
* அ.மீனாட்சி, கன்னியாகுமரி: சிலர், தாங்கள் படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே... இதற்கு என்ன காரணம்?
எந்த பணியாக இருந்தால் என்ன... வெற்றியாளர்களாக வந்து விடுகின்றனரே!
ஆர்.வள்ளியம்மாள், சென்னை: அந்துமணி கேள்வி - பதில் புத்தக தொகுப்பின் சர்க்குலேஷன் எப்படி?
அச்சடிக்க அடிக்க காலியாகி விடுகிறது!
பிரான்சிஸ்கா, சென்னை: எல்லா ஜோக்குகளையும் படிப்பீர்களா?
அனைத்து ஜோக்குகளையும், பொறுப்பாசிரியர் தான் படிப்பார்; அவர் தான் தேர்வு செய்வார்!
பெ.பொன்ராஜ பாண்டி, மதுரை: எதிர்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால், தொடர்ந்து, பார்லி.,யின் இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டு, நம் வரிப்பணம் வீணாகிறதே?
அவர்களைத் தேர்வு செய்து, சபைக்கு அனுப்புவது, நம் தவறு தான்!
க.கல்பனா, சென்னை: 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' நுால் வெளியீட்டு விழாவில், வி.சி.க., தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளாதது, தி.மு.க., தந்த நெருக்கடியா?
வேறு என்னவாக இருக்க முடியும்?
* சி.வெங்கடேஷ், சென்னை: 'டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்...' என, ஸ்டாலின் சொன்னது, அதை தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையாக எடுத்துக் கொள்ளலாமா?
அவரது மகனை முதல்வராக அமர்த்தி, இவர் பதவி விலகி விடுவார்!
பி.அனுமந்த்ரா, சென்னை: தன் மகனை முதல்வர் பதவியில் அமர்த்திப் பார்க்க விரும்பும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திண்டிவனம் மக்களைக் கூட பார்த்து, ஆறுதல் கூறவில்லையே?
அவருக்கு வயதாகி விட்டது; வெள்ளத்தில் எல்லாம் நடக்க முடியாது!
எஸ்.எம்.தங்கமீனாள், அலவாக்கோட்டை, சிவகங்கை: அந்துமணியாரிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருள் எது?
வாசகர்களான முதலாளிகளின் அன்பு!