
செயற்கை பல் தந்த விபரீதம்!
சில மாதங்களுக்கு முன், என் தோழிக்கு திருமணம் நடந்தது. கல்லுாரியில் படிக்கும்போது, கீழே விழுந்து அடிபட்டதில், முன்பக்க பல் ஒன்று உடைந்து விழ, அதற்கு பதில், செயற்கை பல் பொருத்தியிருந்தாள், தோழி.
அப்பல்லை கழற்றி, சுத்தம் செய்தபோது, அதை கவனித்த அவள் கணவர், 'ஏன் இந்த விஷயத்தை மறைச்சீங்க...' எனக் கேட்டு, சண்டை போட்டிருக்கிறார்.
தரகரிடம், இதுபற்றி முன்பே கூறியுள்ளதாக தோழி எவ்வளவோ சொல்லியும், அவள் கணவர் நம்பவில்லை. விளைவு, புதுமண தம்பதியருள் பிரிவு!
சிறு விஷயம் கூட பெரும் துயரைக் கிளப்பி விடும் என்பதற்கு, இது உதாரணம். மாப்பிள்ளை வீட்டாருக்கு, தரகர் இதைத் தெரிவிக்காததால், என் தோழிக்கு தான் கஷ்டம்.
ஆண்களே... சிறு பிரச்னைகளை, 'அட்ஜஸ்ட்' பண்ணி, ஏற்கும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; அப்போது தான் வாழ்க்கையில் வசந்தம் வீசும்!
— கீதா சங்கரன், காஞ்சிபுரம்.
பாராட்டுக்குரிய நண்பர்!
வெளிநாட்டில் தொழில் செய்யும் என் பால்ய நண்பர், ஆண்டுக்கு இரு முறை சொந்த ஊருக்கு, வருகை தருவார்.
ஆரம்ப பள்ளியிலிருந்து, கல்லுாரி வரை, தன்னோடு படித்த நண்பர்களின் பட்டியலை எப்போதும் தன் வசம் வைத்திருப்பார். அதில், யார் வசதியாக இருக்கின்றனர், யார் கஷ்டப்படுகின்றனர் என்ற விவரத்தை குறித்து வைத்திருப்பார்.
ஊருக்கு வருவதற்கு முன், இம்முறை, யாருக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, வருவார். அதன்படி, துளியும் பிசகாமல், உதவிகளை செய்து, சம்பந்தப்பட்டோரை சந்தோஷப்படுத்தி விட்டு திரும்புவார். ஆனால், யாருக்கு, என்ன உதவி செய்தார் என்பது பரம ரகசியம். வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரியக் கூடாதாம்!
உயர்ந்த நிலைக்கு சென்றாலும், பால்ய நண்பர்களை மறக்காமல், அவர்களின் துன்பங்களைத் துடைத்தெறிவதை தன் கடமையாக எண்ணி செயல்புரிந்து வரும் நண்பர் பாராட்டுக்குரியவர் தானே!
— தி.கதிரேசன், விருதுநகர்.
கைபேசியால் நேர்ந்த விபரீதம்!
பணி நிமித்தமாக மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் வெளியூரில் வசிக்கும் என் நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் ஒருநாள் வாய்ச்சண்டை ஏற்பட்டு, இருவரும் மாறி மாறி குடும்ப நபர்களை திட்டியுள்ளனர். அப்போது, மொபைல் போனில், 'கேம்' விளையாடிய நண்பரின் மகன், பக்கத்து வீட்டு குழந்தைகள் வெளியே விளையாடும் சத்தம் கேட்டதும், போனை, சோபா மீது வீசி விட்டு ஓடி விட்டான். 'ஸ்மார்ட் போன்' என்பதால், மோதிய வேகத்தில், அழைப்பு போய் விட்டது; எதிர்முனையில், நண்பனின் தாய் போனை எடுத்துள்ளார். மறுமுனையில் மகனும், மருமகளும் காரசாரமாக சண்டை போடும் சத்தம் கேட்டு, அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், அப்பெண், மாமியாரை மரியாதை குறைவாக திட்டியதை கேட்டு, 'நேரில் பார்க்கும் போது, பாசமாக நடந்து கொண்ட மருமகளா இப்படி பேசுகிறாள்...' என, வேதனைப்பட்டு போனை வைத்து விட்டார்.
ஒரு வாரம் கழித்து, தன் அம்மாவுக்கு போன் செய்து, 'அம்மா நல்லா இருக்கியா... நாளைக்கு ஊருக்கு வர்றேன்; உனக்கு என்னம்மா வாங்கிட்டு வர...' என்று பாசமாக கேட்டுள்ளான், நண்பன். உடனே, 'போதுமடா சாமி... உங்க உதவி எதுவும் வேணாம்; நானே பாத்துக்கிறேன்...' என கூறியதை கேட்டு, 'ஏம்மா இப்படி பேசுறே... என்னாச்சு உனக்கு...' என கேட்டுள்ளான்.
அப்போது பார்த்து, போனை வாங்கிய அவன் மனைவி, 'அத்தை நல்லா இருக்கீங்களா?' என கேட்கவே, அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தி, 'போதுமடி அம்மா உன் நடிப்பு... கிராமத்து மனுஷங்களான நாங்க எல்லாம் கள்ளம் கபடமறியாத, வெள்ளந்தியா தான் இன்னும் இருக்கிறோம்; உன்னை மாதிரி வேஷம் போடவெல்லாம் எனக்கு தெரியாது...' என, கூறியதை கேட்டு, அதிர்ச்சி அடைந்துள்ளார், நண்பரின் மனைவி.
'ஏன் அத்தை இப்படி பேசுறீங்க...' என்று கேட்ட போது, 'போன வாரம் நீங்க ரெண்டு பேரும் சண்டை போடும் போது பேசிய எல்லாத்தையும் தான் போனில் கேட்டேனே...' என்று கூறிய பின் தான், தங்கள் தவறை உணர்ந்துள்ளனர், இருவரும்.
குழந்தைகளிடம் மொபைல் போன் தருவதை தவிர்க்கவும். இல்லாவிட்டால், இதுபோன்ற சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும்!
—க.ராஜா, சேலம்.

