
கோலிவுட்டை கதறவிடும், ரஜினி!
சூர்யாவின், கங்குவா உள்ளிட்ட சில படங்களை தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், ரஜினியின், 170வது படமான, வேட்டையன் படம், தீபாவளிக்கு திரைக்கு வரப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ரஜினி படத்துடன் மோதினால் தங்கள் படங்களின் வசூல் பெரிய அளவில் பாதிக்கும் என, தீபாவளிக்கு வெளியாக இருந்த அத்தனை படங்களும் பின்வாங்கி விட்டன. அந்த அளவுக்கு தன், 73வது வயதிலும் கோலிவுட் மார்க்கெட்டில், 'தில்'லாக நின்று, சொல்லி அடித்துக் கொண்டிருக்கிறார், ரஜினி.
சினிமா பொன்னையா
ரூ.100 கோடியில் வீடு வாங்கிய ஜோடி!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ள, நடிகை தீபிகா படுகோனே, திருமணத்திற்கு பிறகும், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, கர்ப்பமாக இருக்கும் அவருக்கு இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்க உள்ளது. இந்நிலையில், தங்களது குழந்தைக்காக மும்பையில் உள்ள பாந்த்ராவில், 100 கோடி ரூபாய் மதிப்பில், ரன்வீர் சிங்- - தீபிகா படுகோனே தம்பதியினர், ஒரு வீடு வாங்கி உள்ளனர்.
நான்கு மாடிகள் கொண்ட, இந்த வீட்டில், நீச்சல் குளம், 'ஜிம்' மற்றும் மாடித்தோட்டம் என, சகல வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
— எலீசா
'ரூட்'டை மாற்றும் சமந்தா!
குஷி படத்தை அடுத்து விஜயின், 69வது படத்தில் நடிக்கப் போகும் சமந்தா, 'பிக்கில் பால் லீக்'கில் பங்குபெறும் சென்னை அணியை வாங்கி இருக்கிறார். தற்போது, பட வாய்ப்புகள் இல்லாததால், இந்த அணியை திறம்பட நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும், 'பிக்கில் பால்' விளையாட பயிற்சியும் எடுத்து வருகிறார். எதிர்காலத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட இன்னும் சில விளையாட்டு அணிகளை வாங்கி, இந்திய அளவில், பல போட்டிகளை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார், சமந்தா.
— எலீசா
மகளை களம் இறக்கும், லிவிங்ஸ்டன்!
சினிமாவில் வில்லன், 'ஹீரோ' மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும், லிவிங்ஸ்டன், தன் மகள், ஜோவிதாவை, நடிகை அம்பிகாவின் மகனுக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடிக்க வைத்தார். ஆனால், அந்த படம் கிடப்பில் உள்ளது.
இதன் காரணமாக, சின்னத்திரை, 'சீரியல்'களில் தற்போது நடித்து வருகிறார், ஜோவிதா. இருப்பினும், மகளை சினிமாவில் பெரிய 'ஹீரோயினி' ஆக பார்க்க வேண்டும் என்பதற்காக, அவரது ஆல்பத்தை கோலிவுட் இயக்குனர்களின் பார்வைக்கு அனுப்பி, பட வேட்டை நடத்தி வருகிறார், லிவிங்ஸ்டன்.
— சி.பொ.,
பாடலாசிரியரான, யாத்ரா!
நடிகர் தனுஷின் மூத்த மகன், யாத்ரா நடிகராக களம் இறங்க தயாராகி வருகிறார். தற்போது, ராயன் படத்தையடுத்து புதுமுகங்களை வைத்து, தனுஷ் இயக்கி இருக்கும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில், 'கோல்டன் ஸ்பெரோ...' என்ற பாடலை எழுதி இருக்கிறார், யாத்ரா.
இப்படி சினிமாவில் பாடலாசிரியராக, 'என்ட்ரி' கொடுக்கும் யாத்ராவுக்கு, எதிர்காலத்தில் அப்பா தனுஷை போலவே நடிப்பது மட்டுமின்றி, படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் இருப்பதாக கூறுகிறார்.
சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பீட்சா நடிகருடன், மூன்றெழுத்து படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட அலம்பல் செய்து, கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார், உலக நாயகரின் வாரிசு. இதையடுத்து, எந்த இயக்குனரும் அவரை படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை.
தற்போது, உலக நாயகரை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவர், உச்ச நடிகரை வைத்து, தான் இயக்கி வரும் புதிய படத்தில், அவரை நடிக்க வைத்திருக்கிறார். இதை வைத்து, விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக, சில இயக்குனர்களை தேடி சென்று, உலக நாயகரின் வாரிசு, வாய்ப்பு கேட்டபோதும், மணிக்கணக்கில் அவருடன் அரட்டை அடிப்பவர்கள், இவர் பட வாய்ப்பு என்றதும் தெறித்து ஓட்டம் பிடித்து விடுகின்றனர்.
அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் 'ஹீரோ'களை அம்மணி மதிக்காமல் நடந்து கொண்டதால், ஒட்டுமொத்த கோலிவுட்டே வெறுத்து ஒதுக்கத் துவங்கி விட்டது.
சினி துளிகள்!
* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், கூலி படத்தில் நடித்து வருகிறார், ஸ்ருதிஹாசன்.
* பரத் நடித்து வரும் ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக, நான்கு நடிகையர் நடிக்கின்றனர்.
* கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தில் இன்னொரு, ஹீரோவாக நடிக்கிறார், அரவிந்த்சாமி. இப்படத்தை 96 படத்தை இயக்கிய, பிரேம்குமார் இயக்கியுள்ளார்.
தற்போது ரஜினி உடன், வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் மஞ்சு வாரியர். அடுத்து விஜய் சேதுபதியுடன் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!