
'ரிஸ்க்' எடுக்க தயாரான, ரவி மோகன்!
பராசக்தி படத்தில் வில்லனாக நடித்த நடிகர், ரவி மோகன், அதையடுத்து, கராத்தே பாபு என்ற படத்தில் அதிரடியான அரசியல்வாதியாக நடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வரும்போது, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதைப்பற்றி கவலைப்படாத, ரவி மோகன், 'வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்றால், 'ரிஸ்க்' எடுத்துதான் ஆக வேண்டும். அதனால், நாட்டு நடப்புகளை சொல்லக்கூடிய எப்படிப்பட்ட, 'ரிஸ்க்'கான கதைகளில் நடிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன்...' என்று இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
நடனமாட வாய்ப்பு கேட்ட பிரியங்கா சோப்ரா!
ஹிந்தி நடிகை, பிரியங்கா சோப்ரா, ஆங்கில படங்களில் நடிக்க துவங்கிய பிறகு, இந்திய படங்களில் அவர் நடிக்கவில்லை. இதனால், 'இந்திய சினிமாவில், 'டூயட்' பாடல் பாடி, நடனமாடுவது போல், ஹாலிவுட் படத்தில், என்னால் நடிக்க முடியவில்லை. அது, எனக்கு பெரும் குறையாகவே இருக்கிறது...' என, தன் தோழிகளிடம் கூறி வந்தார்.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்திய சினிமாவில் நடிக்க வந்துள்ள அவர், இயக்குனர், ராஜமவுலி இயக்கி வரும், வாரணாசி என்ற பல மொழிகளில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார்.
'எனக்கு நடனம் ஆடுவதற்கு இரண்டு பாடல்களாவது தர வேண்டும்...' என்று இயக்குனர், ராஜமவுலியிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். முதலில் அவருக்கு ஒரு பாடல் காட்சி மட்டுமே வைத்திருந்த இயக்குனர், ராஜமவுலி, நடிகை, பிரியங்கா சோப்ராவின் நடன ஆர்வத்தை புரிந்து, இப்போது அவருக்கு இன்னொரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.
— எலீசா
ராஷ்மிகாவின் கோரிக்கை!
படத்துக்கு படம், 'ரொமான்டிக்' வேடங்களில் நடித்து, தனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதாக கூறும் நடிகை, ராஷ்மிகா மந்தனா, தற்போது, 'ஆக்ஷன்' கதைகளில் கதையின் நாயகியாக உருவெடுத்திருப்பதோடு, இயக்குனர், அட்லி இயக்கத்தில், தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில், வில்லி அவதாரமும் எடுத்துள்ளார்.
இனிவரும் காலங்களில், 'ஆக்ஷன்' மற்றும் வில்லி என, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக கூறும் அவர், 'அவசியம் இருந்தால் மட்டும், 'ரொமான்ஸ்' காட்சிகளை வைத்துக்கொள்ளுங்கள்...' என்றும் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
— எலீசா
ரத்தம் சிந்தி நடித்த, சூரி!
தற்போது, மண்டாடி என்ற தமிழ் படத்தில், 'ஹீரோ'வாக நடித்து வரும் நடிகர், சூரி, 'முன்பெல்லாம் படத்துக்கு படம் ஜாலியாக சட்டையில் மண் ஒட்டாமல் நடித்தேன். ஆனால், 'ஹீரோ'வான பிறகு கடுமையான உழைப்பாளியாகி விட்டேன். அதிலும், மண்டாடி படத்தில், மீனவர் வேடத்தில் நடிப்பதால் பல காட்சிகளில் ரத்தம் மற்றும் வியர்வை சிந்தி நடித்துள்ளேன். இப்படி ஒரு கஷ்டத்தை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
பிரம்மாண்ட இயக்குனரின் வாரிசு நடிகை, சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், கடைசியாக அவர் நடித்த படம் கிடப்பில் போடப்பட்டதால், புதிய படங்களுக்கு யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை.
சினிமாவில் பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்று ஆசைப்படும் வாரிசு நடிகை, இயக்குனரான தந்தைக் குலத்திடம், தன்னை நடிக்க வைத்து, ஒரு படம் இயக்குமாறு தொல்லை கொடுத்து வருகிறார்.
ஆனால், ஏற்கனவே அவர் இயக்கிய இரண்டு மெகா படங்கள், 'அட்டர் பிளாப்' ஆகிவிட்டது. 'இந்த நேரத்தில் உன்னை வைத்து படம் எடுத்து, இருக்கிற, 'மார்க்கெட்'டையும் நான் கெடுத்துக் கொள்ள முடியாது...' என்று, மகளுக்கு பிடி கொடுக்காமல், ஓடிக்கொண்டிருக்கிறார்.
இதனால், பிரம்மாண்டத்துக்கும், வாரிசுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து கொண்டிருக்கிறது.
சினி துளிகள்!
* இயக்குனர் சங்கரின் மகளும், நடிகையுமான, அதிதி ஷங்கர் நடித்த, ஒன்ஸ் மோர் என்ற தமிழ் படம் திரைக்கு வராமல், கிடப்பில் உள்ளது.
* வாத்தி என்ற தமிழ் படத்தில் நடிகர், தனுஷுடன் நடித்த மலையாள நடிகை, சம்யுக்தா மேனன், தற்போது, தி பிளாக் கோல்ட் என்ற தமிழ் படத்தில் கதையின் நாயகியாக, 'ஆக்ஷன் ரோலில்' நடித்து வருகிறார்.
* நடிகர், விஜய் சேதுபதி நடித்த, மகாராஜா படம், 'சூப்பர் ஹிட்' அடித்த நிலையில், தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர், நித்திலன் சுவாமிநாதன்.
* மலையாள சினிமாவில் இருந்து வந்த நடிகை, மமிதா பைஜு, தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இன்னொரு மலையாள நடிகையான, அனுஷ்வரா ராஜன் என்பவரும், வித் லவ் என்ற தமிழ் படத்தில் நடிக்க வந்துள்ளார்.
அவ்ளோதான்!

