
