sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/திருநெல்வேலி!

திருநெல்வேலி!

திருநெல்வேலி!


PUBLISHED ON : ஜன 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன., 21 - நெல்லுக்கு வேலி கட்டிய விழா

திருநெல்வேலி-தென்தமிழகத்தின் பெருநகரம். வற்றாத தாமிரபரணி, இங்கேயே தோன்றி இங்கேயே மறைந்து விடுகிறது. அதனால், எந்த பிரச்னைக்கும் ஆளானதில்லை இந்த நதி. சுருக்கமாக,'நெல்லை' என்று இவ்வூரை அழைப்பர். நெல்லுக்கும், இந்த ஊருக்கும் சம்பந்தம் உள்ளதால், 'திருநெல்வேலி' என்ற பெயர் அமைந்தது.

முழுதும் கண்ட ராமன் என்ற மன்னன், திருநெல்வேலியை ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில், 12 ஆண்டுகள் மழை இல்லை. வற்றாத தாமிரபரணி கூட, வறட்சியின் பிடியில் சிக்கியது. மக்களுக்கு எப்படி உணவிடுவது என்று மன்னன் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.

வேதசன்மா என்பவர், தினமும் நெல்லை வந்து, நெல்லையப்பரை வணங்குவார். உணவுக்கு என்ன தான் பஞ்சமாக இருந்தாலும், தங்களை வாழவைக்கும் நெல்லையப்பரை மட்டும் பட்டினி போட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக, தினமும் அரிசி எடுத்து வந்து, இறைவனுக்கு நைவேத்யம் படைத்து வந்தார். பக்தர்களை சோதிப்பதில் சிவனுக்கு நிகரானவர் யாருமில்லை! அவர் வேதசன்மாவுக்கு சோதனை வைத்தார்.

அவரது சொத்துகளை படிப்படியாகக் கரையச் செய்தார். மிஞ்சியது ஒரு மூடை நெல் மட்டுமே! அது தீர்வதற்குள், மழை பெய்து வயல்கள் விளைந்தாக வேண்டும். 'பெருமானே... நான் பட்டினி கிடந்தேனும், உனக்கு தினமும் அமுது படைப்பேன். இந்த நெல் தீர்வதற்குள் மழை பொழிந்து, உன் பங்கையாவது பெற்றுக் கொள்...' என்று வேண்டினார்.

சிவன் அவரது கோரிக்கையை ஏற்றார். ஆனால், அதி<லும் ஒரு சோதனை. ஒருநாள், வேதசன்மா நைவேத்யத்திற்குரிய நெல்லை, திறந்த வெளியில் காயப்போட்டு விட்டு, தாமிரபரணிக்கு நீராடச் சென்றார். அப்போது பெருமழை பிடித்துக் கொண்டது. வேதசன்மா மகிழ்ந்த அதே வேளையில், 'ஐயையோ... நெல்லை வெட்ட வெளியில் காயப்போட்டு வந்தோமே... அது நனைந்து விட்டால், இன்றைய நைவேத்யத்திற்கு நெல்லுக்கு எங்கே போவது?' என வேகமாய் வீடு திரும்பினார்.

என்ன அதிசயம்... நெல்லைச் சுற்றி மழை பெய்ததே தவிர, நெல் மீது சொட்டு தண்ணீர் விழவில்லை. மழை நீர் வேலி போல் சுற்றி நின்று, உள்ளிருந்த நெல்லைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வேதசன்மா பரவசமடைந்தார். 'நெல்லுக்கு வேலியிட்ட நாதா' என்று விழுந்து வணங்கினார்.

சிவன் நிகழ்த்திய இந்த திருவிளையாடல் காரணமாகவே, அதுவரை, 'வேணுவனம்' என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, 'நெல்வேலி' ஆனது. பின், மரியாதை கருதி, 'திரு' என்ற அடைமொழி சேர்ந்து, 'திருநெல்வேலி' என மாறியது. சிவன், 'நெல்லையப்பர்' எனும் சிறப்புப்பெயர் பெற்றார். அந்த பெயரே நிலைத்து விட்டது. தைப்பூசத் திருவிழாவின் நான்காம் நாள், 'நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்ச்சி, நெல்லையப்பர் கோவிலில் நடத்தப்படும்.

தாமிரபரணியில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு, நெல்லையப்பர் கோவிலின் அமைப்பே காரணம் என்கின்றனர். எல்லாக் கோவில்களிலும் சுவாமி அபிஷேக தீர்த்தம், வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கு நோக்கி இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருண பகவான், எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், மூன்று மூலவர்கள் உள்ளனர். 'வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவரே, 'நெல்லையப்பர்' எனப்படுகிறார். இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னிதி முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னிதியும் இருக்கிறது. இவரே, இக்கோவிலின் முதல் லிங்கம் என்பதால், இவருக்கு முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராக வணங்கப்படுகின்றனர். பரணியில் நீராடி, பாவங்களைத் தொலைத்து புண்ணியத்தைப் பெற்றுச் செல்ல, நெல்லை நோக்கி பயணியுங்கள்.

***

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us