sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 20, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று, வழக்கமாக நண்பர்கள் கூடும் இடத்திற்கு, முன்கூட்டியே சென்று விட்டோம் நானும், லென்ஸ் மாமாவும்! குறிப்பிட்ட நேரமாகாததால் நண்பர்களின் கார், பைக் எதையுமே காணோம். ஆனால், சிறிது தூரத்தில் ஒரு கார் நின்றிருந்தது.

கார் முழுவதும் அடிப்பட்ட தடங்களும், கோடுகளும் இருக்கவே, அது, அறிமுகம் உள்ள ஒரு அன்பரின் கார் தான் என்பதை புரிந்து கொண்டேன். அந்த அன்பர், அரசு துறைகளில் ரொம்ப இன்புளுயன்ஸ் உள்ள நபர்; எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அவரது வேலை சுலபமாக நடக்கும்.

அரசின் டெண்டர்களை, 20 கோடி ரூபாயில் ஆரம்பித்து, 200 கோடி ரூபாய் வரை பெரிய பெரிய கம்பெனிகளுக்காக பிடித்துக் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர். டெண்டரின் மதிப்பு மற்றும் சிரமத்திற்கு ஏற்ப, 1 முதல் 3 சதவீத கமிஷன் வாங்குவார்.

ஆண்டிற்கு இதுபோல மூன்று, நான்கு வேலைகள் முடித்துக் கொடுத்து, 4 - 5 கோடி ரூபாய் சம்பாதித்து விடுவார். அத்துடன், சம்பாத்தியத்தை எல்லாம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து விடுவார்.

தனக்கென, ஆடம்பரக் கார் ஏதும் வைத்துக் கொள்ள மாட்டார்; அதற்கு பதில், செகண்ட் ஹாண்ட், தேர்ட் ஹாண்ட் கார்களை வாங்கியே பயன்படுத்துவார். அப்படி வாங்கப்பட்ட கார்களில் ஒன்று தான் இப்போது நான் பார்த்த கார்.

'இந்தக் காரை, 'ஏசி'யுடன், 33 ஆயிரம் ரூபாய்க்குத் தான் வாங்கினேன்; கேஸ் கனெக் ஷனுக்கு, 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன். இப்போ இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு ஓட்டிட்டேன்.

'இதுவே, 12 - 15 லட்சம் ரூபாய் போட்டு புதுக் கார் வாங்கினா, எவனாவது சைடுல வந்து உரசி விடுவானோ, ஆட்டோ இடிச்சுடுமோன்னு டென்ஷனிலேயே கார் ஓட்ட வேண்டியிருக்கும். குறுகிய தெருக்கள்ல தைரியமாக வண்டிய செலுத்த முடியாது.

'பழைய, விலை குறைந்த கார்ன்னா, இந்த பயமெல்லாம் தேவை இல்ல. உரசுறியா... உரசிக்கோ; இடிக்கிறியா... இடிச்சிக்கோ. மேடு, பள்ளமான ரோடா... நோ ஒர்ரி...' இப்படி ஒரு லாஜிக் சொல்வார்.

இந்த அன்பர், கொஞ்சம் ஷோக்கு பேர்வழி. ஆளும் அழகாக, டிரிம்மாக இருப்பார். பார்க்க, 43 வயது ஆசாமி போல இல்லாமல், 35 வயதுக்குள் தோற்றமளிப்பார். அதற்கு, அவர் அணியும் டி- ஷர்ட்டும் ஒரு காரணம்.

கம்மிங் பேக் டு த பாயின்ட்...

அந்த கார், மேற்படி அன்பரின் கார் தானா என்பதை உறுதி செய்ய, கார் அருகே சென்ற போது, மொபைல்போன் அழைத்தது. பேசியவர் மேற்படி அன்பரே தான்...

