PUBLISHED ON : செப் 12, 2021

அவர்களுக்குள் உள்ளது திறமை!
இருபது ஆண்டுகளுக்கு முன், நகரின் ஒரு பகுதியில் நாங்கள் வாழ்ந்தபோது, எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு பெண், எப்போதும் கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படுவாள். காரணம், அவளது நான்கு வயது பெண் குழந்தை, 'போலியோ'வால் பாதிக்கப்பட்டு, நடக்க இயலாமல் போனது தான்.
'இந்த ஊனத்தோடு இவள் எப்படி வாழப் போகிறாளோ, நான் எப்படி இவளை கரை சேர்க்கப் போகிறேனோ தெரியலை...' என்று, அழுது புலம்புவார். முடிந்த வரை, நாங்கள் அவருக்கு ஆறுதல் சொல்வோம்.
அங்கிருந்து நாங்கள் வீடு மாறி போனதும், தொடர்பு விட்டுப் போயிற்று. சமீபத்தில், ஒரு கடைத் தெருவில், அந்த பெண்ணை அடையாளம் கண்டு பேசினோம். அப்போது, முக வாட்டமுமின்றி, உற்சாகமாக காணப்பட்டாள், அவள்.
குழந்தை பற்றி விசாரித்தபோது, 'நல்லா இருக்கா... கால்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அறிவாற்றல் நிறைந்தவளா இருக்கா. 10 வயசுலேர்ந்து சுயமா, பலவற்றை கற்று, பிளாஸ்டிக் கூடைகள் பின்னுவது, பொம்மைகள் தயாரிப்பது, கிளாஸ் பெயின்டிங் பண்றது, அழகான பூ மாலைகள் கட்டறது...
'கர்நாடக சங்கீதம் பயின்று, பாட்டு கிளாஸ் நடத்துறதுன்னு, இன்று அதையே மூலதனமாக வைத்து சம்பாதித்து வருகிறாள். 'அவளுடைய வருமானத்தை வெச்சுதான் வீட்டு வாடகை, மூணு வேளை சாப்பாடு, நல்ல துணிமணிகளை உடுத்தியும் வர்றோம்...' என்று, முகம் மலர அவர் சொன்னதை கேட்டு, எங்கள் மனமும் பூரித்தது.
மாற்றுத் திறனாளிகள் பற்றி கவலை கொள்ள வேண்டாம். அவர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துள்ள, அப்பெண்ணை பாராட்டினோம்.
கே. ஜெகதீசன், கோவை.
மொபைல் போன் பரிசு வேண்டாமே!
இப்போதெல்லாம் திருமணம் உறுதியானவுடனேயே, தனக்கு மனைவியாக வரக்கூடியவளிடம், ஏற்கனவே மொபைல்போன் இருந்தாலும், தன் அன்பளிப்பாக, விலை உயர்ந்த போனை வாங்கி கொடுத்து விடுகின்றனர், பெரும்பாலான மாப்பிள்ளைகள்.
அன்றிலிருந்து மணமக்கள் இருவரும், மொபைல் போனில் மணிக்கணக்கில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
இதனால், இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடிவதாக காரணம் சொன்னாலும், மணமகனின் பேச்சுக்கு மயங்கி, தன் வீட்டு ரகசியங்களை, பலவீனங்களை சொல்லும் நிர்பந்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பும், மணப்பெண்ணுக்கு ஏற்பட்டு விடுகிறது; அதுமட்டுமல்லாமல், ஏமாற்றப்படும் நிலைக்கும் ஆளாகின்றனர்.
மேலும், திருமணத்திற்கு முன்பே மணமக்கள் எல்லாவற்றையும் பேசி விடுவதால், முதலிரவு நெருங்கும்போது ஏற்படும், 'கிக்' குறைந்து விடுகிறது. எனவே, இப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
— ரா. ரெங்கசாமி, வடுகப்பட்டி.
பூக்காரரின் சாமர்த்தியம்!
எங்கள் தெருவுக்கு, பூக்காரர் ஒருவர், தினமும் பூ கொண்டு வருவார். போட்டியின் காரணமாக, அவருக்கு பூ வியாபாரம் மந்தமாகவே இருந்தது.
வியாபாரத்தை லாபகரமாக்க, மாற்று யோசனை செய்தவர், 'இன்று, பிரதோஷம், வில்வம் வாங்கி பூஜை செய்யுங்கள். இன்று, சங்கடஹர சதுர்த்தி, விநாயகருக்கு, அருகம்புல் மாலை அணிவித்தால் நல்லது.
'இன்று வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு, அரளி மாலை வாங்கி போடுங்கள். இன்று சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு துளசி வாங்கி, பூஜை செய்யுங்கள்...' என்று, நாட்களின் தன்மைக்கேற்ப பூக்களும், இலைகளும் கொண்டு வந்து, கூவி கூவி விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
தெருவில் பலரும், அவரிடம் வில்வம், அருகம்புல், துளசி போன்றவற்றை வாங்கினர்; விற்பனையும் பெருகியது. அவர், இன்றைய நாளின் சிறப்பு என்ன கூறப்போகிறார் என்று கேட்பதற்கே, வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். அவரது விற்பனை யுக்தியை கண்டு வியந்து பாராட்டினேன்.
வியாபாரம் என்றாலே, வாய் சாமர்த்தியம் தானே... எம்.பி.ஏ., படித்து தான், 'நம்பர் ஒன்' தொழில் முனைவோராக வேண்டும் என்று, நியதி இல்லையே!
எம். விக்னேஷ், மதுரை.
