PUBLISHED ON : ஏப் 01, 2018

ரஜினிகாந்துக்கு பலத்த செக்யூரிட்டி!
காலா மற்றும் 2.0 படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார், ரஜினி. தமிழகத்தில், அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வரை, தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். மேலும், தன் உதவியாளர்களுடன் படப்பிடிப்புகளுக்கு சென்று வரும் ரஜினி, தன் பாதுகாப்பு கருதி, இப்போது, பலத்த செக்யூரிட்டியுடன் சென்று வருகிறார்.
— சினிமா பொன்னையா
நயன்தாராவின் அழுத்தமான பதிவு!
அறம் படத்தில், கலெக்டராக நடித்ததை தொடர்ந்து, கோலமாவு கோகிலா என்ற படத்தில், மிடில் கிளாஸ் குடும்ப பெண்ணாக, கதையின் நாயகியாக நடிக்கிறார், நயன்தாரா. இப்படம் முழுக்க, பாவாடை தாவணியில் வருபவர், இன்றைய நடுத்தர வர்க்க பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் போது, என்னென்ன பிரச்னைகளை சந்திக்கின்றனர் என்பதை, இந்த கதாபாத்திரத்தில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இட்டு பேர் பெறு; வெட்டி பேர் பெறு.
— எலீசா
கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!
ஜெயம் ரவி நடித்த, வனமகன் படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை, சாயிஷா சாய்கல். முதல் படத்திலேயே தன் அபாரமான நடனத்தால், ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அவரது புயல் வேக நடனத்தை பார்த்த கோலிவுட் கதாநாயகர்கள் அதிர்ந்து போயினர். தற்போது ஆர்யாவுடன், கஜினிகாந்த் மற்றும் விஜயசேதுபதியுடன், ஜூங்கா படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலுமே சாயிஷாவுடன் நடனமாடுவதற்கு முன், ஒருமுறைக்கு பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே கேமரா முன் வந்திருக்கின்றனர் மேற்படி நடிகர்கள்! ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு!
— எலீசா
விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்!
தீவிர விஜய் ரசிகரான, ஜி.வி.பிரகாஷ், தற்போது, சர்வம் தாள மயம் என்ற படத்தில், விஜய்யின் ரசிகராகவே நடிக்கிறார். அதன் காரணமாக, வழக்கமான விஜய் ரசிகர்களை போன்று, விஜய் படம் வெளியாகும் தியேட்டர் வாசலில், 'கட்-அவுட்' பேனர் வைப்பதிலிருந்து மாறி, ஒரு உண்மையான ரசிகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் விதமாகவும், இப்படத்தில், ஜி.வி.பிரகாஷின் கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
நான் ரொம்ப ஆச்சாரமான பொண்ணு; கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கறாராக சொல்லி வந்த ராஜதந்திரம் நடிகை, தன் படக்கூலி பல ஆண்டுகளாக மந்தமாகவே இருந்ததால், அதை உயர்த்தும் முயற்சியாக, தற்போது, சில படங்களில் கட்டவிழ்ந்து நிற்கிறார். அதனால், இதுவரை அவருக்கு சில லகரங்களை மட்டுமே கொடுத்து வந்த தயாரிப்பாளர்கள், அவரது திடீர் தாராளத்தை பார்த்து, சம்பளத்தை தாராளமாக வழங்க துவங்கியிருக்கின்றனர்.
தளபதியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள வாரிசு நடிகை, முன்பெல்லாம் நடன மாடும் போது நடிகர்கள், தப்பித் தவறி தன் இடுப்பில் கை வைத்து விட்டால், கூச்சத்தில் கத்தி விடுவார். ஆனால், இப்போது, நடிகையிடமிருந்த கூச்சம் அடியோடு காணாமல் போய் விட்டது. அதுமட்டுமின்றி, சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே நடிகர்களின் வேன் பக்கமே செல்லாமல் இருந்து வந்த நடிகை, இப்போது, சின்ன, 'கேப்' கிடைத்தாலும், வேனுக்குள் புகுந்து, நடிகர்களுடன் கடலை போடுவதையே பொழுது போக்காக்கி விட்டார்.
சினி துளிகள்!
* சாமி 2 மற்றும் சண்டக்கோழி 2 படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு நடனத்தில் அசத்தியிருப்பதாக சொல்கிறார், கீர்த்தி சுரேஷ்.
* தமிழில் பல படங்களில் நடிப்பதால், ஐதராபாத் முகாமை விட்டு, சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார், ரெஜினா.
* தமிழில் விஜய் நடித்த, போக்கிரி படத்தை, இந்தியில், சல்மான் கானை வைத்து, வான்டட் என்ற பெயரில் படம் இயக்கிய பிரபுதேவா, தற்போது, சல்மான் கானை வைத்து, தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார்.
அவ்ளோதான்!
