PUBLISHED ON : மார் 22, 2026

முன்னாள் முதல்வர், அண்ணாதுரை காலத்தில் துவங்கி, அவ்வப்போது அணி மாறிய மிக மூத்த அரசியல் பிரமுகர், பண்ருட்டி ராமச்சந்திரன்.
தே.மு.தி.க., கட்சியில் விரும்பி இணைந்து, விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவராக அமர வைத்ததில் பெரும்பங்கு வகித்தவர், இவர். தே.மு.தி.க.,வின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக பணியாற்றியவர்.
பவள விழா கொண்டாடும் வயதில் இருந்த, பண்ருட்டியாரை ஐந்தாவது முறையாக, ஆலந்துார் சட்டமன்ற உறுப்பினராக ஆளாக்கி அழகு பார்த்தவர், விஜயகாந்த்.
டிசம்பர் 10, 2013ல் தன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார், பண்ருட்டி ராமச்சந்திரன். சற்று ஓய்வு தேவை என்பதால், பதவி விலகியதாக, பண்ருட்டியாரிடம் இருந்து அறிக்கை வந்தது. உடனடியாக, அரசியலுக்கும் முழுக்கு போட்டார். 2005 முதல் 2013 வரை, விஜயகாந்தின் அரசியல் சாணக்கியராக, தே.மு.தி.க.,வின் ஏற்றத்துக்கு ஏணியாக பாடுபட்டார், பண்ருட்டியார்.
ஆனால், பதவி விலகிய கையோடு, மார்ச் 20, 2014, மேல்நோக்குநாள், சுப முகூர்த்த தினம் என்று வீட்டில் சொல்லி இருப்பரோ என்னவோ, ஜெயலலிதாவின் முன் அடக்கமாக நின்று, அ.தி.மு.க., உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார், பண்ருட்டியார்.
க டந்த, 2014ல் நடந்த, மக்களவை தேர்தலில், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., எல்லாம் ஓரணியில் திரண்டன. எந்த பா.ம.க.,வை எதிர்த்து, விஜயகாந்த் போராடினாரோ, அதே பா.ம.க.,வுடன் இணைந்து மக்களைச் சந்திக்க வேண்டிய தர்ம சங்கடம்.
தேசிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று கூறிய, விஜயகாந்த், மாநில அணிகள் இல்லாமல் தேசியம் கிடையாது என்பதை உணர்ந்து கொண்டார்.
மொத்தம், 14 வேட்பாளர்களுடன் தே.மு.தி.க., தேர்தலை சந்தித்தது. அவர்களில் அநேகர், விஜயகாந்தின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள். விஜயகாந்தின் மைத்துனர், சுதீஷ் முக்கியமான நட்சத்திர போட்டியாளர்.
தே.மு.தி.க., போட்டியிடும் எந்த தொகுதியிலும், ஆரம்பம் முதல், விஜயகாந்துக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்காமல், தொடர்ந்து அவரை அவமானப்படுத்தியது, பா.ம.க., அதனால், செம கோபத்தில் இருந்தார், விஜயகாந்த். புதுச்சேரி கூட்டத்தை அடிக்கடி ரத்து செய்ய நேர்ந்தது. புதுச்சேரியில் போட்டியிட்டது, பா.ம.க.,
'தே.மு.தி.க., மேடையில் ஏற மாட்டேன்...' என்று, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், மருத்துவர் ராமதாஸ் வீர சபதம் மேற்கொண்டிருந்தார். விளைவு, நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க., 37 இடங்களில் வெற்றி பெற்று, புதிய வரலாறு படைத்தது. பி.ஜே.பி., காங்கிரஸுக்கு அடுத்து, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க., முன்னேறியது.
சரித்திர தோல்வியை முதன்முதலாக சந்தித்தது, காங்கிரஸ் கட்சி. தமிழக கட்சி ஒன்று தேசிய அளவில், மூன்றாவது இடத்திற்கு சென்றது அதுவே முதல் முறை. நினைத்ததை சாதித்த பூரிப்பில், மேலும் உற்சாகத்தோடு பணியாற்றினார், ஜெயலலிதா.
தே.மு.தி.க.,வுக்கு வெறும், ஐந்து சதவீத வாக்குகளே கிடைத்தன. விஜயகாந்த் நிறுத்திய ஒருவர் கூட, வெற்றி பெறவில்லை. பி.ஜே.பி., மற்றும் பா.ம.க., தலா ஒரு இடத்தை கைப்பற்றின. நரேந்திர மோடி முதன் முதலாக பாரத பிரதமரானார்.
செ ப் டம்பர் 27, 2014ல், ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது... 'அப்போது தமிழக முதல்வராக இருந்த, ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. உடனடியாக, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், ஜெயலலிதா அடைப்பு...' என, பிற்பகல் 3:30 மணிக்கு, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா அளித்த தீர்ப்பால், நியூஸ் சானல்கள் பரபரப்பாகின.
ஆனால், மிகத் துணிச்சலாக தன் கருத்தை பதிவு செய்தார் எதிர்க்கட்சி தலைவர், விஜயகாந்த்...
'உப்பை தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற நியதியை யாராலும் மாற்ற முடியாது. இதற்கு தமிழகத்தின் முதல் அமைச்சர், ஜெயலலிதாவும் விதி விலக்கல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு, மிகப்பெரிய பதவியில் இருந்தாலும், சட்டத்தின் முன், அனைவரும் சமம் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி அ.தி.மு.க.,வினர் நடத்தும் வன்முறை சம்பவங்களை, மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்...' என்று கூறினார், விஜயகாந்த்.
செப்டம்பர் 30, 2014-ல் 'தர்மதேவதைக்கு அநீதியா?' என்று கேட்டு, தென்னிந்திய நடிகர் சங்கம், உள்ளிட்ட கலைத்துறையின் பெரும்பாலான சங்க உறுப்பினர்கள், ஜெயலலிதாவை விடுதலை செய்ய சொல்லி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதம் இருந்தனர்.
விஜயகாந்துக்கு மிக நெருக்கமான பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
க டந்த, 2014ல், விஜயகாந்தின் சிங்கப்பூர் பயணம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. தன் மகன் சண்முகப்பாண்டியனை, 'ஹீரோ'வாக அறிமுகப்படுத்தி, சகாப்தம் படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார், விஜயகாந்த். அதற்கு, 'லொகேஷன்' பார்ப்பதற்காக, சிங்கப்பூர் சென்றதாக செய்திகள் கசிந்தன. அந்த பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பினார், விஜயகாந்த். சென்னை விமான நிலையத்தில், 'மீடியா'வின் பார்வையில் சிக்கி கொண்டார்.
எப்போதும் கம்பீரமாக நடை பயிலும், கேப்டன், அன்று சக்கர நாற்காலியில் முகத்தை மூடியவாறு வெளியேறினார்.
அதற்கு பின், நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில், அப்போதைய தமிழக முதல்வர், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்சி குறித்த வினாக்களுக்கு, 'ஒரு மாசமா நான் ஊர்ல இல்ல. தமிழ் பேப்பர் படிக்கல. அதனால, உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை...' என்றார்.
பலமான, 10 சதவீத வாக்கு வங்கியை பின்புலமாக கொண்டு, வேக வேகமாக வளர்ந்து வந்த தே.மு.தி.க., மக்களவை தேர்தலில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. நான்கே ஆண்டுகளில், அதில் பாதியளவு ஆதரவு மட்டுமே எஞ்சி நின்றது.
அடுத்து, 2016 சட்டமன்ற தேர்தலில் என்ன நடந்தது?
- தொடரும்- பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073

