தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பயனுள்ள, 'குரூப்!'

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நண்பனின் அப்பா, அந்நோயால் பாதிக்கப்பட்ட தன் ஊரில் உள்ள நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, ஒரு, 'வாட்ஸ் - ஆப் குரூப்' ஆரம்பித்துள்ளார். இதில் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருந்து கடை நடத்துபவர்களையும் இணைத்துள்ளார்.

சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க எடுக்க வேண்டிய மருந்துகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் மற்றும் மாற்று மருத்துவ முயற்சிகள், அதன் பலன்கள் என, ஒவ்வொருவரும் தன் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனால், எளிதாக மருத்துவ உதவிகள் கிடைப்பதாக சொல்லும் இவர்கள், இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள், சிறப்பு மருத்துவர் வருகை போன்ற செய்திகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். நட்பு வட்டம் மேலும் விரிவடைவதோடு, மருத்துவ விழிப்புணர்வும் கிடைப்பதாக கூறுகின்றனர். மாதந்தோறும் ஒருநாளில், அனைவரும் ஒன்று கூடி பேசவும் செய்கின்றனர்.

சர்க்கரையை நோயாக கருதி, துன்பப்பட்டுக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட்டு, வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டும், பயனுள்ளதாக மாற்றிக் கொண்டும் செயல்படும் இவர்கள் அனைவரையும் மனதார பாராட்டி வந்தேன்.

நீங்களும், உங்கள் பகுதியில் இதுபோல முயற்சிக்கலாமே!

- ஆர். ஹரிகோபி, புதுடில்லி.

தெரிந்து கொள்வோம்!

'டோல்கேட்'டில் வாங்கும் ரசீதால் என்னென்ன பயன்கள் உள்ளன தெரியுமா!

வெளியூர் செல்லும்போது, தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச் சாவடியை கடக்கும்போது, வாகனத்துக்கு ஏற்ப, பணத்தை கட்டி, ரசீது பெற்றுக் கொள்வோம். அது, சுங்கச்சாவடியை கடக்க மட்டுமல்ல, உங்கள் பயணம் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும், அப்படி ஏதாவது இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான், அந்த பணத்தை செலுத்துகிறோம்.

* காரில் செல்பவர்கள் யாருக்காவது, மருத்துவ உதவி தேவைப்பட்டால், ரசீதின் பின்புறம் பதிவாகியிருக்கும் மொபைல் எண்ணிற்கு போன் செய்தால், உடனடியாக, 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரும்

* வண்டி பழுதாகி நின்றாலோ அல்லது 'பஞ்சர்' ஆகி விட்டாலோ, அதற்கு இன்னொரு நம்பர் இருக்கும். அந்த எண்ணிற்கு போன் செய்தால், 10 நிமிடத்தில் வந்து, 'பஞ்சர்' போட்டுக் கொடுத்து, பழுது எனில் அதையும் சரி செய்து கொடுத்து விடுவர். இது, அவர்கள் கடமையாகும்

* பெட்ரோல், டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால், தகவல் சொன்னால், 5 அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்து விடுவர். அதற்கான பணத்தை நாம் கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் சேர்த்து தான் நம்மிடம் சுங்கக் கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாமல், ஏதாவது பிரச்னையானால், தவித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதை தவிர்க்க, இனிமேல், சுங்கச் சாவடி ரசீதை பத்திரப்படுத்தி, பயன் பெறுவோம்!

- எஸ். சிதம்பரநாதன், காஞ்சிபுரம்.

மாணவன் நினைத்தால்...

கடந்த ஆண்டு, என் சகோதரியின் மகன், பிளஸ் 2 முடித்து, முதலாம் ஆண்டு கல்லுாரியில் அடியெடுத்து வைத்தான். 'ராகிங்' மற்றும் சீனியர்களின் மிரட்டல் என பயந்தவனுக்கு, தைரியம் சொல்லி அனுப்பி வைத்தோம்.

ஆனால், நடந்ததோ எதிர்பாராதது. முதலாமாண்டு புதுமுகங்களை இனிப்புடன் வரவேற்று, ஒவ்வொருவருக்கும் மரக் கன்றுகளையும், பூச்செடிகளையும் பரிசாக வழங்கியுள்ளனர், சீனியர் மாணவர்கள்.

வசதி இருந்தால் வீட்டிலும், இல்லையென்றால், கல்லுாரி வளாகத்தில் நட்டு, நன்கு பராமரித்து வருமாறு ஆலோசனை கூறியுள்ளனர்.

சீனியர் மாணவர்களின் அணுகுமுறையை நினைத்து, மகிழ்ச்சியாக இருந்தது. ஆக்கப்பூர்வமான விஷயங்களில் மாணவர்கள் கவனம் செலுத்தினால், 'ராகிங்' மற்றும் வன்முறை போன்றவை குறையும்; நாளடைவில் மறையவும் செய்யும்.

இதோ, கல்லுாரிகள் திறக்கப் போகின்றன. சீனியர்கள், ஜூனியர்களுக்கு இதுபோன்ற இதமான வரவேற்பை கொடுக்கட்டும்!

- சாந்தினி நடராஜன், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us