
மனைவியிடம் எதையும் மறைக்காதீர்!
பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதம் தங்க நேர்ந்தது. அதற்குள் என் கணவர், இரண்டுமுறை என்னை வந்து பார்த்துச் சென்றார். வரும்போதேல்லாம் ஆபீஸ் விஷயம் மட்டுமின்றி, நான் இல்லாதபோது வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்வார்.
ஒரு மாதம் முடிந்து வீட்டிற்கு சென்றேன். அவசரத் தேவை என்றால் கூட கதவை சாத்திக் கொள்ளும் பக்கத்து வீட்டுப் பெண்மணி, தானாக வந்து பேசினார். 'நீங்கள் இல்லாத போது அலுவலகம் செல்லும் உங்கள் கணவர், இரவில், நேரத்துக்கு வீடு திரும்புவதில்லை. இருமுறை, வீட்டிற்கு இரவு வரவேயில்லை. காலையில் தான் வந்தார்...' என்றாள்.
'நீ இல்லாதபோது, வீட்டிற்கு வர பிடிக்கவில்லை. எனவே, ஓவர்டைம் பார்த்துவிட்டு அதிகாலை 3:00 மணிக்கு தான் வீட்டிற்கு வந்தேன்...' என்று, என் கணவர் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அதற்கேற்றார்போல், அந்த மாத சம்பளமும் அதிகம் கிடைத்தது.
அதனால், அந்த பெண்மணி கூறியதை பொருட்படுத்தவில்லை நான். கணவன் - மனைவியிடையே ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தால், பிறர் பேச்சை கேட்டு, வீண் சந்தேகம் மற்றும் சண்டை வராமல் தடுக்கலாம்.
— நிர்மலா செந்தில்குமார், சிவகங்கை.
பஸ்சில் தூங்கும் இளம் பெண்களே!
இரவு நேரத்தில், பேருந்தில் பயணம் செய் தேன். உட்கார இடம் இல்லாததால், நின்று வந்தேன். அப்போது, பலரும் பின்பக்கம் திரும்பி பார்த்த வண்ணம் இருந்தனர். என்னதான் பார்க்கின்றனர் என்று நானும் திரும்பி பார்த்தேன். ஆடை கலைந்த நிலையில், கவர்ச்சி தெரியும்படி, அழகான இளம்பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த காட்சியைத்தான், இமைக்க மறந்து, பார்த்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட நான் திடுக்கிட்டேன்.
பெண்கள், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்படி தன்னை மறந்த நிலையில் தூங்குவது, ஆண்களை தவறு செய்ய தூண்டும். எனவே, தூக்கம் வரும்போது, தோளைச் சுற்றி சேலையை நன்றாக இழுத்துச் செருகிக் கொண்டு தூங்கலாமே!
சமீபகாலமாக, நாட்டில் நடக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களை கேள்விப்பட்ட பிறகாவது, நாமும் கொஞ்சம் உஷாராக இருப்பது அவசியம்.
— வி.மாதவன், திருப்பூர்.
படித்தால் மட்டும் போதுமா?
சமீபத்தில், வங்கிக்கு சென்று பணம் செலுத்துவதற்கு, சலானை பூர்த்தி செய்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு மாணவி, தயங்கி தயங்கி வந்து, 'மேடம் இந்த சலானை கொஞ்சம் எழுதி கொடுக்க முடியுமா?' என்று கேட்டாள். நான், 'பொறும்மா, நான் பணத்தை கட்டிவிட்டு, பின் உனக்கு எழுதி தருகிறேன்...' என்றேன்.
பணம் கட்டிவிட்டு வந்து, அந்த மாணவியை அழைத்து, 'என்னம்மா படிக்கிறாய்?' என்றேன். பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படிப்பதாக கூறினாள்.
'ஏம்மா... இவ்வளவு படித்துவிட்டு, ஒரு வங்கி சலான் கூட எழுத தெரியாதா... படிச்சு என்னம்மா பயன்? உனக்கும், படிக்காதவங்களுக்கும் என்னம்மா வித்தியாசம்?' என்று கேட்ட உடன், வெட்கத்தோடு சிரித்து, தலையை குனிந்தாள்.
பின், சலானில் உள்ள கேள்விகளை விளக்கி, அவளையே பதில் எழுதச் சொன்னேன்.
இப்படி, வங்கி, தபால் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாமல், நன்கு படித்தவர்கள் கூட குழப்பத்தோடு முழித்துக் கொண்டு இருப்பதை காணலாம்.
படித்தவர்கள், முடிந்தவரை சலான் மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வது நல்லது.
— ஜி.கலாவதி, பொள்ளாச்சி.

