தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : பிப் 10, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளம்பெண்ணுக்கு களங்கம் கற்பிக்காதீர்!



நான் பிளஸ் 2 படிக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன், எனக்கு வயிற்றில் கட்டி இருந்ததால், ஆபரேஷன் செய்தனர். இப்போது நன்றாக இருக்கிறேன். இருந்தாலும், அந்த கட்டி மீண்டும் வயிற்றில் வந்து விடக்கூடாது என்பதற்காக, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். ஆனால், நான் தெருவில் போகும் போதும், வரும் போதும், என்னை ஒரு வினோத பிறவியை பார்ப்பது போல் பார்க்கின்றனர்.

என் அம்மாவிடம் சென்று, 'உங்க பெண்ணுக்கு கர்ப்பப்பையை எடுத்து விட்டீர்களா அல்லது கிட்னியையா அல்லது வேறு ஏதாவது காதல் விவகாரத்தில் குழந்தை உண்டாகி, கலைத்து விட்டீர்களா?' என்றெல்லாம் கேட்டு, புண்படுத்துகின்றனர். இதனால் என் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று என் பெற்றோர் கவலைப்படுகின்றனர்.

பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லையே என்று கவலைப்படும் பெற்றோருக்கு, ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நடக்காததை எல்லாம் நடந்ததாக கூறி, பிறரது துன்பத்தில் மகிழ்ச்சியடையும் இவர்கள், என்னுடைய மனக்கஷ்டத்தை உணர்வார்களா?

ஊர் பெயர் வெளியிட விரும்பாத ந.அர்ச்சனா.

தேவை தரமான நிகழ்ச்சி!



கடந்த வாரத்தில் ஒருநாள், சென்னை வானொலியின் பண்பலை அலைவரிசை ஒன்றை கேட்க நேர்ந்தது. காலை, 10:00 மணியிலிருந்து, 11:00 மணி வரை ஒலிபரப்பான, ஒருமணி நேர நிகழ்ச்சி அது.

அன்று, ஒரு தலைப்பை கொடுத்து, அதை பற்றி நேயர்கள் தனக்கு தெரிந்தவற்றை அறிவிப்பாளரோடு கலந்துரையாட வேண்டும்.

'ஈயடிச்சான் காப்பி என்றால் என்ன?' என்பதே, அன்றைய தலைப்பு. காப்பியடிப்பதற்கும், ஈக்கும் என்ன சம்பந்தம்? இந்த பெயர் எப்படி உருவானது? இந்த பயனுள்ள, இன்றைய வாழ்க்கைக்கு உபயோகமான தலைப்பை பற்றி, நேயர்கள் தொலைபேசி மூலம் கலந்துரையாட வேண்டும். இதைப்பற்றித்தான், ஒரு மணி நேரமாக விவாதித்தனர். நிகழ்ச்சியை கேட்பதற்கு, படு கேவலமாக இருந்தது.

பத்திரிகைத் துறைக்கு அடுத்து, சக்தி வாய்ந்த ஒரு மீடியா, வானொலி. அந்த வானொலியில் அதுவும், அரசாங்கத்தை சேர்ந்த வானொலியில், இப்படி ஒரு மொக்கையான நிகழ்ச்சியை, காது கொடுத்து கேட்க முடியவில்லை. அந்த ஒரு மணி நேரமும், நேயர்கள் போட்டி போட்டு போன் செய்து பேசினர். ஒரு நேயர், ஈயைப் பற்றி விலாவாரியாக பேசியது கொடுமையிலும் கொடுமை!

தனியார் எப்.எம்.,களில் தரமான, உபயோகமான பல நிகழ்ச்சிகள், நேயர் களுக்கு பரிசுகளோடு ஒலிபரப்பாகும் இந்நிலை யிலும், சென்னை வானொலி மட்டும், இப்படி எந்த உபயோகமும் இல்லாத நிகழ்ச்சிகளை வழங்கி, நேயர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறது. இந்த நிலை எப்போது மாறும்?

வே.விநாயக மூர்த்தி, சென்னை.

வேண்டாமே, 'டையபர்...!'



என் தோழியின் மகளுக்கு, துணையாக மருத்துவமனைக்கு சென்றேன். அவள் குழந்தையின் இடுப்பு பாகம், தொடையிடுக்கு எல்லாமே வெந்து போனாற்போல சருமம் சிவந்து இருந்தது. சின்னக் கை குழந்தைக்கு இப்படியாகக் காரணம் என்ன என்று எனக்கும் புரியவில்லை. குழந்தை பாத்ரூம் போகையில், வீறிட்டலறினாள். பரிசோதனை செய்த மருத்துவர், எல்லாம் கேட்ட பின், குழந்தையின் தாய்க்கு செம டோஸ் கொடுத்தார்.

காரணம் இதுதான்: குழந்தைக்கு தொடர்ச்சியாக டையபரை உபயோகித்திருக்கிறாள். அது தான், டையபர் மாட்டி விட்டுட்டோமே என்ற மெத்தனத்தில், குழந்தை நான்கைந்து முறை யூரின் போனதும், நிதானமாக மாற்றியிருக்கிறாள். காற்றாடவோ, துணியால் துடைத்தோ விடாமல், உடனே அடுத்தடுத்து மாட்டி விட்டிருக்கிறாள். இரவிலோ கேட்கவே வேண்டாம்.

இதனால், அந்த இடமே இன்பெக்ஷன் ஆகி, நோய் தொற்று ஏற்பட்டு, சிவந்து போய் இருக்கிறது. பொது இடங்களில் மற்றவர் முகஞ்சுளிக்காமல் இருக்கத்தான் டையபரே தவிர, இப்படி இடைவெளி­யின்றி உபயோகிக்க அல்ல என்று, மிகவும் கடுமையாக கடிந்து கொண்டார் மருத்துவர். அக்காலத்தில் பருத்திப் புடவைகளை நன்றாக துவைத்த பின் சதுரமாகவோ, முக்கோணமாகவோ, வெட்டியோ, தைத்தோ தான் குழந்தைக்கு உபயோகப்படுத்துவோம். ஈரமானதும் உடனே மாற்றி விடுவோம். அந்தத் துணிகளையும் நன்கு துவைத்து, வெந்நீரில் அலசி, டெட்டாலில் ஊற வைத்து, வெயிலில் காயப்போட்டு, சாம்பிராணி புகை காட்டி, மடித்து வைப்போம். இதை உபயோகித்து வந்தால், குழந்தைக்கும் சுகம். நமக்கும் சந்தோஷ திருப்தி.

இப்போதோ... டையபர் தான் வசதி என்று காசை கொட்டி வாங்கி, காசுக்கும் கேடு, சுகாதாரத்துக்கும் கேடு. உடல் நலத்துக்கும் கேடு வரவழைத்துக் கொண்டுள்ளனர். எதுவானாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு. அளவாய் அவசியத்துக்கேற்ப உபயோகியுங்கள்.

இன்றைய இளந்தலைமுறை தாய்மார்களே...கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்!

ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us