
பா - கே
'நீங்கள் கடைசியாக யாருக்கு கடிதம் எழுதினீர்கள், நினைவிருக்கிறதா?' என்று திடுதிப்பென்று, உதவி ஆசிரியர்களிடம் கேட்டார், மூத்த செய்தியாளர். 'கடந்த, 1980 காலக்கட்டத்தோடு, கடிதம் எழுதும் வழக்கம் மறைந்து விட்டதாகவே தோன்றுகிறது...' என்றார், லென்ஸ் மாமா. தொடர்ந்தார், மூத்த செய்தியாளர்: ஒ ரு காலத்தில், தொலைதுாரத்தில் வசிக்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு கடிதம் எழுதி தொடர்பில் இருந்திருப்பர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற விசேஷ தினங்களுக்கு, வாழ்த்து மடல்கள் அனுப்பியும், பெற்றும் மகிழ்ந்திருப்பர்.
இன்று, கடிதம் எழுதும் வழக்கமே ஒழிந்து விட்டது. பண்டிகைகளின் போது மொபைல் போனில், வாழ்த்து மெசேஜ், அதுவும் வேறு யாராவது தயார் செய்து வைத்திருக்கும் வாழ்த்து செய்தியை அப்படியே காப்பி அடித்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அனுப்புவதோடு சரி.
இது, இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் இதே நிலை தான்.
மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, சில நொடிகளில் வாழ்த்துகளையும், தகவல்களையும் பரிமாறி கொள்கின்றனர்.
நவீன தொழில்நுட்பங்கள் வந்த பின், அஞ்சல் சேவையை மறக்கடிக்க செய்து விட்டது. விளைவு, தபால் சேவையின் தேவை படிப்படியாக குறைந்து விட்டது. கடித போக்குவரத்துக்கு பாலமாக இருந்த அஞ்சலகங்களும், 'டிஜிட்டல்' யுகத்திற்கு ஏற்ப, தன் சேவையை மாற்றிக் கொண்டுள்ளன.
பெரும்பாலான நாடுகளில், படிப்படியாக அஞ்சல் சேவைகள் குறைந்து வருகின்றன. கடித போக்குவரத்து சேவையை முற்றிலுமாக நிறுத்திய முதல் நாடாக, ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான, டென்மார்க் இடம் பிடித்துள்ளது.
அந்நாடு, 401 ஆண்டுகளாக தொடர்ந்த அஞ்சல் சேவையை, டிச., 30, 2025 முதல், முற்றிலும் நிறுத்தி விட்டது. முழுக்க முழுக்க, 'டிஜிட்டல்' சேவைக்கு மாறி விட்டது.
டென்மார்க் நாட்டின் அஞ்சல் சேவையை நிர்வகித்த, 'போஸ்ட் நார்ட்' நிறுவனத்தின் அதிகாரி, இசபெல்லா பெக் ஜோர்ஜென்சன் கூறும்போது, 'கடந்த, 20 ஆண்டுகளாக, கடித போக்குவரத்தில், 90 சதவீதம் சரிவை சந்தித்துள்ளோம்.
'இப்போது, எங்களது தகவல் தொடர்புகளில் பெரும்பகுதி மின்னணு மயமாகிவிட்டது. உலகின் மிகவும், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்ட நாடுகளில், நாங்கள் இணைந்து விட்டோம். எங்கள் நாட்டு பொதுமக்களிடமும் இதுகுறித்து பெரிய புரிதல் ஏற்பட்டுள்ளது.
'கடந்த, 2000ம் ஆண்டில், 'போஸ்ட் நார்ட்' நிறுவனம், 150 கோடி கடிதங்களை வினியோகித்தது. கடந்த ஆண்டு, அது, 11 கோடியாக குறைந்து விட்டது. குறைவான கடிதங்கள் அனுப்பப்படுவதால், அஞ்சல் தலைகளின் விலையை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயம். டென்மார்க்கில், ஒரு சாதாரண கடிதத்தை அனுப்ப அதிகம் செலவாகிறது(இந்திய மதிப்பில், 615 ரூபாய்.) மிகப்பெரிய நஷ்டத்தை தவிர்க்கவே, கடித போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்து விட்டோம்.
'எங்களது இந்த முடிவு, உலகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது...' என்கிறார், நிறுவன அதிகாரி, ஜோர்ஜென்சன்.
