
அம்மா எனக்கு வயது 30. நான் பிளஸ்2, டைப்பிங் முடித்துள்ளேன். என் கணவருக்கு வயது 38. அரசு வேலை. எங்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிறது. ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அதிபுத்திசாலி. அப்பா - அம்மா மீது மிகுந்த பாசத்துடன் இருப்பான்.
என் கணவருக்கு தூரத்து சொந்தமான அக்காவுக்கு திருமணம் ஆகி, 10 வருடங்கள் ஆகின்றன. அவருடைய கணவருக்கு வேலை இல்லை. இரண்டு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். என் கணவர் திருமணத்திற்கு முன்பிருந்தே அக்காவின் குடும்பத்துக்கும் பண உதவி செய்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகும் உதவி செய்தார். நானும் இது பற்றி எதுவும் கேட்பதில்லை. என் மீதும், என் குழந்தை மீதும் பிரியமாக இருந்ததால், திருமணத்திற்கு பிறகு பண உதவி குறைந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர் அக்கா, என்னை அவரிடம் இருந்து பிரிக்க திட்டமிட்டார். எங்களுடனேயே அவருடைய குடும்பத்தையும் இணைத்து, ஒரே குடும்பமாக இருப்போம் என்று நயவஞ்சகமாக பேசி உள்ளே நுழைந்து விட்டார்.
என்னுடைய பிறந்த வீடு ஏழ்மையில் இருந்தது. அங்கு இருந்து எந்த உதவியும் எனக்கு இல்லை. இதை பெரிதுபடுத்தாத என் கணவரிடம், இல்லாததையும், பொல்லாததையும் கதை கட்டிவிட்டு, என்னிடம் சண்டை போடச் சொல்வார். நானும் பதிலுக்கு, 'உங்கள் அக்காவின் பேச்சைக் கேட்டு என்னிடம் சண்டை போடாதீர்கள்...' என்று பேசுவேன். இப்படியாக சிறு சிறு சண்டை வந்து, அடி, உதை என்று என் உடம்பில் காயம்படும்படி சண்டை வலுத்தது.
என் பிள்ளை மேல் பாசமாக இருப்பது போல் நடித்து, 'பாருடி... ஒரு நாளாவது என் பிள்ளைக்கு இப்படி சோறு போட்டிருப்பியா?' என்று பிள்ளைப் பாசத்தையும் சந்தேகப்பட வைத்தார். என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் என் கணவர். சாப்பாடு கூட அவருடைய அக்காதான் போடுவார். என் மேல் வெறுப்பு அதிகமானது. நான் நடைப்பிணமானேன். வெளியில் யாருடனும் பேசக் கூடாது. வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். என்னிடம் வரும்போது நான் கொஞ்சி மகிழ வேண்டும். மற்ற நேரங்களில் அவர்களோடுதான் இருக்க வேண்டும்.
நான் ஏதாவது எதிர்த்து பேசினால், 'உன் அப்பன் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு வாங்கி வா...' என்றும், '10 ஆயிரம் ரூபாய் வாங்கி வா...' என்றும் அடித்து கொடுமைப்படுத்துவார். நான் ஒரு அடிமையாக இருக்க வேண்டும் என்கின்றனர். என் கணவர் பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. அவ்வளவு அசிங்கமாக பேசுகிறார். அவர் அக்காவுக்கு இப்பொழுது சந்தோஷம் தாங்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறார்.
'என்னை விவாகரத்துசெய்து விடுங்கள். எதற்கு இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டால், 'நான் உன்னை கட்டிப் போட்டா இருக்கேன், நீயாக என்னை விவாகரத்து செய்து ஓடி போ...' என்று அடிக்கிறார்.
