PUBLISHED ON : ஜூலை 08, 2018

பொறுப்பான மாணவி!
உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்றபோது, உறவினரின் மகள், புதிதாக தைக்கப்பட்ட சட்டைகளுக்கு, காஜா எடுத்து, பட்டன் கட்டிக் கொண்டிருந்தாள்.
அதை கவனித்த நான், அவளிடம், 'என்னம்மா... இந்த ஆண்டு, நீ பதினோராம் வகுப்பு தானே... ஸ்கூலுக்கு போறீல்ல...' எனக் கேட்டேன்.
அதற்கு அவள், 'ம்... போறேன் மாமா... ஸ்கூலுக்கு போயிட்டு வந்து, வீட்டுப் பாடமெல்லாம் முடிச்ச பின், மீதி நேரத்துல இந்த வேலையை செய்யறேன்... பக்கத்துல இருக்கற டெய்லர் கடையிலேர்ந்து தைத்த துணிகளை கொண்டு வந்து கொடுத்துட்டு போவாங்க... நிறைய பேரு, மிஷின்ல போடுற காஜா, தைக்கிற பட்டன் எல்லாம் சீக்கிரம் வீணாயிடுதுன்னு, கையால தைக்கணும்ன்னு சொல்றாங்களாம்... நான், காஜா, எம்மிங் மற்றும் பட்டன் எல்லாம் கட்டி வெச்சிருவேன்...
'தினமும் வேலையை முடிச்ச உருப்படிகளை எடுத்துட்டு போவாங்க... வாரா வாரம், கணக்கு பார்த்து, மொத்தமா கொடுப்பாங்க; வாரம், 500 ரூபாய்க்கு மேல வரும்... அது, என் படிப்பு செலவுக்கு கை கொடுக்குது. கூலி வேலை பார்க்கற என் பெற்றோருக்கு, என் வருமானம் கொஞ்சம் ஆறுதலா இருக்கு...' என்றாள்.
இந்த சின்ன வயதிலும், குடும்பத்தின் மீது அவளுக்கு இருந்த அக்கறை, என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
— மருத.வடுகநாதன், வேதாரண்யம்.
ஆசிரியரின் புது முயற்சி!
என் நண்பர், ஒரு பள்ளி ஆசிரியர். அவர் பள்ளிக்கு நுாலகம் அமைக்க, பலவாறு முயற்சி செய்தும் பலனேதும் இல்லை. இறுதியாக, தன் மகளின் திருமண அழைப்பிதழில், 'திருமணத்திற்கு வருகை புரிவோர், யாரும் பணமாக, 'மொய்' எழுத வேண்டாம். பதிலுக்கு, அனைவரும் தங்களால் இயன்ற புத்தகங்களை பரிசாக வழங்குங்கள்...' என, வேண்டியிருந்தார்.
விருந்தினரும், அவ்வாறே புத்தகங்களை பரிசாக வழங்கினர். அதன் விளைவு, புத்தகங்கள் குவிந்தன.
இதுகுறித்து, நுாலக ஆணையருக்கு தகவல் தந்தார். உடனே, அவரும், அப்பள்ளிக்கு நுாலகம் அமைக்க உத்தரவிட்டார்.
இதுபோன்று, நுாலகம் இல்லாத ஊரில், அந்த ஆசிரியரின் உத்தியை பின்பற்றி நுாலகம் அமைக்கலாமே!
- ஆர்.பழனியப்பன், கோவை.
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டோம்!
சமீபத்தில், என் நண்பருடைய பேத்தியின், ஐந்தாவது பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தேன். மாலை, 6:00 மணிக்கு விழா ஏற்பாடுகள் எல்லாம் தயாராகி விட்டன. ஆனால், நண்பரும், அவரது மகனும், யாருடைய வரவுக்காகவோ, விழா மண்டபத்திற்கு வெளியே காத்திருந்தனர். வரப்போகும், வி.ஐ.பி.,யை காண, நானும் ஆவலுடன் காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில், 'ஆதரவற்ற முதியோர் இல்லம்' என்ற பேனர் கட்டப்பட்ட பேருந்து ஒன்று, மண்டபத்தின் முன் வந்து நிற்க, அதிலிருந்து ஆண்களும், பெண்களுமாக, 50 முதியோர் இறங்கினர்.
நண்பரும், அவரது மகனும் முகமலர்ச்சியுடன் அவர்களை வரவேற்று, மண்டபத்திற்குள் அழைத்து வந்தனர். அனைவரின் வாழ்த்துக்களுடன், குழந்தை, கேக் வெட்டி முடித்ததும், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவற்ற முதியோர் அனைவரும் ஒன்றாக அமர வைக்கப்பட்டு, அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. வி.ஐ.பி.,க்களாக வந்திருந்த முதியோர் அனைவரும் வயிறார உண்டு, மனதார வாழ்த்திய போது, அவர்களுடைய முகத்தில் பொங்கிய மகிழ்ச்சியை வர்ணிக்க, வார்த்தைகளே இல்லை.
ஆதரவற்றோரையும், தம் சொந்தங்களாக கருதி அழைத்து வந்து, வி.ஐ.பி.,க்களாக கவரவித்து, ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட நண்பரின் குடும்பத்தினரை, விழாவுக்கு வந்திருந்த அனைவரும் பாராட்டினோம்.
—கே.கணேசன், சென்னை.
