
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 22 வயது பெண். கல்லுாரியில் படித்து வருகிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். அப்பா, ரெடிமேட் துணி கடை வைத்துள்ளார். அம்மா, இல்லத்தரசி.
தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்த எங்கள் குடும்பத்தில், எவனோ ஒருவன் கல்லெறிந்து வருகிறான்.
சமீபத்தில், யாரோ ஒருவன், என் அம்மாவுக்கு, ஆபாசமாக கடிதம் எழுதி அனுப்பினான். அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கள் தெருவில் இருக்கும், மூன்று நபர்கள் மீது, எனக்கு சந்தேகம் உள்ளது. அதை எப்படி ஊர்ஜிதம் செய்து கொள்வது என, தெரியவில்லை.
தபால் அல்லது கூரியர் மூலமாக அக்கடிதம் வருவதில்லை. வீட்டு மெயின் கேட்டில் மாட்டப்பட்டிருக்கும், 'லெட்டர் பாக்ஸ்'ல் போடப்பட்டிருக்கும்.
அப்பா, காலையிலேயே கடைக்கு சென்று விடுவதால், அம்மா தான் அப்பெட்டியிலுள்ள கடிதங்களை எடுத்து வருவார். அப்பா பெயருக்கு வரும் கடிதங்களை தனியாக எடுத்து வைத்து விடுவார்.
இந்த மொட்டை கடிதத்தில் அம்மா பெயர் இருப்பதால், பிரித்து படித்தால், எழுத கூசும் அளவுக்கு இருப்பதோடு, ஆபாசமாக படங்கள் வரைந்தும் இருக்கும்.
அக்கடிதத்தை என்னிடம் கொடுத்து விடுவார், அம்மா. இது எதுவும் என் அப்பாவுக்கு தெரியாது. தெரிந்தால், முதலில் எங்களை தான் குறை கூறுவார்.
அம்மா மீது சந்தேகப்பட்டு, எந்த நிலைக்கும் சென்று விடுவார். இப்போதெல்லாம், அதுபோன்ற மொட்டை கடிதங்கள் வந்தாலே நடுங்க ஆரம்பித்து விடுகிறோம். பிரித்துக் கூட பார்க்காமல், நெருப்பில் போட்டு எரித்து விடுகிறோம்.
நாங்கள் அமைதியாக இருப்பதால், எதிராளிக்கு சாதகமாகி விட்டதோ என்னவோ, ஒருநாள் விட்டு, ஒருநாள் வந்த கடிதம், இப்போதெல்லாம் தினமும் வர ஆரம்பித்து விட்டது.
'லெட்டர் பாக்ஸை' கழட்டி உள்ளே வைத்து விட்டால், கேட்டிற்குள் வீசி எறிந்து சென்று விடுகிறான். எப்போது யார் என்று கண்டுபிடிக்க, ஒருநாள் முழுவதும், ஜன்னல் வழியாக கண்காணித்தும் பயனில்லை. தப்பித்தோம் என்று நினைத்தால், இரவு நேரத்தில் போட்டு சென்றுள்ளான்.
காலையில், வாசல் தெளிக்க வந்த பணிப்பெண் எடுத்து வந்து கொடுத்தாள். அன்று, அப்பாவிடமிருந்து கடிதத்தை மறைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
வாசலில், சி.சி.டி.வி., கேமரா பொருத்த அப்பாவிடம் கூற, அவரும் கூடிய விரைவில் செய்வதாக சொல்லியுள்ளார்.
மன உளைச்சலில், நிம்மதி இல்லாமல் துடிக்கிறார், அம்மா. இப்பிரச்னையிலிருந்து விடுபடுவது எப்படி அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
உங்கள் வீட்டுக்கு வரும் மொட்டைக் கடிதங்களை எழுதுபவர், யாரென்பது உன் அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம்.
அம்மாவுக்கு மொ.கடிதம் போடுபவன், 1980களில் பிறந்த, பூமர் அங்கிளாக தான் இருக்கணும். தவறான உறவுக்காக அம்மாவிடம் முயன்று, தோற்றவனாக அவன் இருக்கலாம். மேலே சொன்ன காரணம் இல்லாமல், வெறுமனே தெரு சண்டைக்கு பழிவாங்க, அவன் விரும்பினாலும் விரும்பி இருப்பான்.
மூன்று நபர்கள் மீது சந்தேகப் பட்டியல், நீ தயாரித்ததா அல்லது அம்மா தயாரித்ததா?
லெட்டர் பாக்ஸை கழற்றி வைத்தது நல்ல விஷயம்.
நீ, அம்மாவிடம் தனியாக பேசு. அம்மாவுக்கு வயது 47க்குள் தான் இருக்கும்.
அம்மா பக்கம் துளியும் தவறில்லை என்பதை உறுதி செய்து கொள்.
மொ.கடிதம் எழுதும் மனநோயாளி யார் என்பதை விசாரி.
அடுத்து, நீ செய்ய வேண்டியவைகளை கூறுகிறேன்...
* கிடைத்த மொட்டைக் கடிதங்கள் அனைத்தையும் பாதுகாத்து வை
* 7827170170 தேசிய பெண்கள் உதவி எண்ணுக்கோ அல்லது 181க்கோ தொலைபேசியில் தகவல் தெரிவி. 181ல், உன் புகாரை உடனே எடுத்துக் கொள்வர். நீ, உங்களின் அடையாளம் காட்டாத புகாரை, தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கலாம்
* ஒரு கட்டத்தில் இது அப்பாவுக்கு தெரிந்து விடுமே என பயப்படாதே. பயம் தான் நம் பலவீனம். 25 ஆண்டுகள், குடித்தனம் பண்ணிய அம்மாவின் பத்தினிதனத்தை, எந்த தேவதை வந்து சான்றுரைக்க வேண்டும்?
* கிரிமினல், உங்கள் தெருவில் அல்லது பக்கத்து தெருவில் தான் இருப்பான். ஒரே நாளில் கண்டுபிடித்து, காலில் அல்லது கையில் மாவுக்கட்டு போட வைத்து விடுவர். நீயும், அம்மாவும் போய், அந்த மனநோயாளியின் முகத்தில் காறி உமிழ்ந்து, சாணியை கரைத்து ஊற்றிவிட்டு வாருங்கள்
* அவனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி, கைநாட்டும் பெற்று, இரு கைகளையும் உடைத்து விடச் சொல். அந்த தண்டனை அவனுக்கு ஆயுளுக்கும் போதும்.
எது எப்படியோ வீட்டு வாசலில், சி.சி.டி.வி., கேமரா வைத்து, போனில் உங்கள் வீட்டு வாசலை கண்காணியுங்கள். அனுமதி இல்லாமல் யாராவது பிரவேசித்தால் விரட்டலாம்.
—- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.