PUBLISHED ON : ஜூலை 30, 2017

இப்படியும் யோசிக்கலாமே!
சில மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்த என் நண்பனும், அவன் மனைவியும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். என் மனைவியிடம், நண்பனின் மனைவி, 'அக்கா... என் கணவர் தனிக்குடித்தனம் போகலாம்ன்னு ஓயாம சொல்றாரு; உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி, வேண்டாம்ன்னு சொல்ல சொல்லுங்க; அவரு சொன்னா கேட்பாரு...' என்றிருக்கிறார். இதை, அவர்கள் சென்ற பின், என்னிடம் கூறினாள், என் மனைவி.
மறுநாள், நண்பனை சந்தித்து, 'என்னடா... உனக்கு புத்தி பேதலிச்சு போச்சா... தனிக்குடித்தனம் போகலாம்ன்னு சொல்றியாமே... உன் மனைவி ரொம்ப வருத்தப்பட்டு, என் மனைவிகிட்ட சொல்லியிருக்காங்க...' என, கண்டிக்கும் தோரணையில் கேட்டேன்.
அதற்கு அவன், 'அது ஒண்ணுமில்லடா... நானும், எங்க அண்ணனும் ஒரே வீட்டில் கீழேயும், மாடியிலேயும் இருக்கோம். ஒருநாள் எங்கம்மாகிட்டயும், அண்ணிகிட்டேயும் இவள் கடுமையா பேசினத பாத்தேன். பாவம் சின்னபுள்ள தானே... போக போக சரியாயிடும்ன்னு நினைச்சாலும், அவகிட்ட, 'உனக்கு ஒத்துவரலைன்னா சொல்லு; நாம தனியா வாடகைக்கு வீடு எடுத்து தங்குவோம். வருமானம் பத்தலைனா, உங்க அப்பா பாத்துக்குவார்'ன்னு ஒரு குண்டை தூக்கி போட்டேன். இதை எதிர்பார்க்காத அவள் ஆடிப்போயிட்டா... அதோட, கூட்டு குடும்பத்தில் இருக்கிற நல்ல விஷயங்களையும் புரிஞ்சு, தன்னை மாத்திக்கிட்டா. மற்றபடி, தனியா போகணும்ங்கிற எண்ணம் எனக்கு இல்ல...' என்றான்.
மனைவி ஒரு விஷயத்தை பிரச்னையாக்கி பெரிதுபடுத்துவதற்கு முன், நாமே அதை தெளிய வைக்கலாம். சமயத்தில், இதுபோன்ற, 'உல்டா' சிந்தனைகளும் கை கொடுக்கும். இடம், பொருள் பார்த்து காயை நகர்த்துங்கள்; நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
— அ.ஜோசப், மதுரை.
சபாஷ் போஸ்ட் மாஸ்டர்!
கார்டு, கவர் வாங்க, தபால் நிலையம் சென்றிருந்தேன். அங்கிருந்த போஸ்ட் மாஸ்டர், 'சார்... இந்த நோட்ல உங்க பெயர், முகவரி எழுதி, மொபைல் நம்பர் மற்றும் லேண்ட் லைன் நம்பர் இரண்டையும் எழுதுங்க...' என்றார்.
'எதுக்கு சார், இதெல்லாம்?' என்று கேட்டேன். 'இன்டர்வியூ தபால், வங்கியிலிருந்து வரும் நகை ஏல நோட்டீஸ், பாஸ்போர்ட், பான் கார்டுன்னு முக்கியமான தபால் எதுவும் வந்தா, உடனே உங்களுக்கு தகவல் தருவேன். அப்போ, நீங்க எங்கே இருந்தாலும், உடனே புறப்பட்டு வந்து வாங்கிக்கலாம்ல... ஏதோ நம்மால முடிஞ்ச உதவி. இதனால், எனக்கு ஒண்ணும் பெரிசா செலவு கிடையாது; ரேட் கட்டர் இருக்கு; ஒரு காலுக்கு பத்து பைசா, இருபது பைசா தான் ஆகும்...' என்றார்.
ஒண்ணாந்தேதி பிறந்தால் சம்பளம் என்று நினைக்கும் அரசு ஊழியர்கள் மத்தியில், இவரைப் போன்ற நல்ல மனம் கொண்டவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.
—மருத.வடுகநாதன், வேதாரண்யம்.
கல்லூரியில் சேர, சமூக சேவை அவசியம்!
சமீபத்தில், என் உறவினர் குடும்பம், அமெரிக்காவிலிருந்து, எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களின் மூத்த மகன், பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறான். அவனிடம், அமெரிக்காவின் கல்வி முறை பற்றி கேட்டேன்; அவனும், மிகவும் பொறுமையுடன் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டான்.
அதில் ஒன்றை கேட்டவுடன், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதாவது, அங்கு கல்லூரியில் சேரப் போகும் ஒவ்வொரு மாணவனும், முதியோர் இல்லம், சிறுவர் காப்பகங்கள் அல்லது ஏதாவது பொதுசேவையில், மொத்தம், 200 மணி நேரங்களாவது சேவை செய்திருக்க வேண்டும்.
அந்த மையங்கள், மாணவர்கள் செய்த சேவையை பாராட்டி, 'இந்த பிள்ளை எங்கள் சேவை மையத்தில், இத்தனை மணி நேரம் உதவி புரிந்தான்...' என்று, ஒப்புதல் சான்றிதழ் ஒன்றை வழங்கும். இப்படி கிடைத்த சான்றிதழ்களை சேகரித்தால், மொத்தம், 200 மணி நேரம் இருக்க வேண்டும். கல்லூரியில் சேர்வதற்கான தகுதிகளில், இதுவும் கட்டாயத் தகுதி என்று கூறிய போது, வியந்தேன்.
நம் நாட்டிலும், இத்தகைய முறையை பின்பற்றினால், பெற்றோர் பேச்சை கேட்காத குழந்தைகள் கூட, தங்களுக்கு கிடைத்திருக்கும் சுகமான வாழ்க்கையை உணர்ந்து, பொறுப்பு மற்றும் பணிவுடையவர்களாக மாறுவர்; மூத்தோரிடம் மரியாதையுடன் பழகுவர்; சேவை செய்வதால் கிடைக்கும் பாராட்டும், மன மகிழ்ச்சியும், அவர்களை மீண்டும் பொதுசேவையில் ஈடுபட தூண்டும்.
இச்சிறு மாற்றம், எதிர்காலத்தில் பொறுப்பும், மனிதநேயமும் உடைய நல்ல சந்ததியினரை உருவாக்கும். கல்வி அமைப்புகள் இதை செயல்படுத்த முன் வருமா!
— நாராயணி சூர்யகாந்த், சென்னை.
