PUBLISHED ON : நவ 09, 2014

சரோஜாவுக்கு, இன்னும் கால்கள் தரையில் நிற்கவில்லை. செய்தி கேட்டபோது, எப்படி மனம் ஆர்ப்பரித்து துள்ளிக் குதித்ததோ, அதே போலத்தான், மைசூருக்கு கிளம்புகிற இன்றும் இருந்தது.
அதை, வெறுமனே செய்தி என்று சொல்லிவிடுகிற பதமா என்ன? வாழ்க்கையையே மீட்டெடுக்கிற அதிசயம். நடக்குமா, கிடைக்குமா என்று, ஒவ்வொரு நாளும் பரிதவித்து காத்துக் கிடந்த வேதனையின் விடிவு.
நாலாவது வீட்டு பத்மா, அன்று வீடு தேடி வந்தபோது, 'அடடா... வம்புக்காரி வருகிறாளே...' என்று உள்ளம் படபடத்தது உண்மை.
'இந்தா... சமயபுரம் கோவில் பிரசாதம்; அந்த மாரியம்மனாவது மனம் இறங்கி, காணாமல் போன உன் மகன், உன்னை தேடி வரட்டும்...' என்று ஒரு குத்து, குத்தி விட்டுப் போவாள். அந்த வார்த்தைகள் வேல்கம்பாய், நெஞ்சின் மெல்லிய பகுதியில் குறி பார்த்து தாக்கும். காய்ந்து தழும்பாகிப் போன காயத்தின் மேல், குத்திக் கிளறி ரணமாக்கும்.
'ஏண்டா சரவணா இப்படி செய்த? எங்கடா போன... அம்மா மேல என்னடா கோபம்? நீ நல்லா வரணும்ன்னு தானே திட்டியிருப்பேன்... படிச்சு பெரியாளா வந்து, நீ கம்பீரமா நிக்கணும்ன்னு துடிச்சேனே... எங்கடா போன...' என்று மனதுக்குள் குமுறுவாள்.
பத்மா வருகிறாள் என்பது, கதவை ஓசையுடன் திறந்து மூடும் வேகத்திலேயே தெரிந்தது.
''என்ன சரோஜா, ராத்திரி சரியா தூங்கினியா இல்லயா?'' என்று கேட்டு, உட்கார்ந்தாள் பத்மா.
''தூக்கமா... அது என்னை விட்டுப் போய் பல வருஷம் ஆகுதே பத்மா... இப்பல்லாம் கோழித் தூக்கம் தான்; காபி தரவா?''
''இல்ல... வேணாம்; சரி எத்தனை மணிக்கு உனக்கு ரயில்?''
''ராத்திரி, ௯:௦௦ மணிக்கு.''
''எனக்கே கொஞ்சம் கவலையாத்தான் இருக்கு; தனியா எப்படி அந்த ஊர்ல உன் புள்ளைய தேடப் போறயோ...''
''ஆறு வருஷம் நெருப்புல நின்னிருக்கேன்; சரவணா சரவணான்னு பயித்தியம் புடிச்ச மாதிரி தெருத் தெருவா தேடி அழுதுருக்கேன். எங்க போனான், என்ன ஆனான்னு ஒரு தகவலும் இல்ல. ஒரு கட்டத்துல ஜோசியக்காரன்கிட்ட கூட போய் நின்னேன். 'மேற்கு பக்கம் போனவன், ஒரு போராளி ஆயிட்டான்'ன்னு சொன்னான் அந்த ஜோசியக்காரன். எங்க சொந்தம் பந்தம் கூட, 'சரவணன் முரட்டுப் பயலாச்சே... அப்படித்தான் ஏதாவது ஒரு போராட்டக் குழுவுல போய் சேந்திருப்பான்'ன்னு சொன்னாங்க. பத்து நாள் சுவத்துல முட்டிட்டு அழுதேன். மைசூருக்கு சாமுண்டி கோவிலுக்கு போய்ட்டு வந்த நீ தான், மொதத் தடவையா, என் மகனை பாத்திருக்கே,'' என்றாள் சரோஜா.
