PUBLISHED ON : மே 29, 2022

'ஈகோ'வை விட்டு கற்றுக்கொள்ளுங்கள்!
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், நண்பர். எப்போதும், எல்லாரிடமும் கலகலப்பாக பேசி, சிரித்தபடி பழகுபவர், சில நாட்களாக சிடுசிடுவென இருந்தார். தற்போது பணிபுரியும் நிறுவனத்திலிருந்து விலகி, வேறு வேலைக்கு போக எண்ணுவதாக கூறினார்.
அவருக்கு ஏதோ உளவியல் பிரச்னை என்பது, அவரது பேச்சு, நடவடிக்கை மூலமாக தெரிந்தது. அவரை தனியே அழைத்துச் சென்று, ஆதரவாக பேசி, பிரச்னையை கேட்டேன். அந்நிறுவனத்தில், பணியாற்றும் சீனியர்களில் அவரும் ஒருவர்.
ஆரம்பத்திலிருந்தே கோப்புகள் மூலம் கையாண்ட அவருக்கு, தற்போது, கணினி வழி, 'டிஜிட்டல்' முறை தெரியவில்லை. அவை நன்றாக தெரிந்த ஜூனியர்களிடம் கேட்க, தலைகுனிவாக இருப்பதாகவும் கூறினார்.
'தினமும் புதுப் புது தொழில்நுட்பம் வந்து கொண்டே இருக்கிறது. நாம் பழமையிலேயே கிடக்காமல், புதுமைக்கேற்றவாறு நம்மை, 'அப்டேட்' ஆக்கிக் கொள்ள வேண்டும். ஜூனியர்களிடம், 'ஈகோ' பார்க்காமல், அவர்களை நட்போடு அணுகி கற்றுக்கொள்ளுங்கள்...' என்று அறிவுறுத்தினேன்.
அதன்படியே நடந்தவர், தானும், 'அப்டேட்' ஆகி, இப்போது பழையபடி சகஜமாக மாறி விட்டார்.
வாசகர்களே... எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்து விடாது. காலத்திற்கேற்றவாறு நம்மை பொருத்திக் கொள்ள, 'ஈகோ'வை விட்டு, கற்றுக்கொள்ளுங்கள்!
- ஆர். செந்தில்குமார், மதுரை.
மரங்களை தத்து எடுப்போம்!
நண்பரின், புது வீடு புகு மனை விழாவுக்கு போயிருந்தேன். அவரது வீடு புறநகரில் இருந்தது. அவர் வீட்டுக்கு அருகில் புதர் மண்டி கிடக்கும். அதை சுத்தம் செய்து, குழிகள் தோண்டி வைத்திருந்தார்.
'ஏன்...' என்று விசாரித்தேன்.
'வீட்டை சுற்றிலும் புறம்போக்கு நிலம் தான். எனவே, மரம் வைக்கலாம் என்று தோன்றியது. எல்லாரும் புதிதாக கன்று நட கூறினர். ஆனால், நான் சாலை விரிவாக்கம் மற்றும் மரங்கள் அகற்றப்படும் இடத்திலிருந்து மரங்களை தத்து எடுத்து வளர்க்கலாம் என்று எண்ணுகிறேன்...' என்றார்.
மரங்களை தத்து எடுப்பது, புதுமையான அணுகுமுறையாக இருந்தது. அவரது முயற்சியை நினைத்து ஆச்சரியப்பட்டு, வாழ்த்தி வந்தேன்.
ஏற்கனவே வளர்ந்த பழைய, பெரிய மரங்களை காப்பாற்றுவதும், புதிய மரங்களை நட்டு வளர்ப்பதை விட சிறப்பானது.
இவரை போலவே, பெரிய நிறுவனங்கள், ஆங்காங்கே அகற்றப்படும் மரங்களை தத்து எடுத்து, தங்கள் இடத்தில் வைத்து பராமரித்தால், நல்ல பலனும், புண்ணியமும் கிடைக்கும்.
- கி. ரவிக்குமார், நெய்வேலி.
புது விதமான திருட்டு!
ரயிலில், பொது பெட்டியில் பயணம் செய்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால், சக பயணியரில் பலரும், தரையிலும், பொருட்கள் வைக்கும் இடங்களிலும் அமர்ந்து பயணம் செய்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள், இருக்கை அடியிலும், நடுவிலும் படுத்து துாங்க ஆரம்பித்தனர்.
இருக்கையில் இருந்த எங்களுக்கு, அது அசவுகரியமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்தோம்.
திருப்பூரை, ரயில் நெருங்கிய போது, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் இறங்க ஆயத்தமானார். அப்போது, 'ஒரு கால் கொலுசை காணவில்லை...' என கூறி, பதட்டமானார். அவருடன் சேர்ந்து நாங்களும் கொலுசை தேட ஆரம்பித்தோம். ஆனால், கொலுசு கிடைக்கவில்லை.
திடீரென இன்னொரு பெண், 'என் காலில் இருந்த இரண்டு கொலுசுகளையும் காணவில்லை...' என, கூச்சல் போட்டாள். இதனால், மேலும் பதட்டமடைந்தோம்.
அவரவர், தங்கள் பொருள், நகை என, அனைத்தையும் சோதனை செய்ய ஆரம்பித்தோம்.
இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் கொலுசு காணாமல் போனதால், இது திருட்டு தான் என்றும், இந்த திருட்டை செய்தவர், அந்த பெண்களின் இருக்கையின் கீழ் படுத்திருந்த ஆசாமியாகத்தான் இருக்கும் என, சந்தேகப்பட்டோம். அந்த ஆசாமி திருப்பூருக்கு முன்பே இறங்கி சென்று விட்டார்.
ரயிலில் ஏற்பட்ட சலசலப்பால், பக்கத்து பெட்டியில் இருந்த நபர் ஒருவர், விபரம் கேட்டு, 'திருடர்கள், இப்போது புது புது வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
'குறிப்பாக, ரயில்களில் பொது பெட்டிகளில், பெண்களின் காலடியில் படுத்து, அவர்கள் அயர்ந்து துாங்கும் போது, கால்களில் கிடக்கும் கொலுசுகளை, 'கட்டிங் பிளேயர்' உதவியுடன், 'கட்' பண்ணி சென்று விடுகின்றனர். இதே போன்று, பெங்களூரு ரயிலிலும் ஒரு முறை நடந்தது...' என்றார்.
திருட்டு எந்த ரூபத்திலும் நிகழலாம். ஆகவே, ரயிலில் பயணம் செய்யும் போது, மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அ.சாரதா, தர்மபுரி.
