
ஓ... இந்த பள்ளிக்கூட மாணவியர்!
அலுவலகத்திற்கு, தினமும் பஸ்சில் பயணம் செய்யும் போது, பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் காதல் சேஷ்டைகளையும், கடித பரிமாற்றங்களையும், கண் ஜாடைகளையும் பார்க்கும்போது, மனதுக்குள் வேதனையும், கோபமும் தான் எழுகிறது. இளம் பூக்கள் இப்படி அறியாமையால் காதல் தீயில் கருகுவதை நினைக்கையில், இவர்கள் வயதை குறை சொல்வதா அல்லது பெற்றோரை குறை சொல்வதா என்றே தெரியவில்லை.
பெற்றோரே... டீன் ஏஜ் பிள்ளைகள், உங்களுக்கு இருந்தால், அவர்களது நடவடிக்கைகளை கவனியுங்கள். நீங்கள், 'டிவி' நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் நேரம், உங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதையும் கவனியுங்கள். அவர்கள் நன்றாக படிக்க வேண்டுமெனில், நீங்கள், 'டிவி'யை மறக்க வேண்டும்.
படித்த பெற்றோராயின், அவர்களது படிப்பில் உதவி செய்யுங்கள். அவர்களோடு தோழமையுடன் பழகி, காதலின், வெற்று கவர்ச்சியையும், அழிவையும், செக்சின் அடிப்படை தத்துவத்தையும் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளையும் நயமாக எடுத்துச் சொல்லுங்கள். இளமை பருவத்தில் கல்வியே சிறந்தது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். இதை சரியாக புரிந்து கொண்டால், உங்கள் பிள்ளைகள் காதல் எனும் மாய வலையில் சிக்கி, தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்ள மாட்டார்கள்.
— சவுந்தர்யா ராஜசேகர், கோவை.
சபாஷ்... சரியான ஐடியா!
என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது மேஜையில், பைல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 'அலுவலக பைல்களை வீட்டிற்கு கொண்டு வந்து பார்க்கிறீர்களா?' என கேட்டேன்.
'இல்லை. இதெல்லாம் வீட்டு சமாச்சாரம் தான்' என்று அவர் சொன்ன விஷயம் வியப்படைய வைத்தது. 'வீட்டு வரி, தண்ணீர் வரி, கரன்ட் பில், பிள்ளைகளின் அட்மிஷன், வரவு செலவு, வீட்டுக்கு வரும் அழைப்பிதழ்கள் என, எல்லாவற்றையும் தனித்தனியாக உறைகள் போட்டு, அவற்றின் மேலே, அதன் தலைப்பை எழுதி வைத்து விடுவேன். மேலும், கரன்ட் பில், வீட்டு வரி கட்ட வேண்டிய தேதி, போன்ற விஷயங்களை பென்சிலால் குறித்து வைப்பேன்.
'ஒவ்வொரு உறையிலும், அது தொடர்பான தபால்கள் வர வர, அவற்றை, 'டேக்' போட்டு இணைத்து விடுவேன். இதனால், எந்த பில்லை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் மேஜையில் வைத்திருப்பதால் பார்க்கவும், எடுக்கவும், வீட்டில் உள்ள அனைவரும் கையாள்வதற்கு எளிதாகவும் இருக்கிறது' என்றார்.
நண்பரின் யோசனையை நாமும் பின்பற்றலாமே!
— இளங்கோ, கரிமேடு.
ஒரே ஒரு வார்த்தை போதுமே...
கணவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, துடித்துப் போய், ஊண், உறக்கமின்றி, கண்ணை இமை காப்பது போல் கணவனுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்கின்றனர் பெண்கள். ஆனால், மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனில், உடனே, 'பணம் தருகிறேன் உங்க அம்மா வீட்டுக்கு போய் டாக்டரிடம் காண்பித்து, சுகமான பிறகு வா...' என கூறுகின்றனர் இந்த ஆண்கள்.
இது, எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்குள்ள அதே உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும்தானே, மனைவிக்கும் இருக்கும். தாலி கட்டியதிலிருந்து கணவரே தஞ்சம் என வந்து, கணவருடைய இன்ப, துன்பத்தில் பங்கெடுக்கும் மனைவிக்கு, உடல்நிலை சரியில்லை என்றதும், அவளை தாய்வீடு விரட்டப் பார்க்கிறீர்களே... இது நியாயமா?
'இப்போ, உடம்புக்கு எப்படிம்மா இருக்கு?' என்று ஒரு வார்த்தை ஆறுதலாக கேட்டாலே போதுமே... நோய் பறந்து போகும் அவளிடமிருந்து. அதை விடுத்து, பிறந்த வீட்டிற்கு போகச் சொல்லும் பண்பற்றவர்களாக நடந்து கொள்ளாதீர்கள்.
— வி.முருகலெட்சுமி, மதுரை.