''எல்லாம் சரிதான்... அவன் ரொம்ப நல்லா படிப்பான்; நிறைய மார்க் வாங்குவான். ஆனா, வாய் திறந்து பேசவோ, சிரிக்கவோ மாட்டான்... அழுத்தக்காரப் பய! திடீர்ன்னு வீட்டை விட்டு ஓடினான் பாரு... அதுதான் கொடுமை. சரி, இந்த நம்பரை கையில வெச்சுக்க, மைசூர்ல எங்கள கூட்டிட்டு போன யாத்ரா டிராவல்ஸ் பெண்ணோட நம்பர், அந்த அம்மா ரொம்ப நல்லவங்க; கண்டிப்பா உதவி செய்வாங்க,''என்றாள்.
பத்மாவின் கையைப் பிடித்த சரோஜாவிற்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
''இன்னொரு விஷயம் சரோஜா...''
''சொல்லு.''
''யாத்ரா பஸ் போன வேகத்துல, ஒரு ஜாடைலதான் அவனைப் பார்த்தேன். மனசுல சுர்ருன்னு பட்டுச்சு, ஐயோ... இது நம்ம சரோஜா மகனாச்சேன்னு. பஸ்சை நிறுத்தி, திரும்பி வந்து பாக்கிறதுக்குள்ள, அவன் மறைஞ்சுட்டான். அந்த தெரு பேரு, ஏரியா மட்டும் தான் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. வேற எதையும் கண்டுபிடிக்க முடியல. ஆனா, யாத்ரா சேவை நிலையத்தில் சொல்லி வெச்சுருக்கிறேன். அவங்க கண்டு பிடிச்சு கொடுத்துடுவாங்கன்னு நினைக்கிறேன்,'' என்றாள்.
பயணம் முழுக்க பரபரப்பு தொற்றியிருந்தது. சிறுவயது சரவணன் முகம் மனக்கண்ணில் வந்து அவளையே முறைத்து பார்த்தது. 'படிடா படிடா...' என்று, ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை அடித்துக் கொண்டால் தான், புத்தகத்தையே எடுப்பான். அப்படிப் பட்டவன், பிளஸ் ௨வில், 98 சதவீதம் மார்க் எடுத்தான். எம்.ஐ.டி.,யில் கிடைத்த மெரிட் சீட்டில் பொறியியல் முடித்து, மேலே படிக்க, அண்டம் பற்றிய அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கிளம்பியவன் தான் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.
நினைக்க நினைக்க கண்ணீர் வந்தது. 'பாவி... பிறவியிலேயே முரடு, அடங்காத்தனம், தான் என்கிற அகங்காரம், புத்திசாலி என்ற அகந்தை. தலையணை சைசில் எத்தனை புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருப்பேன், எவ்வளவு பீஸ் கட்டியிருப்பேன்... எழுப்பி எழுப்பி உட்கார வைத்து, தேநீர் போட்டுக் கொடுத்து, பணத்திற்காக அண்ணன், அக்கா என்று உறவுகளிடம் கடன் வாங்கி, எத்தனை செமினார்களுக்கு அனுப்பி வைத்திருப்பேன்... ஐயோ பாவம், புருஷனை இழந்த நம்ம அம்மா, வெறும் 'எக்ஸ்போர்ட்' வேலையை வைத்துக் கொண்டு, இப்படி நம்மோட படிப்புக்காக கஷ்டப்படுறாளேன்னு ஒரு நாளாவது நினைச்சு பாத்துருப்பானா...'என்று மனதுக்குள் புலம்பினாள் சரோஜா.
பத்மா சொல்லி வைத்திருக்க வேண்டும். யாத்ரா சேவை செய்யும் பெண், இவளைப் பார்த்ததும், ஒரு முகவரியை கொடுத்து, தன் வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தாள். அவளுக்கு நன்றி சொல்லி, கிளம்பியபோது, நெஞ்சின் துடிப்பு அதிகரித்தது. அந்த முகவரியில் இறங்கி, அடுக்குமாடி கட்டடத்தின், இரண்டாவது தளத்தின் முதல் வீட்டின் கதவை,'படபட'க்கும் மனதுடன் தட்டினாள் சரோஜா.
கதவைத் திறந்தது சரவணன் தான். இவளைப் பார்த்ததும் உடனே முகம் மாறி, கண்கள் கலங்கின.
''அம்மா...'' என்று கூவி, கைகளை இறுகப் பற்றி,''உள்ளே வாம்மா,''என்று சந்தோஷத்துடன் தோளை அணைத்து, வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
''சரவணா...எப்படிப்பா இருக்கே?'' என்பதற்குள் அழுதுவிட்டாள் சரோஜா.
