PUBLISHED ON : பிப் 22, 2026

பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம்
பிப்ரவரி 28ம் தேதி, இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இந்திய அறிவியல் வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான, 'ராமன் விளைவை' இந்திய இயற்பியலாளர், சர். சி.வி.ராமன் கண்டறிந்த நாளை குறிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே எடுத்துரைப்பதும், அன்றாட வாழ்வில் அறிவியல் எவ்வாறு பயன்படுகிறது என்பதை விளக்குவதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிப்ரவரி 28, 1928ல், ஒளியின் தன்மை குறித்து ஒரு உண்மையை கண்டறிந்தார், சர் சி.வி.ராமன். அதுவே, 'ராமன் விளைவு' எனப் பெயர் பெற்றது.
ஒளி, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும்போது, அந்த ஒளியின் அலைநீளம் மாறுகிறது என்பதை தன் கண்டுபிடிப்பின் மூலம் அவர் நிரூபித்தார்.
அதாவது, ஒரு திட, திரவ அல்லது வாயுப் பொருளின் வழியாக ஒளி செல்லும்போது, அந்த ஒளியின் சில பகுதி சிதறடிக்கப்படுகிறது. சிதறடிக்கப்பட்ட ஒளியின் அதிர்வெண், மூல ஒளியின் அதிர்வெண்ணிலிருந்து வேறுபடுகிறது.
இந்த விளைவு, ஒரு பொருளின் மூலக்கூறு அமைப்பை கண்டறியும் அறிவியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இது, வேதியியல், மருத்துவம், தடயவியல் மற்றும் வானியல் போன்ற பல்வேறு துறைகளில் மூலக்கூறுகளை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும், 'ராமன் நிறமாலையியல்' என்ற நுட்பத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது.
இந்தக் கண்டுபிடிப்புக்காக, சர் சி.வி.ராமனுக்கு, 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அறிவியலுக்கான, நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் இவர் தான்.
தேசிய அறிவியல் தினம், இந்த மகத்தான அறிவியல் சாதனையை போற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது.
அறிவியல் கண்காட்சிகள், விவாதங்கள், பேச்சரங்குகள் மற்றும் வினாடி- வினா போட்டிகளை நடத்துகின்றன, இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் அறிவியல் கழகங்கள்.
சர் சி.வி.ராமன் தவிர, ஜகதீஷ் சந்திர போஸ், ஹோமி பாபா, மேக்நாத் சாகா, சத்யேந்திர நாத் போஸ் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்ற, பல இந்திய விஞ்ஞானிகள் உலகிற்கு அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.
இன்று, இந்தியாவின் விண்வெளித் திட்டங்களான சந்திரயான் மற்றும் மங்கள்யான் ஆகியவை உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையிலும், மருந்துகள் உற்பத்தியிலும் இந்தியா மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது. தேசிய அறிவியல் தினம், இந்தப் பயணத்தை தொடரவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அடித்தளத்தை பலப்படுத்தவும் உதவுகிறது.
சர் சி.வி.ராமன் மற்றும் மற்ற இந்திய விஞ்ஞானிகள் நமக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய சொத்து, அறிவியல் மனப்பான்மை. எந்தவொரு விஷயத்தையும் கண்மூடித்தனமாக நம்பாமல், கேள்வி கேட்டு, ஆராய்ந்து, காரண காரியத்துடன் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அணுகுமுறையே அறிவியல் மனப்பான்மை. அறிவியலின் மூலம் மட்டுமே நாம் வறுமை, நோய் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க முடியும்.
சர் சி.வி.ராமனின் உத்வேகத்துடன், நாமும் அன்றாட வாழ்வில் அறிவியல் சிந்தனையைப் பயன்படுத்தி, இந்தியாவின் எதிர்காலத்தை ஒளிரச் செய்ய வேண்டும்.
ஆறாம் தம்புரான்