இந்த பிரச்னையிலிருந்து மீள எனக்கு வழி சொல்லுங்கள். போலீசுக்கு போகலாம் என்றால், எனக்கு எந்த உதவியும் கிடையாது. ஆள் பலமோ, பண பலமோ கிடையாது. என் கணவர் வீட்டில் ஆள் பலம் அதிகம். என்னுடைய இந்த பிரச்னைக்கு வழி சொல்லுங்கள். என் கணவரை இழந்த நான், என் பிள்ளையையும் இழக்க விரும்பவில்லை, எனக்கு வேலையும் இல்லை. என் கணவரை பிரிந்து என் பிள்ளையுடன் தனியாக வாழ நினைக்கிறேன். அதற்கு என்ன வழி. அரசாங்க உதவி எனக்கு கிடைக்குமா? என் பிள்ளையை நானே நல்ல முறையில் வளர்க்க ஆசைப்படுகிறேன். எனக்கு நல்ல வழி கூறுங்கள்.
— இப்படிக்கு
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கண்டேன்.
கூடாரத்துக்குள், ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தவன் கதையை நீ கேள்விபட்டிருப்பாயே... அது போலத்தான் இதுவும். சரி... அதற்காக நீ ஏன் விவாகரத்து செய்ய வேண்டும்? உன் கணவரின் ஒன்றுவிட்ட அக்காவா... யாரவள்... முதலில் அவளையும், அவள் குடும்பத்தையும் வெளியேற்றும் வழியைப் பார்.
வழக்கறிஞரைப் பார்த்தால், உடனே விவாகரத்துக்கு வழக்குப் போடத் தான் என்று யார் சொன்னது? உன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும், நீ அந்தப் பெண்ணின் மீதும், உன் கணவர் மீதும் வழக்குப் போடலாம். உனக்கு உரிமை இருக்கிறது.
'அதெல்லாம் அவளை வெளியே துரத்த முடியாது... அவளுடன் சேர்ந்துதான் நீ இருந்தாக வேண்டும்...' என்று உன் கணவர் கூறினாலோ அல்லது 'நான் உன்னை, 'டைவர்ஸ்' பண்ண மாட்டேன்... நீ வேண்டுமானால் கோர்ட்டுக்குப் போ...' என்று கூறினாலோ, ஒரு வழக்கறிஞரை வைத்து, விவாகரத்து இல்லாமல் தனியாகப் பிரிந்து வாழப் பார்.
அதாவது, உன் கணவர், அந்த மகராசியுடனேயே இருக்கட்டும். நீயும், உன் பையனும் தனியாக இருக்க வீடு பார்த்துக் கொடுத்து, சாப்பாடு, வாடகை, குழந்தைக்குப் பள்ளிச் செலவு ஆகியவற்றை அவர் ஏற்றுக் கொள்ளட்டும். எக்காரணத்தைக் கொண்டும் குழந்தையை விட்டுக் கொடுக்காதே. தனியாகப் போய் இருப்பதற்கு ஆகும் செலவை, மாதா மாதம் உன் வழக்கறிஞரிடம் கொடுத்து விடச்சொல். பலர், ஆரம்பத்தில், 'அதெல்லாம், நானே நேரில் கொண்டு வந்து கொடுக்கிறேன்...' என்பர்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு மெதுவாக நிறுத்தி விடுவர். அப்பொழுது மறுபடியும் வழக்கறிஞரைத் தேடி ஓட வேண்டும். இப்படி, நேரே கோர்ட்டிலோ, வழக்கறிஞரிடமோ பணத்தை உன் கணவர் ஒப்படைத்து, அவர்கள் மூலமாகப் பெற்றால், நடுவில் பணம் கொடுப்பது நின்றாலும், உடனே ஒரு கடிதத்தை உனக்காக உன் சார்பில் வழக்கறிஞர் அனுப்புவார்.
இதற்காக நீ பணம் செலவழிக்க வேண்டியது இல்லை.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கான இலவச சட்ட உதவி மையம் இருக்கிறது. அதன் மூலம் ஏற்பாடு செய்யலாம். இதை எதற்காக கூறுகிறேன் என்றால், இப்படி விவாகரத்து இல்லாமல் மனைவி, குழந்தையைப் பராமரிக்க ஒரு மனிதன், அதற்கு ஆகும் செலவைக் கொடுத்தே ஆக வேண்டும். இது அதிக நாளைக்கு முடியாது... எத்தனை நாளைக்குத்தான் உன் புருஷன் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய முடியும்?