சோபாவில், அவளை உட்கார வைத்து, பக்கத்தில் உட்கார்ந்த சரவணன்,''என்னை மன்னிச்சிடும்மா... உன்னை நினைக்காத நேரமே இல்லம்மா. ஆனா, உன்னைத் தேடி வர முடியாத கோழையா இருந்துட்டேம்மா. பானு... இங்க பாரு... யார் வந்திருக்கிறதுன்னு,'' என்று, அவன் உணர்வுபூர்வமாய் படபடத்தான்.
பானுவா... யாரது? அவன் மனைவியா?
''வாங்க அத்தை, நீங்க இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்,'' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். தாமரை மலரைப் போன்ற மலர்ச்சியான முகம், கரிய கூந்தலின் அடர்த்தி, நீண்ட விழிகளின் அழகான இமைகள் என எழிலாக இருந்த அந்த இளம் பெண்ணை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சரோஜா.
''அம்மா, இது, என் மனைவி பானு,'' என்று அறிமுகப்படுத்தினான் சரவணன்.
''அத்தை நல்லா இருக்கீங்களா... மொதல்ல எங்கள நீங்க மன்னிக்கணும். உங்கள தேடி வந்து பாக்க வேண்டியவங்க நாங்க. கூடவே வெச்சு ஒரே குடும்பமா வாழ வேண்டியவங்கள எங்கள தேடி வர வெச்சுட்டோம்; மன்னிச்சிடுங்க,'' என்று கைபிடித்து, மென்குரலில் சொன்ன அந்தப் பெண்ணை, ஈர விழிகளுடன் பார்த்தாள் சரோஜா.
''அம்மா... மார்க்கெட் போய், காய்கறியும், பழங்களும் வாங்கிட்டு வாறேன்,''என்றவன் மனைவியிடம் திரும்பி, ''பானு... அம்மாவுக்கு ஸ்டிராங்க காபி குடு,'' என்று கூறி விட்டு, காரை எடுத்து கிளம்பினான் சரவணன்.
அவனைப் பார்க்க பார்க்க சரோஜாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. முட்டைக் கண்ணாடிக் குள் இறுக்கமான கண்களும், பார்வையுமாக இருந்த சரவணன் எங்கே? பத்து வார்த்தை கேட்டால் ஒரு சொல்லில் பதிலும், பல சமயங்களில் அந்த ஒற்றைச் சொல்லும் இல்லாமல் சைகையில் பதில் சொல்லும் அந்த அழுத்தக்கார சரவணனா இவன்? எப்படி இப்படி மென்மையாக மாறினான்... யார் செய்த மாயம் இது என்று நினைத்தாள்.
வீடு எளிமையாக இருந்தது. மகளுக்கு சைக்கிள் விட சொல்லிக் கொடுக்கும் தந்தை - மகள் ஓவியம், அந்த இடத்தின் மகிமைக்கு சாட்சி சொன்னது. சாப்பாட்டு மேஜை மேல், ஒரு மண்குடுவையில் குளிர்ப்பிரதேசத்து செடி வைக்கப்பட்டிருந்தது. எழுதும் மேஜை மேல் இருந்த, 'தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்பவனே உலகின் முதல் சீர்திருத்தக்காரன்...' என்று எழுதப்பட்ட பெர்னாட்ஷா வாசகம் என்று, எல்லாமே அந்த வீட்டு மனிதர்களின் ரசனைக்கும், மன அமைப்புக்கும் இலக்கணம் வகுத்தன.
''பானு...'' என்று அழைத்தாள்.
''சொல்லுங்கத்தே...''
''என் வயத்துல பொறந்த சரவணனா இவன்...என்னால நம்பவே முடியலம்மா,'' என்றாள்.
''நீங்க ஏன் இப்படி கேட்கிறீங்கன்னு எனக்கு புரியுது அத்தே... ஆனா, சொன்னா நீங்க வருத்தப்படாம, இயல்பா எடுத்துக்கணும்,''என்றாள்.
''சொல்லுமா,'' என்றாள்.
