
மறுமணம் அவசியம்!
என் தோழியின் சகோதரி, இளவயதிலேயே கணவனை இழந்தவர். தற்போது, 34 வயதாகும் அவருக்கு, 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதை, தன் பெற்றோரிடம் ஜாடை, மாடையாய் கூறியுள்ளார்.
அதற்கு அவரது பெற்றோர், 'இத்தனை வருஷத்துக்குப் பின், உனக்கு இப்படி ஒரு கேவலமான எண்ணம் வந்திருக்க வேணாம். இன்னும் 10 வருஷத்துல, உன் மகனுக்கு கல்யாணம் செய்யணும். நீ இப்படி நினைக்கலாமா...' என்று திட்டியுள்ளனர். அப்பெண்ணும் வாய் திறக்கவில்லை.
சிறிது நாட்களில், பக்கத்து வீட்டில் வசித்த கல்லூரி மாணவனின் நட்பு கிடைத்திருக்கிறது. இருவரும் நெருங்கிப் பழகவே, பெற்றோரும் நேரில் பார்த்து விட, இரு குடும்பத்துக்கும் இடையே பெரிய சண்டை. விஷயம் வெளியில் தெரிந்து, பெற்றோருக்கு அவமானமாகி விட்டது. பெற்றோரின் கடுமையான திட்டுக்களால் அப்பெண், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின், காப்பாற்றப்பட்டார். அவமானம் தாங்க முடியாமல், தற்போது, வேறு இடத்திற்கு குடி பெயர்ந்துள்ளனர் தோழியின் குடும்பத்தார்.
சரியான நேரத்தில் அப்பெண்ணிற்கு மறுமணம் செய்து வைத்திருந்தால், இப்படி ஒரு அவமானம் அக்குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்காது.
கணவனை இழந்தோருக்கு மறுமணம் செய்து வைப்பதில், எந்த கேவலமும் இல்லை. அவர்களுக்கும் உணர்வுகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் பெற்றோரே!
- சுஜாதா பாலகணேஷ், மதுரை.
கேஸ் ஏஜன்சிகள் கவனிக்குமா?
கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் போது, கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அதை, வீட்டில் இருந்து பெற முடியாத சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், மும்பையில் இப்படி வேலைக்கு செல்வோருக்காகவே, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், கேஸ் சிலிண்டர் சப்ளை செய்கின்றனர். வாடிக்கையாளர் அட்டையில், 'வார இறுதி நாட்களில் வினியோகிக்கவும்...' என்று முத்திரை குத்தி, அலுவலக பதிவேட்டிலும் பதிவு செய்து விடுகின்றனர். நம் ஊர் கேஸ் ஏஜன்சிகளும், இதை பின்பற்றலாமே!
— ஆர்.கங்கா, கீரமங்கலம்.
இளம் பெண்ணுக்கு வந்த, 'பலான' புத்தகம்!
கடந்த வாரம், நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த போது, வீட்டினர் அனைவரும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். 'என்ன?' என்று விசாரித்ததில், 'பலான' புத்தகம் ஒன்று நண்பனின் தங்கை பெயருக்கு கூரியரில் வந்திருக்கிறது. தங்கை வீட்டில் இல்லாததால், பணம் கட்டி புத்தகத்தை வாங்கிய நண்பர், பிரித்துப் பார்த்ததும், அதிர்ச்சியடைந்து விட்டார்.
நண்பரின் தங்கையோ, தனக்கும், இப்புத்தகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்குவதற்குள் படாதபாடுபட்டு விட்டார். யாரோ வேண்டாதவர்கள், நண்பரின் வீட்டு விலாசத்தை தெரிந்து, பதிப்பகத்துக்கு எழுதி, புத்தகம் அனுப்பச் சொல்லியுள்ளனர்.
ஜாலியாக கிண்டல் செய்வதற்கு, எத்தனையோ வழிகள் இருக்கிறது. அதை விட்டு விட்டு, இப்படியா மனம் பாதிக்கப்படும்படி செய்வது!
நண்பனின் தங்கை மற்றும் குடும்பத்தினர் அடைந்த வேதனையை நேரில் பார்த்து மனம் நொந்து சொல்கிறேன்... இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலை செய்யாதீர் இளைஞர்களே!
— பி.தினேஷ் குமார், சென்னை.