
வி.திருமுகில், கள்ளக்குறிச்சி: குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே பணம் சேமிப்பு பற்றி கற்பிப்பது அவசியமா?
மிக மிக அவசியம். உண்டியல் கொடுத்து, பணம் சேமிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்!
*****
பி.சிவா, கல்லிடைக்குறிச்சி: 'தி.மு.க.,வினர், பொட்டு வைக்கக் கூடாது; கையில் கயிறு கட்டக் கூடாது...' என, அக்கட்சியின், அ.ராஜா கூறி இருக்கிறாரே...
தி.மு.க.,வில், பெரும்பாலானோர் ஹிந்துக்களே. ராஜா சொல்வதை, அவர்கள் கேட்பரா?
*******
* ந.மாலதி, துாத்துக்குடி: தங்கள் கட்சியில் வக்கீல்கள் இருந்தும், தங்கள் மீது உள்ள வழக்குகளுக்காக, தமிழக அரசியல்வாதிகள், வட மாநில வக்கீல்களை வைத்து வாதாடுவது ஏன்?
தமிழக வக்கீல்கள் மீது, நம்பிக்கை இல்லை போலிருக்கிறது; அதனால் தான், வட மாநில வக்கீல்களை அமர்த்துகின்றனர்!
*******
* எஸ்.ஐஸ்வர்யா, கோபி, ஈரோடு: 'தமிழகத்தில் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வரும்...' என்கிறாரே, பா.ஜ.,வின் அமித்ஷா?
அது அவரது கனவு; என்றுமே பலிக்காது!
*******
எல்.மூர்த்தி, கோவை: கட்சியை சீரமைக்கும், காங்., பிரியங்காவின் முயற்சி, அக்கட்சியின் வளர்ச்சிக்கு கை கொடுக்குமா?
அதற்கான முதிர்ச்சியும் அவரிடம் இல்லை; பெரிய தலைகளைத் தாண்டி, அவரால் சாதிக்கவும் முடியாது!
******
ம.வசந்தி, திண்டிவனம்: சட்டசபையில் வெளியேற்றப்படும் எம்.எல்.ஏ.,களை, குண்டுகட்டாக துாக்கிச் செல்லும் முறையை மாற்ற மாட்டார்களா?
வெளியேற்றப் படுபவர்களுக்கு கால் இல்லையா அல்லது சபையை மீறித்தான் நடப்பரா... எதுவும் கிடையாது; எல்லாமே, 'டிராமா' தான்!
******
சிவராம சுப்ரமணியன், திருநெல்வேலி: திருப்பூரில் ஆங்காங்கே, ஹிந்தியில் அறிவிப்பு பலகை தென்படுவது குறித்து...
நம்மூர்க்காரர்கள், உடலுழைப்பில் ஈடுபடுவதில்லை. திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவரையே பணி அமர்த்த வேண்டியுள்ளது. அவர்கள் படிக்க வசதியாக, ஆங்காங்கே ஹிந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது!
******
டி.ரவீந்திரன், சென்னை: தமிழகத்தில், அனைத்து வசதிகள் இருந்தும், சீன கார் நிறுவனம், தன் தொழிற்சாலையை தெலுங்கானாவில் அமைக்க முடிவெடுத்திருப்பது, ஏன்?
இங்குள்ள அரசியல்வாதிகள், 'கட்டிங் ரேட்'டை அதிகப்படுத்தி விட்டனர் என்பதாலேயே, இங்கு வரவேண்டிய வெளிநாட்டு தொழிற்சாலைகள், மற்ற மாநிலங்களுக்கு சென்று விடுகின்றன!