எப்படியும் அக்கா குடும்பம்தான் வேண்டும் என்று அவர் தீர்மானித்தால், அவரே, உன்னை விவாகரத்து செய்வதாக, தன் சொந்த செலவில் வழக்கு போட வேண்டும். அப்பொழுது, உன் கணவர் சார்பில் உனக்கு வக்கீல் நோட்டீஸ் வரும். அதில் இல்லாதப் பொல்லாத காரணங்களை எல்லாம் காட்டி (பல சமயங்களில், மனைவி மூளை சரியில்லாதவள் என்றும், வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என்றும் நான் கூசாமல் பழி சுமத்துவர்.) உன்னை கோர்ட்டுக்கு அழைப்பர்.
ஆனால், நீ மட்டும் உறுதியாக இருக்க வேண்டும். நீதிபதி, உன்னைப் பார்த்து, 'நீ என்ன சொல்கிறாய்?' என்று கேட்டால், 'எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். இவ்வளவு வருடங்கள் அன்பாகச் சேர்ந்தும் வாழ்ந்தோம். அவருடைய தமக்கையை வீட்டை விட்டு அனுப்பச் சொல்லுங்கள். நான், என் குழந்தை, அவர் மூவரும் சேர்ந்து வாழ வழி செய்யுங்கள்...' என்று திடமாய், உறுதியாய் கூறு.
ஒரு பெண்ணிடமிருந்து வற்புறுத்தியோ, பலாத்காரப்படுத்தியோ, விவாகரத்துக்கு கையெழுத்து வாங்க முடியாது. அப்படி வாங்க வேண்டுமென்றால், நான் முன் கூறியது போல அபாண்டங்களைச் சுமத்தி, அதை நிரூபித்து, பின்னரே வாங்க முடியும். இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, உன் கணவரும், நாத்தியும், உன்னை பிறந்த வீட்டிற்குப் போய், அரிசி, பருப்பு, பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கி வரச் சொல்லி அடித்தனர் என்று எழுதியிருக் கிறாயே... என்ன பெண்ணம்மா நீ? இந்த காலத்தில், நல்ல மாதிரியானக் கணவர், மாமியார், மாமனார்களையே, வரதட்சணைக் கொடுமை செய்ததாகக் கூறி பல பெண்கள் போலீசில் புகார் கொடுத்து விடுகின்றனர்.
பெண்களுக்காக பல சலுகைகளை நம் சட்டம் அளித்திருக்கிறது கண்ணம்மா. அநியாயங்களும், அநீதிகளும் ஏற்படும்போது, தாராளமாக இந்த சட்டத்தையும், காவல் துறையையும் நீ நாடலாம். நம் நன்மைக்காக உள்ள சுதந்திரத்தை நாம் தவறான முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடாது.
இனியொரு முறை அடித்தாலோ அல்லது 'பெற்றோரிடம் போய் விடு. அதைக் கொண்டா இதைக் கொண்டா...' என்று உன் கணவரும், நாத்தியும் உன்னைச் சித்ரவதை செய்தால், 'விருட்'டென எழுந்திரு. புடவையை உதறி, முந்தானையை இறுகக்கட்டு. குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள். முன் ஜாக்கிரதையாய், வீட்டு வாசலுக்கு வந்து நின்று, அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் காதில் விழும்படியாக இரைந்து சொல்: 'என்ன ஓட ஓட விரட்டறீங்க... நான் இப்பவே போலீசுக்குப் போய், உங்க ரெண்டு பேர் மேலயும், வரதட்சணை கேட்டு, அடிச்சு கொடுமைப்படுத்தறதா புகார் கொடுக்கப் போறேன். கைக்கு காப்பு வரும். தயாரா இருங்க...'
— இப்படிச் சொல்லி விட்டு, 'விடு விடு'வெனப் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் நடையைக் கட்டு. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் புரிந்து கொள்வர். யோசிக்காதே... பயப்படாதே... செய்... இதற்குப் பிறகு என்ன நடக்கிறதோ... எழுது. வேலையோ, அடைக்கலமோ பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒண்ட வந்ததை அடித்து விரட்டு. பயந்து சாகாதே. வாழ்வது ஒரு தடவைதான். மரணம் பற்றி சிந்திப்பது அபத்தம். வாழ்வதற்காக போராடலாம். என் வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

