தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அடியார்களுக்கு அருள் செய்ய....

அடியார்களுக்கு அருள் செய்ய....

அடியார்களுக்கு அருள் செய்ய....


PUBLISHED ON : செப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்வம் மட்டுமல்ல, தெய்வ அருள் பெற்ற குருநாதர்களும், நம்மை கட்டிக் காப்பாற்றுவர் என்பதை விளக்கும் நிகழ்வு இது:

பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீர்காழியில் அவதரித்தவர், காழிக்கண்ணுடைய வள்ளலார். கல்வி மற்றும் புலமையில் சிறந்து விளங்கிய இவர், திருஞான சம்பந்தரிடம் பேரன்பு பூண்டிருந்தார். தினந்தோறும் அதிகாலையில் எழுந்து, நீராடி ஆலயத்திற்கு சென்று, திருஞான சம்பந்தரின் முன் நின்று, பாடல்களை பாடுவது வழக்கம்.

காழிக்கண்ணுடையார் ஆலயம் செல்லும் போது, அவருக்கு துணையாக வரும் அவருடைய பணியாளர் கந்தன், அவரை ஆலயத்தில் விட்டு, பாடல் முடியும் நேரத்தில், திரும்ப வந்து அழைத்துச் செல்வார். ஒருநாள், காழிக்கண்ணுடையாரை ஆலயத்தில் விட்டு, வீட்டிற்கு திரும்பினார், கந்தன். சிறிது நேரத்தில், பெரும்மழை பிடித்துக் கொள்ள, காழிக்கண்ணுடையாரை அழைக்க கோவிலுக்கு செல்லவில்லை, கந்தன்.

ஆலயத்தில் பாடி, தம் வழிபாட்டை முடித்து வெளியே வந்த காழிக்கண்ணுடையார், 'கந்தா...' என்று உரக்க கூப்பிட்டார். கந்தன் வந்திருந்தால் தானே பதில் வரும். கந்தனை காணவில்லை என்றதும், இந்த கொட்டும் மழையில் எப்படி வீட்டுக்குச் செல்வது என்று மறுகினார், காழிக்கண்ணுடையார்.

தன் மீது அன்பு கொண்ட பக்தனுக்கு தாமே துணையாக போவதென்று தீர்மானித்த திருஞான சம்பந்தர், கந்தன் வடிவில் காழிக்கண்ணுடையார் முன் வந்தார். அவரது துணையோடு, வீடு திரும்பினார் காழிக்கண்ணுடையார்.

வீட்டிற்குள் நுழைந்ததும், திருஞான சம்பந்தர் மறைந்தார்.

இதை அறியாத கந்தன், 'ஐயா... இன்று பெரும் மழையாக இருந்ததால், நான் கோவிலுக்கு வர முடியவில்லை; என்னை மன்னியுங்கள்...' என, வேண்டினார்.

திடுக்கிட்ட காழிக்கண்ணுடையார், கொட்டும் மழையில் கந்தன் வடிவில், தனக்கு துணையாக வந்தது, தன் வழிபடு தெய்வமான, திருஞான சம்பந்தர் என்பதை உணர்ந்தார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

திருஞான சம்பந்தர் காலம், ஏழாம் நூற்றாண்டு; காழிக்கண்ணுடைய வள்ளலார் காலம், 18ம் நூற்றாண்டு. அடியார்களுக்கு அருள் செய்ய ஆண்டவன் மட்டுமல்ல; ஆண்டவன் அருள் பெற்ற குருநாதர்களும் மறப்பதில்லை.

காழிக்கண்ணுடைய வள்ளலார், தான் பாடிய பாடல்களை, 'ஒழிவிலொடுக்கம்' என பெயரிட்டு, நூலாக செய்தார். இந்நூலுக்கு, திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதினார்; இந்நூலின் சிறப்பு பாயிரத்திற்கு, வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார், விரிவான உரை எழுதியுள்ளார்.

அருளாளர்கள் அருள் மழை பொழியும் ஞான பூமியிது!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

மனு தர்ம சாஸ்திரப்படி, எதையெல்லாம் செய்யக் கூடாது?

குடியில்லாத வீட்டில், தனியாக தூங்கக் கூடாது; வேத தர்ம சாஸ்திரம் அறிந்தவன் தூங்கும் போது, அவனை தட்டி எழுப்பக் கூடாது. வித்வத் சபை, யாக சாலை மற்றும் ஹோமம் செய்யும் இடம் போன்ற இடங்களுக்கு, வரவேற்பில்லாமல் செல்லக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us