தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அறிவுரையின் மூன்று ரகங்கள்!

அறிவுரையின் மூன்று ரகங்கள்!

அறிவுரையின் மூன்று ரகங்கள்!


PUBLISHED ON : டிச 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று பலரும், 'எனக்கு எல்லாம் தெரியும்; எவன் யோசனையும் எனக்கு தேவையில்லை; எவளும் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை...' என்கிற மனப்போக்கில் நடந்து கொள்கின்றனர்.

தங்களது அனுபவம் மற்றும் மூத்தோரின் அனுபவங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதே சிறப்பு என்பதை நம்ப மறுக்கின்றனர்.

பிறரது அனுபவங்களையும், அறிவுரைகளையும் விளக்கெண்ணையாகவும், வேப்பங்காய்களாகவும் பார்ப்பவர்களிடம் எல்லை வகுத்து, 'லட்சுமண கோடு' போட்டு, பேச வேண்டிய காலகட்டம் இது.

'கண்ணுக்கு தெரிஞ்சு படுகுழியில் விழுதுங்க; எப்படி வாயைத் திறக்காம இருக்க முடியும்...' என்பவர்களுக்காகவே இக்கட்டுரை!

சிறு குழந்தைகளுக்கு, கசப்பு மருந்தை தேனில் குழைத்துக் கொடுத்தோமே... அதே வழிதான், தோளிற்கு மேல் வளர்ந்தவர்களுக்கும்!

அறிவுரை சொல்வதில் மூன்று ரகங்கள் உண்டு.

'இந்தா பிடி; நான் சொல்றது தான்... இதற்கு மேல் அப்பீல் இல்லை...' என்று பேசுவது முதல் ரகம். இதை, 'ராணுவ கமாண்ட்' ரகம் என்று சொல்லலாம். இவர்கள் ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள். இவர்களை ஏற்று, அடங்கிப் போகும் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கே இது பொருந்தும். ஆனால், சின்னச் சின்ன விஷயங்களில், 'அப்படியே ஆகட்டும் அரசே...' என்கிற பாணியில் கேட்டு, முக்கியமான முடிவுகளின்போது, 'போய்யா... நீயும் உன் அட்வைசும்...' என்று விஸ்வரூபம் எடுத்து விடுவோரும் உண்டு.

களாக்காய்களை விட்டுக் கொடுத்து, பலாக்காய்களை பறிக்கும் பாணியில் இது முடிந்து விடுவதால், இந்த வண்டியும், பிழைப்பும் வெகுநாள் ஓடாது.

தோழமையோடு பழகி, அன்பாக நடந்து, தோளில் கை போட்டு, 'நான் இப்படி நினைக்கிறேன்... நீ என்ன நினைக்கிறே...' என்கிற பாணி தான், பலரிடத்தில் நன்கு வேலை செய்யும்.

தொழில் பங்குதாரர்கள்; மேலதிகாரி - ஊழியர்; நட்புகள், உறவினர்கள்; வீட்டுக்காரர் - குடித்தனக்காரர்; தெருவில் நம்மை கடந்து செல்வோர், தற்காலிக தொழில் நட்புக்காரர்கள், வாடிக்கையாளர்கள் என, எவருக்கும் இந்த விதிகளைப் பொருத்தலாம்!

நம் அறிவுரைகளை பிறர் கேட்டே ஆகவேண்டும்; நுாலிழை பிசகாமல் அப்படியே அவற்றை பின்பற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நமக்குள் நிறைய இருக்கிறது. 'நாம் எண்ணுகிற கோணமே சரி; நான் எடுக்கிற முடிவே துல்லியம். மற்றவர்கள் மடையர்கள்; நாமே மிகப்பெரிய மேதாவி...' என்ற பாணியிலேயே நம்மில் பலர் சிந்திக்க பழகி விட்டோம்.

நாம் சொன்னதை மீறி வேறு பாணியில் ஒருவர் வெற்றி அடைந்தால் கூட, தோல்வியை ஒப்புக்கொண்டு, உண்மையை ஏற்காமல், 'இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு பார்க்கத்தானே போறேன்...' என்ற பாணியில் பேசுவது இவர்களது சுபாவமாகி விட்டது.

ஆதிக்க உணர்வோடு அறிவுரை வழங்குவது, உரிமையோடு அறிவுரை சொல்வது ஆகிய இரண்டையும் மீறி, மூன்றாவது அணுகுமுறை என்ன என்பதை பார்ப்போம்...

'நீங்கள் கடந்து வரும் கடுமையான கால கட்டம் பற்றி எனக்கு புரிகிறது. இதுபற்றி உங்களிடம் பேசலாமா, வேண்டாமா; நீங்கள் விரும்புவீர்களா, மாட்டீர்களா என்பதை அறியேன். நீங்கள் அனுமதித்தால் அதுபற்றி பேசுகிறேன்; பேசலாமா...' என்கிற பாணியில் எதிராளியிடம் மெல்ல விஷயத்தை ஆரம்பிக்க வேண்டும்...

இப்படி ஆரம்பித்தால், இவர் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்று நினைப்பவரின், மனக் கதவு கூட திறந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

பிறகு என்ன... சொல்ல நினைக்கிற எல்லாவற்றையும் உள்ளே கொட்டி, மருத்துவர் பாணியில் தையல் போட்டு விட வேண்டியது தான்!

-லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us