
வட மொழி எழுத்துக்களான அகரம் முதல் க்ஷகரம் வரையிலான, 51 எழுத்துக்களின் படி, கணபதிக்கு 51 வடிவங்களை நம் முன்னோர் உருவாக்கினர். அவற்றில், 16 மூர்த்தங்கள் மிகச்சிறந்தவையாக வகுத்தனர்.
பால கணபதி: அகரம் முதலான அனைத்துக்கும் மூல முதற் பொருள். இளஞ்சிவப்பு திருமேனியர். குழந்தை வடிவானதால், நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் தவறுகளை பொறுத்தருளும், கருணாகர ஏகாக் ஷர மூர்த்தி.
தருண கணபதி: எட்டு கைகளுடன் கூடிய, ஏக தந்தர். ஆபத்து தருணங்களில் காவலாக வந்திருந்து காக்கும், செம்மேனிப் பெருமாள்.
பக்த கணபதி: பக்தி செய்பவரை காக்கும், பரம தயாளன். சந்திர ஒளி பொருந்திய, வெண்ணிற திருமேனியன். பக்தி சிந்தனையுடன் ஆராதிப்பவருக்கு சகல சித்திகளையும் தந்தருளுவார்.
வீர கணபதி: கஜமுகா சூரனை அழித்த, மாவீர கணநாதர். அந்திவான செவ்வண்ண திருமேனியன், கொடியவரை வீழ்த்தி அடியவரை காத்தருள்வார்.
சக்தி கணபதி: ஆனந்த மூர்த்தியான இவர், பவள நிறத்தவர். அச்சமின்றி மக்கள் வாழ அபயமுத்திரை திருக்கோலத்துடன் காட்சி தந்தருள்பவர்.
துவிஜ கணபதி: நான்கு முகங்களை கொண்டவர். உள்ளன்புடன் தன்னை தியானிப்பவர்களுக்கு, கல்வி ஞானத்தையும், தைரியத்தையும் வாரி வழங்கும் ராஜ மூர்த்தி.
சித்தி கணபதி: நான்கு திருக்கரங்களுடன் கூடியவர். பொன்வண்ண மேனியன். பூரணமான விசுவாசிகளுக்கு பரிபூரணமாக தந்தருளும் நவசக்தி யோக சித்தியுடையவர்.
உச்சிஷ்ட கணபதி: சிற்றின்ப இல்லத்தார் பற்றுக்கும், பேரின்ப கோட்டைக்கும் இவரே தலைவர். கரும் பச்சை திருமேனியர். ஆறு திருக்கரங்கள் கொண்டவர்.
விக்ன கணபதி: பொன்வண்ண திருமேனியர். நம் எண்ணம் மற்றும் வேண்டுதலை செவ்வனே நிறைவேற்றுபவர்.
க் ஷப்ர கணபதி: செம்பருத்திப் பூவின் நிறத்தை ஒத்தவர். நாம் நினைத்த காரியங்களை செவ்வனே நிறைவேற்றுபவர்.
ஹேரம்ப கணபதி: பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பாக, ஐந்து திருமுகங்களை கொண்டவர். வெள்ளை திருமேனியன். சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பவர்.
லட்சுமி கணபதி: சித்தி - புத்தி தேவியருடன் திகழ்பவர். எட்டு திருக்கரங்களை உடையவர். ஈரேழு உலகம் அனைத்தையும் தன் பேழை வயிற்றுக்குள் கொண்ட, அண்டசராசர தத்துவ வித்தர்.
மஹா கணபதி: இளம் பிறைச் சந்திரனை திருமுடியில் சூடியவர். பத்து திருக்கரங்களை கொண்டவர். துதிக்கையில் ரத்தின கலசத்தை ஏந்தி பக்தரைக் காக்கும், பரம தயாளன்.
விஜய கணபதி: செந்நிற வண்ணன். பக்தர்களுக்கு வெற்றியை மழையாகப் பொழியும், மத்தள வயிறன்.
நிருத்த கணபதி: மஞ்சள் நிறத் திருமேனி கொண்ட, பெருமூர்த்தி. ஆறு திருக்கரங்கள் கொண்டவர். சரணடையும் பக்தர்களை காக்கும் கடவுள்.
ஊர்த்துவ கணபதி: தங்க நிறமுடையவர். எட்டுத் திருக்கரங்கள் கொண்டவர். அச்சத்தை தீர்த்து நமக்கு ஆனந்த வாழ்வு அளிக்கும், ஸ்ரீஆனந்த விநாயக மூர்த்தி.
பாலகணபதி
விழுப்புரம் மாவட்டம், இடையாறு மருந்தீசர் கோவிலில் உள்ள பாலகணபதி, குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்குப் பிரியமான லட்டு, பலாச்சுளைகளுடனும், கீழ் இரு கரங்களில் அபய முத்திரையும், கரும்பும் வைத்தபடி காட்சி தருகிறார்.
நர்த்தன கணபதி!
ஒரு காலை, தாமரை மலர்கள் தாங்க, மறுகால், துாக்கிய திருவடியாகவும், சதுர்புஜங்களில் ஒன்று அபிநயம் பிடிக்க, தாண்டவ நிலையில் காட்சியளிக்கும் விநாயகர் தான், நர்த்தன கணபதி. மதுரை, வாதாபி மற்றும் திருக்கச்சூர் போன்ற தலங்களில் மட்டுமே இவரை தரிசிக்கலாம்.
* ஜெயங்கொண்ட சோழபுரம் அருகே உடையார்பாளையத்தில், வில்லேந்திய கோலத்தில் அருள்புரிகிறார், விநாயகர்.
* தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், அருள்மிகு புராதனவேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பிள்ளையாரின் செவியில் உள்ள துவாரத்தில், நம் வேண்டுதலை நினைத்து வைக்கப்படும் பூக்களை, விநாயகர் உள்ளே இழுத்துக் கொண்டால், நாம் நினைத்த காரியம் கைகூடும்.