'மணி... நான் தான் பேசுறேன்... இங்கே, காருக்குள் ஒரு தோழியுடன் இருக்கேன்; இன்னும் கொஞ்சம் நேரத்தில நானே அங்கு வர்றேன்...' என்றார்.

மிகக் கறுப்பான கார் கண்ணாடிக்குள் இருந்து, நான் அவர் காரை அணுகுவதைப் பார்த்து போன் செய்திருக்கிறார்.

'ஓ.கே...' என்று, என் இடத்திற்கு திரும்பவும், நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த அன்பரை மறந்தே போனேன்.

அரை மணி நேரம் சென்று இருக்கும்... 10 நண்பர்களுக்கும் மேல் வந்துவிட்ட நிலையில், மேற்படி அன்பரும் கும்பலில் கலந்தவர், என் புறங்கையை நைசாக சுரண்டி, தன்னுடன் தனியே வரும்படி சைகை செய்தார்.

நண்பர்களுக்கு சந்தேகம் வராத வகையில் நைசாகக் கழன்று, அந்த அன்பருடன் அவர் கார் நோக்கிச் சென்றேன். காரின் முன்பக்க இடது டோர் கண்ணாடி இறக்கப்பட்டு இருந்தது. காரினுள், 22 - 23 வயது மதிக்கத்தக்க அழகான பெண் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அப்பெண்ணிடம், 'ஹி இஸ் மணி... மை பிரண்ட்...' என, அன்பர் அறிமுகம் செய்ய, அப்பெண், தன் வலது கரத்தை காரின் வெளியே நீட்டி, 'ஷேக் ஹேண்ட்' கொடுக்கும் விதமாக, 'அயம் ரேஷ்மா...' என்றாள். நான், கை கூப்பி வணக்கம் சொன்னேன்.

ஒரே வினாடியில் அவளை அவதானித்தேன். கழுத்து வரை சுருள் சுருளான கேசம்; கண்ணில் பவர் கிளாஸ், மீடியமான தேகம், களையான முகம்!

பின், 'பீ சீட்டட்... ஐ வில் கம்...' என, அப்பெண்ணிடம் கூறிவிட்டு, என்னை தனியே அழைத்துச் சென்றார்.

'மணி... நம்பவே முடியாத சம்பவம்ப்பா... சாயங்காலம், 7:00 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் போய், அமெரிக்காவில் இருந்து என் தம்பி, 'இ மெயில்' ஏதும் அனுப்பி இருக்கிறானா என, பாத்துக்கிட்டுருந்தேன்.

'யாரோ என்னை முறைச்சு பார்ப்பது போல ஒரு பீலிங் வரவே, மானிட்டரில் இருந்து கண்ணை அகற்றி திரும்பிப் பாத்தேன்...

'இந்தப் பெண் ரேஷ்மா... வைத்த கண் எடுக்காமல் என்னையே பாத்துக்கிட்டிருந்தா... நான் திரும்பிப் பாத்ததும், தன் பார்வையை மாற்ற, என் அருகே காலியாக இருந்த கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாள்.

'அது சரியாக வேலை செய்யலைன்னதும் அந்த சென்டரின் அதிபர், எனக்கு நாலு சீட் தள்ளி அவளை அமர வைத்தார். இத்தனையும் ஓரக்கண்ணால் பாத்துக்கிட்டிருந்தேன்.

'ரெண்டு நிமிடங்களுக்கு பின், அவள் என்கிட்ட வந்து, என்னோட இ- மெயில் முகவரி கேட்டா. ஏன், எதற்குன்னு கேட்காமலேயே, என் மெயில் முகவரியை கொடுத்தேன்.

'அவள் கம்ப்யூட்டரில் இருந்து எனக்கு தகவல் அனுப்பியிருக்கா. ஆனா, அது எனக்கு வரலைங்கிறதை தன் கம்ப்யூட்டர் மூலமே அறிந்தவள், திரும்ப எங்கிட்ட வந்து, 'யாகூ ஐடி ஏதும் இருக்கா... அதைக் கொடுங்க'ன்னு கேட்டா; நானும் கொடுத்தேன்.