''இன்னிக்கு சரவணன் ஒரு சயன்டிஸ்டா, திறமையான ஆராய்ச்சியாளரா, முக்கியமான ஆளா இருக்கார்ன்னா அதுக்கு காரணம், நீங்க கொடுத்த கல்வி. ஆனா, வெறும் அறிவு மட்டும் வாழ்க்கையாகி விட முடியாது. மூணு ஆண்டுகளுக்கு முன், ஒரு அறிவியல் ஒர்க் - ஷாப்புல சரவணனை நான் சந்திச்சேன். அண்ட சராசரம் பத்தின அவரோட பேரறிவு, என்னை பிரமிக்க வெச்சது. ஆனா, வீடு பத்திக் கேட்டபோது, மஞ்சள் பெயின்ட், நீல கிரில், ரெண்டு ரூம், கிச்சன்னு சொன்னார். வீடுன்னா அவருக்கு அது மட்டும் தான் மனசுல பட்டிருக்கு.
''சின்ன வயசுல இருந்தே படிப்பு, அது கொடுக்கிற அறிவு, அதன் மூலமா வர்ற அந்தஸ்து, பணம் இது மட்டும் தான் அவர் மனசுல பதிவாயிருக்கு. வீட்டை விட்டு வந்ததுல, எந்தக் குற்ற உணர்ச்சியும் அவரிடம் இல்ல. அவரை நீங்க அறிவாளியா மாற்றினதுடன், அன்பே பெறாத ஏழையாவும் ஆக்கிட்டீங்க. அறிவு, செல்வத்தையும், வசதியையும் தரலாம். ஆனா, அன்பு தான் அமைதியைத் தரும்; வாழ்வில் பேரின்பத்தைக் கொடுக்கும்; வாழ்வின் அர்த்தத்தை சொல்லித் தரும்,''என்ற பானுவை கண்சிமிட்டாமல் பார்த்தாள் சரோஜா.
''எந்த ஒரு எலக்ட்ரிக் பொருளையும் பார்ட் பார்ட்டா பிரிச்சு, மறுபடி பிரமாதமா ஒண்ணு சேர்க்க அவருக்கு தெரியும். ஆனா, ஒரு செடி வளர்றது பத்தி தெரியாது. அன்பா, 'சாப்பிட்டியா கண்ணு'ன்னு கேட்டா பதில் சொல்ல வராது. மழை வந்தா, எவ்வளவு செ.மீ., பெய்ததுன்னு சொல்லத் தெரியும்; ஆனா, மண்வாசம் தெரியாது. எவ்வளவு டெசிபல்ல பறவையின் குரல் கேக்குதுன்னு தெரியும்; ஆனா, குயில் பாடும் ராகத்தோடு இசையை அனுபவிக்க தெரியாது; கார்லயும், விமானத்துலயும் போறதை விட, அம்மாவின் மடியில் உட்கார்ந்து போவதைத் தான் குழந்தை விரும்பும்ங்கிற சின்ன விஷயம் கூட அவருக்கு புரியாது.
''மெல்ல மெல்ல அவருக்கு அன்புலகத்தை அறிமுகப் படுத்தினேன்; பாசத்தின் மேன்மையை உணர வைத்தேன். பொம்மையின் கை உடைந்ததற்காக, அழுகிற சிறுமியை காட்டினேன்; கான்வாஸ் இல்லாத, அந்தி வானத்தின் அழகை ரசிக்க வைத்தேன். மெல்ல மெல்ல அவர் மாறினார்; இயல்பான மனிதனாக உருவெடுத்தார். புத்தகங்கள் வாசித்து, மழையை அனுபவித்து, உணவை ருசித்து, இசையை உள்வாங்கி, இப்போது ஒரு அற்புதமான மனிதாராகி விட்டார் அத்தை,''என்றாள்.
''கண்ணே பானு... உனக்கு தான் எத்தனை அன்பான மனது, எவ்வளவு கரிசனம்... இந்த சின்ன வயதில் எவ்வளவு பொறுமை... தண்ணீரை உறிஞ்சுகிற களிமண் பொம்மையாக, அவனை நான் ஆக்கி வைத்திருந்தேன். ஆனா, நீ கற்பூர பொம்மையா உருமாற்றி விட்டாய். வார்த்தைகள் கிடைக்கவில்லை அம்மா உனக்கு நன்றி சொல்ல,'' என்று கலங்கி அழுதாள் சரோஜா.
வி.சம்யுக்தை
