PUBLISHED ON : பிப் 15, 2026

ஜி.சாந்தி, சென்னை: கர்நாடகாவில், போலீசாரின் பிறந்த நாள், திருமண நாளில் கட்டாய விடுப்பு வழங்க, அம்மாநில டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளாரே...
மிக நல்ல திட்டம்! அதிகப்படியான வேலை அழுத்தத்துடன் பணிபுரியும் போலீசாருக்கு இந்த திட்டம், மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வார விடுமுறையுடன், நிம்மதியாக அவர்கள் பணி செய்யும் வகையில், போதுமான அளவு போலீசாரை பணி அமர்த்தவும் வேண்டும். இந்த திட்டம், நம் மாநிலத்துக்கும் மிக மிக அவசியம்!
ஆர்.பிரதீபன், சென்னை: சென்னையில், மழைநீர் வடிகால் ஓட்டையில், மாநகராட்சி, கொசுவலையை வைப்பதைப் பற்றி...
அ.தி.மு.க., செல்லுார் ராஜு, மதுரையில் வைகை அணை வற்றிப் போகாமல் இருக்க, 'தெர்மாகோல்' போட்டு மூடிய கதையை விட, பல மடங்கு, 'குபீர்' சிரிப்பை வரவழைக்கும் தமாஷ் இது! பலரும் திட்டித் தீர்த்தபோது, 'ஒரு கவுன்சிலரின் ஐடியா இது...' என, நைசாக நழுவி விட்டார், மேயர் பிரியா. 'மேயர்' என்ற மேன்மைமிகு பதவியில் அமர்வோருக்கு, எந்த இடர்பாடையும் களையும் வகையில், விசாலமான அறிவு வேண்டும். முன்னாள் மேயரான, இன்னாள் முதல்வராவது, கொசுப் பிரச்னையை களைவது குறித்து சொல்லிக் கொடுக்கலாம்; நடக்குமா?
* வே.ஜெயசீலி, சென்னை: 'திராவிட மாடல் அடுத்த ஆட்சியில், இன்னும் பல கனவு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன...' எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், என்னென்ன திட்டங்கள் என்று ஏன் தெரிவிக்கவில்லை?
ஏற்கனவே அறிவித்த திட்டங்களில் பல, கனவாகிப் போய்விட்டதால், வேறு திட்டங்கள் எதுவுமே அவர் மனதில் தோன்றாமல், 'கனவு நிலையிலேயே' இருக்கின்றன. அதான் நம்மிடமும், 'உங்கள் கனவுகளைக் கூறுங்கள்' எனக் கேட்டிருக்கிறார். பாவம் விடுங்கள்; பொல்லாப்பு எதுவும் சொல்ல வேண்டாம்!
* மு.க.இப்ராஹிம், துாத்துக்குடி: 'சுயமரியாதையை இழந்து, உலக நாடுகளிடம் கடன் கேட்டுத் திரிவது அவமானமாக உள்ளது...' என, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பது பற்றி...
இத்தனை ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட விஷயத்தை, வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார், ஷெபாஸ்... ஸபாஷ்! கடன் வாங்கும் பணம் அனைத்தையும் தீவிரவாதத்திற்கு தீனி போட்டே அழிப்பதை விட, நாட்டு மக்களுக்கு நல்லது செய்து, பொருளாதாரத்தை உயர்த்தலாம். அண்டை நாடுகளும் நிம்மதியாக இருக்கும்; உலக நாடுகளும் பாராட்டும்!
த.பாலசுப்ரமணியன், கோவை: 'உயர்கல்வி நிறுவனங்களை மீட்க, உடனடி நடவடிக்கை அவசியம்...' என, முதல்வருக்கு, கல்வியாளர் பாலகுருசாமி கோரிக்கை வைத்துள்ளது, எதைக் காட்டுகிறது?
உயர்கல்வி நிறுவனங்கள், நோய்வாய்ப்பட்டு, அதி தீவிர சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. அதைத்தான் கல்வியாளர் பாலகுருசாமி சொல்லி இருக்கிறார். அவரின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற கதையாக ஆகாமல் இருந்தால் சரி!
எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: 'விஜய் ஊழல் செய்யவே மாட்டான்...' என, த.வெ.க., விஜய், தன்னைப் பற்றி பேசி இருப்பது பற்றி...
'மக்களுக்காகவே வாழ்ந்தான்; மக்களுக்காகவே திட்டங்களை தீட்டினான்; தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்...' என்று, தன்னைப் பற்றி, முதல்வர் ஸ்டாலினும், பெருமிதம் கொள்கிறார். ஆக... தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொள்வது, அரசியல்வாதிகளின் நடைமுறையாகி விட்டது!