'பர்சனல் சாட்டுக்கு வரும்படி என்னை அழைச்சா. பர்சனல் சாட்டில் நுழைஞ்சதும், 'நீ, ரொம்ப அழகா இருக்கே... உன்னுடன் நேரில், தனியா பேசணும் போல விருப்பம் இருக்கு. வெளியே போகலாமா... உன்னிடம் கார் இருக்கா'ன்னு கேட்டிருந்தாள்.

'இவ்வளவு அழகான பெண், 'தனியே பேசணும் ... வா'ன்னு கூப்பிட்டா. எந்த ஆண் மறுத்தாலும், நான் மறுக்க மாட்டேன். இருந்தாலும் அவள், 'புரொபஷனலா' அல்லது நல்ல பெண்ணான்னு தெரிஞ்சுக்க விரும்பி, 'நீ யார்... என்ன செய்யுற... படிக்கிறியா, வேலை பார்க்கிறியா... சொந்த ஊர் எது'ன்னு கேட்டு, கம்ப்யூட்டர் பட்டனைத் தட்டினேன்.

'உடனே அவளிடமிருந்து பதில் வந்தது. தன் பெயர் ரேஷ்மா; வயது 23, எம்.பி.ஏ., பட்டதாரி, இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் ஒன்றில் பணி, சம்பளம் விவரம், சொந்த ஊர் திருவனந்தபுரம், ஹாஸ்டலில் தங்கி இருப்பதாகவும் தகவல் அனுப்பினாள்.

'சரி... இவள் தொழில் முறை பெண் அல்ல என்பதை உறுதி செய்து, 'இந்த இன்டர்நெட் சென்டரின் அதிபர் எனக்கு தெரிஞ்சவர். அதனால, பக்கத்து தெருவில இருக்கிற பஸ் ஸ்டாப்பில வெயிட் பண்ணு... நான் வந்து என் கார்ல, 'பிக்கப்' செய்துக்கிறேன்...' என, தகவல் அனுப்பினேன்!

'அடுத்த, 15வது நிமிடத்தில் அப்பெண்ணை, பஸ் ஸ்டாப்பிலிருந்து, 'பிக்- அப்' செய்தேன். காரில் ஏறியது தான் தாமதம்... அப்படியே என் தோளில் சாய்ந்து, கட்டி அணைத்து கொண்டாள்.

'பின், பீச்சுக்குப் போகச் சொன்னா... இங்கே வந்து பழக்கமான இடத்தில் காரை நிறுத்தினேன். 'மேஜர்' விஷயம் தவிர, அனைத்தும் முடிந்தும், 'அதற்கு' அனுமதி மறுக்கிறாள்...' என்று அவர் முடித்ததும், எனக்கு, பண்பாட்டு சீரழிவை நினைத்து, பயங்கர கல்சுரல் ஷாக்! அந்தப் பெண்ணின் முகம் கண்ணில் வந்து, 'இந்தப் பெண்ணா... இந்தப் பெண்ணா...' என நினைத்து, மனம் குமைந்து, நெஞ்சு பாரமானது.

அடுத்த அரைமணி நேரமும் இதையே நினைத்து, மனபாரமாகி தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வுடனேயே இருந்தேன். கும்பலில் பெரியசாமி அண்ணாச்சி, 'ஜிஞ்சர்' சிக்கனை, 'டிஞ்சர்' சிக்கன் என்று சொல்ல, எல்லாரும் விழுந்து சிரித்து, அண்ணாச்சியைக் கிண்டலடிக்க, வலுக்கட்டாயமாக அதில் கலந்து, அப்போதைக்கு அதை மறந்தேன்!

இருந்தாலும், சமுதாயத்தின் பண்பாட்டுச் சீரழிவை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை; இதைப் படித்த உங்களுக்கு?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us