
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரியமானவனே!
திருவிழாவில்
மாவிலை தோரணம் கட்டி
வானத்தை அழகூட்டிக் கொண்டிருந்தாய்
எனக்குன்னை மிகவும் பிடித்தது!
தோரணத்தில் ஆங்காங்கே
பூக்களை செருகியபடி
நறுமணமிக்கப் பார்வையால்
அவ்வப்போது
எனக்குள் உன்னை
புரிய வைத்துக் கொண்டிருந்தாய்!
நீர்த்தெளித்து கோலமிடும்
பெண்களுடன் நின்றிருந்தேன்
கோலத்தை ஒளிப்படம்
எடுக்கும் பாவனையில்
என்னை மட்டுமே
ரசித்துக் கொண்டிருந்தாய்!
சுள்ளிகளை இட்டு
அடுப்பில் பொங்கல் வைக்கும்
பெண்களுடன் கூடி
நானும் தீயிட்டேன்
தூரத்து சூரியனாய்
புன்னகைத்துக் கொண்டிருந்தாய்!
சாமிக்கு படையலிட்டு
சர்க்கரைப் பொங்கல் தந்தபோது
இனிக்கிறது இதயம் என்றாய்!
உன் சொற்களில்
உலகமே இனித்தது எனக்கு!
மறுநாள் ஊருக்கு கிளம்புகையில்
'திரும்ப எப்போ வருவே...'
ஏக்க விழிகளோடு
என்னை ஏறிட்டு நோக்கினாய்!
பிரியமானவனே...
உன் ஊரிலேயே
செத்து விட தோன்றியது
எனக்கு!
— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.