
பாதுகாப்பானது கூட்டுக் குடும்பமே!
எங்கள் பக்கத்து வீட்டு பெண்ணின் கணவர், 40 வயதிலேயே இறந்து விட்டார். இதில் என்ன ஆச்சரியமென்றால், கணவன் இறந்த போது இருந்த துயரம், சில மாதங்களிலேயே அந்த பெண்ணிடம் நீங்கி விட்டது. காரணம், பதினைந்து உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தில், அவர் வாழ்ந்து வந்தது தான்!
அந்த பெண் சோர்வுரும் போதெல்லாம், அவ்வீட்டில் உள்ளவர்கள், பல்வேறு ஆறுதல் வார்த்தை கூறுவதுடன், 'விடும்மா... அவனோட ஆயுசு அவ்வளவு தான்; போனவன நினைச்சு வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது... உனக்கு நாங்க இருக்கோம்; உன்னை கண் கலங்காம பாத்துப்போம்...' என்று கொடுத்த உற்சாக வார்த்தைகள் தான் அவளது துயரத்தை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
அத்துடன், உணவு மேஜையில் அனைவரும் ஒன்றாக கூடி உண்பதும், ஒரே அறையில் உள்ள, 'டிவி'யில் அனைவரும் நிகிழ்ச்சியை கண்டு களிப்பதும், பண்டிகை நாட்களில் அனைவரும் கலந்து உற்சாகமாய் கொண்டாடி மகிழ்வதும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் டூர் செல்வதும் என, தனிமையும், பாதுகாப்பற்ற உணர்ச்சியும் ஏற்பட வழியில்லாமல் செய்து விட்டது.
இதே தனிக்குடித்தனம் என்றால், பெரிதான கல்வி தகுதி இல்லாத அப்பெண், வாழ வழியின்றி, ஏதேனும் கம்பெனியில் சொற்ப சம்பளத்துக்கோ, கூலி வேலைக்கோ போய், வாழ்க்கையுடனும், துஷ்டர்களுடனும் போராட வேண்டியிருப்பதுடன், ஆறுதல் சொல்ல ஆளின்றி, தனி ஆளாய் தவிக்க வேண்டியிருக்கும்.
எனவே, கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவர்கள், எக்காரணம் கொண்டும் அந்த அழகிய கோலத்தை கலைத்து விடாதீர்கள்.
— கே. ஜெகதீசன், இடையர் பாளையம்.
ஆசிரியையின் சமயோசிதம்!
ஒன்றாம் வகுப்பு படிக்கும் பேரனை, தினமும் பள்ளிக்கு கூட்டிச் சென்று, அழைத்து வருவது என் வழக்கம்.
சமீபத்தில், அவனை வகுப்பறையில் கொண்டு விடும் போது, அவன் ஆசிரியை, மாணவர்களை பார்த்து, 'குழந்தைகளே... இதோ பாருங்கள்... இங்கே ஒரு ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கு; நீங்க யாராவது அடுத்தவங்க பென்சிலையோ, வேறு பொருட்களையோ எடுத்தீங்கன்னா அது இந்தக் கேமராவுல பதிவாயிடும்; அப்புறம், அதைப்பார்த்து நம்ம தலைமை ஆசிரியை, பொருளை எடுத்தவங்களுக்கு தண்டனை கொடுப்பாங்க. அதனால, யாரும் அடுத்தவங்களோட பொருளை எடுக்கக் கூடாது. அது தப்பு...' என்று கூறிக் கொண்டிருந்தார். அங்கு ஒரு, 'டம்மி' கேமரா தான் இருந்தது.
இரண்டு வாரங்களுக்கு பின், என் பேரனிடம், 'முன்னெல்லாம் தினம் ஒரு பென்சிலை தொலைச்சுட்டு வருவீயே... இப்ப, பென்சில், ரப்பர் எல்லாம் தொலைஞ்சு போகாம இருக்கா?' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'இருக்கு பாட்டி. கீழே ஏதாச்சும் பொருள் கிடந்தா, நாங்க அதை எடுத்து, 'மிஸ்' மேஜையில வைச்சிடுவோம். அவங்க, அது யாருதுன்னு கேட்டு கொடுத்துடுவாங்க. இப்பல்லாம் எங்க வகுப்புல யாருடைய பொருளும் காணாமல் போறதே இல்ல...' என்றான்.
இதைக்கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியையின் சமயோசித நடவடிக்கையால், அக்குழந்தைகள் அடுத்தவர் பொருளை எடுக்கக் கூடாது எனும் நல்ல பழக்கத்தை கடைபிடிக்கின்றனர் என்பது நல்ல விஷயம் தானே!
— எம்.விஜயலட்சுமி. மதுரை.
ஏமாற்றுவதில் இது புதுவிதம்!
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நான், மாலை, அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்ப, பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எதிரே, நவநாகரிக உடை அணிந்த இளைஞன் ஒருவன், இரு சக்கர வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்தான். நான் அவனை கடந்த போது, 'மேடம்... என் பர்ஸ் மிஸ் ஆகிடுச்சு; பெட்ரோல் போடணும், 100 ரூபா வேணும். கொஞ்சம் உதவி செய்யுங்க...' என்று கேட்டான். எனக்கு இவன் பொய் சொல்கிறானா, உண்மை சொல்கிறானா என்று புரியவில்லை. சற்று யோசித்த பின், 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை...' என்று சொல்லி, வேகமாக சென்று விட்டேன். ஆனால், மனதிற்குள், 'உதவி செய்து இருக்கலாமோ...' என்று தோன்றியது.
மறுநாள், என் தோழியிடம் இது பற்றி சொன்ன போது, 'சில நாட்களுக்கு முன், இதே போன்று தான் என்னிடமும் ஒரு இளைஞன் கேட்டான்...' என்றாள்.
அப்பதான் புரிந்தது... இது ஒரு ஏமாற்று வேலை என்று!
ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக் கிறாங்க பாருங்க!
பெண்களே... உஷாராய் இருங்கள்!
- வி.வாசுகி, சென்னை.

