sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானானந்தம் - கிடைத்ததே போதும்!

ஞானானந்தம் - கிடைத்ததே போதும்!

ஞானானந்தம் - கிடைத்ததே போதும்!


PUBLISHED ON : நவ 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து வந்தார், துறவி ஒருவர். அவர், அமைதியாக தியானம் செய்ய, பரந்து விரிந்து நிழல் தந்தது, அந்த மரம். அவ்வப்போது, அவருக்கு முன், இறைவன் காட்சி தருவார். இதைப் பார்த்து, மிகவும் சந்தோஷப்பட்டது, அந்த மரம்.

அடர்ந்து படர்ந்த பருவ காலம் வருகிற போது, கொத்துக் கொத்தாக மலர்கள் பூத்துச் சொரியும். ஆனால், அவற்றில் காய்களாக மாறுகிற பாக்கியம் எல்லாப் பூக்களுக்கும் கிடைப்பதில்லை. மிஞ்சி போனால், நுாறு காய்கள் பிஞ்சுவிட்டு, காய்த்துப் பழுக்கும்.

இது, அந்த மரத்துக்கு ஒரு குறையாக இருந்தது. இவ்வளவு பூக்களும் காயானால், எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தது, அந்த மரம்.

தனக்கு குடை மாதிரி நிழல் தந்த, அந்த மரத்தை அதுவரை நிமிர்ந்து பார்த்ததில்லை, துறவி.

இப்போது, மரம் ஏதோ முணுமுணுப்பது கேட்டு, நிமிர்ந்து பார்த்து, 'என்ன சொல்கிறாய், மகளே...' எனக் கேட்டார், துறவி.

'ஒன்றுமில்லை... என்னுடைய எல்லாப் பூக்களும் காயாவதில்லை. எதிரில் உள்ள அந்த மரத்தை பாருங்கள்... இலைகளே இல்லாமல் அவ்வளவும் காய்களாகி சடசடக்கின்றன. நானும் அதே மாதிரி காய்த்து, குலுங்க வேண்டும் என, கடவுளிடம் கேளுங்கள்...' என்றது, அந்த மரம்.

லேசாக புன்னகைத்து, 'இதையெல்லாம் கடவுளிடம் கேட்க வேண்டியது இல்லை. நானே அப்படி ஆக்குகிறேன்...' எனக் கூறி, தன் முன், தரையில் தேங்கி இருந்த மழை நீரை எடுத்து, அந்த மரத்தின் மீது தெளித்தார், துறவி.

அடுத்த சில நாட்களில், மரத்திலிருந்து பூக்கள் உதிரவே இல்லை. அவ்வளவும் பிஞ்சுகளாக மாறி, காய்களாக தொங்கின. மரத்துக்கு அது சந்தோஷமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான காய்களை சுமக்க முடியாமல் திணறியது. மழை பெய்ய துவங்கியதால் இன்னும் கனமாகி தவித்தது.

இப்போது மரத்தின் முணுமுணுப்பை கேட்டு தலை நிமிர்ந்தார், துறவி.

'சுவாமி, என்னை பழைய மாதிரியே ஆக்கி விடுங்கள். என்னால், இந்த சுமையைத் தாங்க முடியவில்லை...' என, அலறியது, மரம்.

'எந்த மரத்தில் எத்தனை பூக்கள் பூக்க வேண்டும், எத்தனை காய்கள் காய்க்க வேண்டும் என்பதை, இறைவனே தீர்மானிக்கிறார். அதை மாற்ற முயல்வது தவறு. இப்போது புரிந்ததா?' எனக் கேட்டு, மறுபடியும் ஆசீர்வதித்தார், துறவி.

பொலபொலவென காய்கள் உதிர்ந்தன. நிம்மதி பெருமூச்சு விட்டது, மரம்.

யார் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அதுதான் கிடைக்கும். அதை வைத்து, திருப்தி அடைய வேண்டும். அதைவிட்டு, புலம்புவதில் பயனில்லை.

- பி.என்.பி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us