
க.கதிரேசன், சென்னை: மனிதர்கள், 50 வயதைக் கடந்து விட்டால், மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
மறதி என்பது, கவனக்குறைவு இருந்தால் மட்டுமே ஏற்படும்; அது எந்த வயதில் இருந்தாலும்!
கவனத்தோடு இருந்தால், 120 வயதானாலும் மறதி ஏற்படாது!
ஆர், ராஜ்மோகன், முட்டியூர், விழுப்புரம்: 'பா.ஜ.,வை, பிராமணர்கள் மட்டும் அல்லாது, தமிழர்கள் யாருமே நம்பக் கூடாது...' என்கிறாரே, நடிகர் எஸ்.வி.சேகர்?
இவர் எந்தக் கட்சிக்குப் போனாலும், பதவியை எதிர்பார்க்கிறார்; அதை யாரும் கொடுப்பதில்லை. அதனால், இப்படி எல்லாம் பேசுகிறார்!
எம்.ராஜேந்திரன், லால்குடி: நாவல் எழுதுவது கடினமா... சிறுகதை எழுதுவது கடினமா?
நாவல் எழுதுவது சுலபம்; நீளமாக எழுதி முடிவைச் சொல்லி விடலாம்.
சிறுகதை எழுத-
* மூன்று அல்லது நான்கு கதாபாத்திரம் தான் இருக்க வேண்டும்.
* கருத்தையும் சுருங்கச் சொல்லி, முடிவையும், 'பாசிட்டிவ்' ஆக சொல்ல வேண்டும்!
* சி.சசிகலா, விருதுநகர்: இன்றைய அரசியல்வாதிகள், மேடையில் பேசும்போது, எழுதி வைத்துக் கொண்டு வாசிக்கின்றனரே...
அதையாவது சரியாக படிக்க வேண்டுமே... பெரும்பாலானோருக்கு, தமிழே தெரிவதில்லை; தப்பும் தவறுமாக அல்லவா படிக்கின்றனர்!
* பா.ஜெயக்குமார், வந்தவாசி: 'பெண் கல்வியை, அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...
நல்லது தான்; அவரே செய்யலாமே!
டி.ஜெயசிங், கோவை: நடிகர் நெப்போலியனின் உடல் ஊனமுற்ற மகனை, நல்ல முழு உடல் தகுதி உள்ள பெண் மணந்து உள்ளது எதைக் காட்டுகிறது?
அந்தப் பெண்ணின் பெருந்தன்மையைக் காட்டுகிறது!
எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: 'லென்ஸ் மாமா' என்று சொல்வதற்கு காரணம், அவர் போட்டோகிராபர்; 'நடுத்தெரு நாராயணன்' என்று சொல்வதற்கு காரணம் என்ன?
தெருத் தெருவாக பழைய புத்தக கடைகளைத் தேடி அலைந்து, தகவல் திரட்டுவதால் அவர், 'நடுத்தெரு' நாராயணன்!
ஆர்.சேஷாத்ரி, சென்னை: கேள்வி வெளியாவதற்கு, 'சீனியர், நிரந்தர வாசகர், சந்தாதாரர்' என்ற தகுதிகள் வேண்டுமா?
அதெல்லாம் கிடையவே கிடையாது. நீங்கள் தான் ஒவ்வொரு முறையும், குறைந்தபட்சம், 20 கேள்விகள் எழுதி அனுப்புகிறீர்களே... அனைத்தையும் படித்து விடுகிறேனே!