
பணி ஓய்வுக்கு பிறகும், சேவை!
எங்கள் பகுதியில், ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ஒருவர் வசிக்கிறார். தன் பணியை நேசித்து செய்த அவரால், வேளாண் தொழிலிருந்து விலகி, வீட்டில் ஓய்ந்திருக்க முடியவில்லை.
அதனால், எங்கள் பகுதியில் உள்ள குடும்பத்தினரை சந்தித்து, அவரவர் வீட்டில் காலியாக கிடக்கும் பகுதிகளிலும், மொட்டை மாடிகளிலும், காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மூலிகை செடிகளை வளர்க்க ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
மேலும், அவரவர் விரும்பும் மர கன்றுகள் மற்றும் செடி வகைகளை தருவித்து உதவுவதோடு, இயற்கை உரமிட்டு, அவற்றை பராமரிக்கும் முறைகளையும், கனிவோடு கற்றுத் தருகிறார்.
இதனால், குப்பைகளும், புதர் செடிகளும் அடர்ந்து, கொசுக்களின் பிறப்பிடமாகவும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் வாழ்விடமாகவும் இருந்த காலி இடங்கள் அனைத்தும், அழகாகவும், பயனளிக்கும் வகையிலும் மாறியிருக்கின்றன.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், ஆண்டுதோறும், அவர் வீட்டில் விழா ஏற்பாடு செய்கிறார், வீட்டுத் தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தை சிறப்பாக பராமரிக்கும், தலா மூன்று குடும்பங்களுக்கு, மரக் கன்றுகளையும், இயற்கை உரங்களையும் பரிசாக தந்து ஊக்குவிக்கிறார்.
சேவை மனப்பான்மையும், செய்யும் தொழில் மீதான நேசமும் இருந்தால், நாமும் மகிழ்ந்து, சுற்றுப்புறத்தையும் மகிழ்விக்கும் அந்த வேளாண் அதிகாரியை, அனைவருமே பாராட்டுகின்றனர்!
- கே. லட்சுமி, முண்டியம்பாக்கம்.
மாற்றி யோசித்தால்... வெற்றி உறுதி!
சமீபத்தில், வேலை கேட்டு, எங்கள் வீட்டிற்கு, ஒரு இளைஞர் வந்தார். டியூப் லைட், மின்விசிறி மற்றும் அலங்கார விளக்கு போன்ற மின் சாதனங்களை துடைத்து, புதிது போல் மாற்றித் தருவதாக கூறினார்.
நான் தயங்கியதை கண்டவர், ஆதார் கார்டு நகல் மற்றும் வேறு சில அத்தாட்சி அட்டைகளையும் காண்பித்தார்.
மேற்கொண்டு அவரிடம் விசாரித்தபோது, 'படித்து, வேலை கிடைக்காமல் இருந்தேன். கடந்த ஆயுத பூஜை அன்று, எங்கள் வீட்டின் பக்கத்திலிருக்கும் டியூஷன் சென்டரில், ஒட்டடை அடித்து, கதவு, ஜன்னல்கள், லைட் மற்றும் மின்விசிறி போன்றவைகளை துடைத்து தருமாறு அழைத்தனர்.
'நானும், மறுக்காமல் சென்று, அவைகளை துடைத்துக் கொடுத்தேன். அவ்வேலைக்கான பணமும் கொடுத்தனர். அப்போது, என் மனதுக்குள், இதையே ஒரு தொழிலாக ஏன் செய்யக் கூடாது என்று தோன்றியது. எத்தனையோ வீடுகள், அலுவலகங்களில், ஒட்டடை படர்ந்து பேன், லைட் போன்றவை துாசி படிந்து காணப்படுகின்றன.
'இதை சம்பந்தப்பட்ட நபர்கள், ஏணி மீது ஏறி துடைப்பதற்கு சோம்பல்பட்டும், பயந்தும் விட்டு விடுகின்றனர். இதையே நாம் செய்து, பணம் சம்பாதிக்கலாமே என ஆரம்பித்து தான், இந்த தொழில். தற்போது அருமையாக போய் கொண்டிக்கிறது...' என்றார்.
அந்த இளைஞரை வாழ்த்தி, எங்கள் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்களை துடைக்க அனுமதித்தேன். ஆயிரம் வேலைகள் இங்கு கொட்டிக் கிடக்கிறது. செய்வதற்கு மனம் தான் வேண்டும்!
— மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை.
மொபைல் போனுக்கு தடை போட்ட உறவினர்!
சமீபத்தில், உறவினரின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா, அவரது இல்லத்திலேயே எளிமையாக நடந்தது.
விழாவுக்கு வந்திருந்த உறவினர்களிடம், 'சடங்கு நிகழ்ச்சிகளை, மொபைல் போன் மூலம் படம் பிடிக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது...' என, அன்பு கட்டளையிட்டார்.
இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'படமோ, வீடியோவோ எடுப்பவர்கள், நம் அனுமதியின்றி, அவர்களின், 'வாட்ஸ் ஆப்' டி.பி., ஆகவோ, 'ஸ்டேட்டஸ்' ஆகவோ வைத்து விடுகின்றனர். இப்போது, பெரும்பாலானோர், சமூக வலைதளங்களை பயன்படுத்துபவராக இருப்பதால், அவற்றில் பகிர்ந்து விடுகின்றனர்.
'அவ்வாறு பகிரப்படும் படங்களையும், வீடியோக்களையும், நமக்கு அறிமுகமில்லாத விஷமிகள், தவறாக, 'மார்பிங்' செய்து, மன உளைச்சல் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
'அதனால் தான், என் குடும்ப நிகழ்வுகளில், உறவினர் மற்றும் நண்பர்களிடம், படமோ, வீடியோவோ எடுக்க வேண்டாம் என, வேண்டி கொள்கிறேன். நம்பகமான புகைப்படக்காரரிடம் மட்டுமே பொறுப்பை ஒப்படைத்து, 'ஆல்பம்' தயாரித்து, சி.டி., போட்டும் வாங்கிக் கொள்கிறேன்...' என்றார்.
என் உறவினரின் முன்னெச்சரிக்கை பழக்கத்தை, நானும் பின்பற்ற முடிவு செய்து விட்டேன். அப்போ நீங்க?
— த. சிவா, புதுச்சேரி.