அஞ்சல் சேவையை நிறுத்தியதற்கு டென்மார்க்கில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டாலும் முதியவர்களையும், தொலைதுார பகுதிகளில் வசிப்பவர்களையும் கடுமையாக பாதிக்கும். மருத்துவம் மற்றும் அரசு சார்ந்த சில விஷயங்களுக்கு கடித போக்குவரத்தை மட்டுமே சார்ந்திருப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள், அஞ்சல் சேவை முடக்கப்பட்டதால் பாதிக்கப்படுவர் என்கின்றனர், எதிர்ப்பாளர்கள்.
ஆனாலும், டென்மார்க் அரசு, தன் முடிவில் உறுதியாக இருக்கிறது.
மக்கள் தொடர்ந்து கடிதம் அனுப்பலாம். ஆனால், கூரியர் சர்வீஸ் போன்று அவை தனியார் நிறுவனம் மூலம் மட்டுமே இனி தொடர முடியும் என்று அறிவித்துள்ளது, அரசு.
அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமே என்று கருத்து தெரிவிக்கின்றனர், மக்கள்.
- இப்படி கூறி முடித்தார், மூத்த செய்தியாளர். 'நம்மூரில், தந்தி சேவை நிறுத்தப்பட்டபோது இத்தகைய சிக்கலை நாமும் சந்தித்தோம். தந்தி சேவை நிறுத்தப்படும் கடைசி நாளன்று பலரும், தங்கள் உறவினர், நண்பர்களுக்கு, தந்தி அனுப்பி திருப்திப்பட்டு கொண்டனரே நினைவிருக்கிறதா? 'டென்மார்க் நாட்டின் நிலைமை நமக்கு வர வேண்டாம். அவசியமானதற்கு மட்டும், 'டிஜிட்டல்' முறையை பயன்படுத்துவோம். கூடிய மட்டும் கடித சேவையை தொடருவோம். அது, நம் ரத்தத்தோடு, வாழ்வோடு இணைந்தது...' என்றேன், நான்.
ப
சமீபத்தில் வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்தது. இ ந்தியாவின், பீகார் மாநில அரசியல்வாதி ஒருவரின் விலை உயர்ந்த மொபைல் போனை திருடிய கொள்ளை கூட்டம் ஒன்று, அதை பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளது.
புகார் செய்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மொபைல் போனை மீட்பது மற்றும் கொள்ளைக் கும்பலை கைது செய்தல் ஆகிய பொறுப்புகளை, தர்பங்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர், மதுபாலா தேவியிடம் ஒப்படைத்தனர்.
திருடப்பட்ட, மொபைல் போனில் வந்த அழைப்பு எண்களை ஆய்வு செய்து, கொள்ளைக் கும்பலின் தலைவன் யாரென கண்டுபிடித்தார், மதுபாலா தேவி.
இதையடுத்து, கொள்ளைக் கூட்டத்தை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்ட, மதுபாலா தேவி, ஒரு சாதாரண பெண் போல, திருடர் தலைவனுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, அவனின் அழகில் மயங்கி காதலில் விழுந்து விட்டதாக தேன் சொட்டப் பேசி, அவனை மயக்கி இருக்கிறார்.
துவக்கத்தில் ஏற்க மறுத்த தலைவன், மதுபாலா தேவியின் தொடர் பேச்சால், அவரது காதல் பொறியில் சிக்கியுள்ளான்.
இதையடுத்து, அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்ட கொள்ளையர் கூட்ட தலைவன், மதுபாலா தேவியின் புகைப்படத்தை கேட்டுள்ளான்.
சாதுர்யமாக யோசித்த மதுபாலா, தன் புகைப்படத்துக்கு பதிலாக, நம்மூர் நடிகை, நயன்தாராவின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.
தனக்கு வந்துள்ள புகைப்படத்தில் இருப்பவர், பிரபல நடிகை, நயன்தாரா என்று தெரியாத தலைவன் அவரது அழகில் மயங்கி, மதுபாலா கூறிய, தர்பங்கா டவர் பகுதிக்கு வந்துள்ளான்.
அப்போது அவனை, மற்ற காவல் துறையினரின் உதவியுடன் மடக்கி பிடித்த மதுபாலா தேவி, அவனிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தார். கொள்ளைக் கூட்டத்தினரையும் கைது செய்துள்ளார்.
இது எப்படி இருக்கு?

