
மு.நாகூர், ராமநாதபுரம்: உ.பி., அரசு பள்ளிகளில், தேநீர் தயாரித்தல், பக்கோடா சுடுதல், வாகனங்களுக்கு, 'பஞ்சர்' ஒட்டுதல் உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது குறித்து?
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், இதுபோன்ற தொழில் பயிற்சி தொடர்பான பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. நம் மாநில அரசு, பின்பற்ற வேண்டுமே!
* வி.மாரீஸ்வரி, குமரகிரி, துாத்துக்குடி: 'உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால், பழுக்கவில்லை...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?
சீக்கிரம் பழுத்துவிடுவார்!
* ம.வசந்தி, திண்டிவனம்: எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலின், அனைத்து வடிகால் வசதியையும் செய்து விட்டாரா?
வடகிழக்குப் பருவ மழை வந்தால் தெரியும்!
ராஜா சிங், தஞ்சை: ஈரான், இஸ்ரேலைத் தாக்கினால், மூன்றாம் உலகப் போர் வந்துவிடுமா?
வராது!
ஏ.அப்துல் மாலிக், திண்டுக்கல்: 'தினமலர்' நாளிதழில் வெளியாகும் செய்திகள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கின்றனரே... தினமும், 'தினமலர்' நாளிதழை, அதிகாரிகள் படிக்கின்றனரா?
படிப்பதால் தானே நடவடிக்கை எடுக்கின்றனர்!
ம.அகல்யா, மருதுார்குறிச்சி, குமரி: நம், 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, வெளிநாட்டு வாசகர்கள் இருக்கின்றனரா?
'ஆன்லைனில்' படித்து வருகின்றனர்; உலகம் முழுவதிலுமிருந்து, 'இ-மெயிலில்' கடிதங்கள் வருகின்றன!
ஆர்.சம்யுக்தா, மதுரை: தங்களுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்வோர், அவர்களுடைய கேமராவில் படம் எடுத்துக் கொள்ள அனுமதி உண்டா?
கிடையாது! அவர்களது மொபைல்போனில் புகைப்படம் எடுக்க முயல்வர்; நான், மறுத்து விடுவேன்!
கே.காசி, திருவண்ணாமலை:இரவில் துாங்கும்போது, உங்களுக்கு கனவுகள் வருவதுண்டா?
அதிகாலை, 4:00 மணிக்கு வரும்; கண் விழிக்கும் போது, அனைத்தும் மறந்து விடும்!

