
டி.எல்.குமார், விழுப்புரம்: 'தமிழக அரசின் ஒத்துழைப்பு இன்மையே, ரயில்வே திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம்...' என்கிறாரே, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
மத்திய ரயில்வே அமைச்சகம் கேட்ட நிலத்தின் அளவில், ஒரு பங்கைக் கூட தமிழக அரசு கையகப்படுத்தி கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி நம்மூரில் புதிய ரயில்களை கொண்டு வர முடியும்! 'மத்திய அரசு, பட்ஜெட்டில் நமக்கு கொடுத்தது முட்டை. அதனால், நாமும் அவர்களுக்கு தேர்தலில் முட்டையே கொடுக்க வேண்டும்...' என்று, பொய் பிரசாரம் தான் செய்ய வேண்டும்!
ரா.அருண்குமார், புதுச்சேரி: 'கமல்ஹாசன் பதிலடியைத் தாங்க முடியாமல், பா.ஜ.,வினர் கதறுகின்றனர்...' என்று, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறியுள்ளாரே...
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேற்கோள் காட்டியது, ஈ.வே.ரா., பேசியதைத் தான்! இது கூட புரியாமல், லோக்சபாவில், 'யாரோ எழுதிக் கொடுத்ததை' அப்படியே படித்து, கம்பு சுற்றியுள்ளார், கமல்ஹாசன். இதற்கு, திருமாவளவனும் முட்டு கொடுக்கிறார்!
வெ.சென்னப்பன், நீலகிரி: காங்., கட்சி எம்.பி., மாணிக்கம் தாகூர், 'ஆட்சியில் பங்கு வேண்டும்...' என, கோரிக்கை வைத்துள்ளாரே...
தவறில்லை! ஓட்டு சேகரித்து, வெற்றி பெற உதவும் கட்சிகளுக்கு உரிய மரியாதை செய்து தானே ஆக வேண்டும்! ஆனால், ஏனோ, காங்., தலைவர் சோனியாவுக்கும் அது பிடிக்கவில்லை; தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதிக்கும் பிடித்ததில்லை; அவர் மகன் ஸ்டாலினுக்கும் பிடிக்கவில்லை!
* வனிதா ராம், கோவை: 'எனக்கு கடன் தந்த நிறுவன உரிமையாளர் என் மகன் என்பது எனக்குத் தெரியாது...' என, நீதிமன்றத்தில் கூறியுள்ளாரே தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு...
'வானத்தில் வெள்ளை காக்கா பறக்கிறது பாருங்கள்...' எனச் சொல்லி இருக்கிறார், டி.ஆர்.பாலு. அதை நீங்கள் நம்பி விட்டீர்களா, வனிதா?
ப்ரீதா ரங்கசாமி, சென்னை: 'தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதீர்கள்...' என, நடிகை, த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளாரே...
ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவது இல்லையே! பொது வாழ்க்கைக்கு வந்து விட்டார் என்பதாலேயே, ஒருவரை, தரக் குறைவாக விமர்சிப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. சரியாகத் தான் சொல்லி இருக்கிறார், த்ரிஷா!
* பா.பொன் ரோஸ், சென்னை: வாடகை தாய் என்ற பெயரில், பச்சிளம் குழந்தைகளை விற்று மோசடி செய்த, தெலுங்கானா டாக்டரையும், அந்த குழுவைச் சேர்ந்தவர்களையும் பற்றி என்ன நினைக்கத் தோன்றுகிறது?
மனதில் ஈரமே இல்லாமல், தன் தொழிலுக்கே துரோகம் செய்திருக்கிறார், அந்த டாக்டர். குழந்தைகளை விற்போர் மட்டுமல்ல; வாங்குவோரையும் பிடித்து, பொது மக்கள் முன்னிலையில், கடுமையான தண்டனை கொடுத்தால், இத்தகைய பாதகங்களைச் செய்ய, யாரும் முன்வர மாட்டார்கள்!
எம்.ஏ.ஆதம், அரக்கோணம்: 'சரிகம' நிறுவனம் வசம் இருக்கும், 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த, இளையராஜாவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறதே...
இசையைக் கேட்காத, ரசிக்காத காதுகளே இல்லையே, ஆதம்! தன் இசையை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தடைபோட்ட, 'ராயல்டி' புகழ் ராஜாவுக்கு சரியான, வெகுமதி இந்த தீர்ப்பு!
மு.க.இப்ராஹிம், துாத்துக்குடி: பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அரசியல் தலைவர்கள் கோபப்பட்டு, செய்தியாளர்களை கடிந்து கொள்வது சரியா?
சரியே அல்ல. பொது வாழ்வுக்கு வந்தபின், மக்களின் மிகச் சிறிய சந்தேகத்தைக் கூட, தீர்க்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு. மக்களின் சந்தேகங்களைத் தான், பத்திரிகையாளர்கள் கேள்விகளாக கேட்கின்றனர். பதில் சொல்ல முடியாமல், கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பது அல்லது அடிக்க கை ஓங்குவது ஆகியவற்றை ஒரு அரசியல்வாதி செய்கிறார் என்றால், அவர், வெளியில் சொல்ல முடியாத தவறு எதையோ செய்கிறார் என்று அர்த்தம்!

