PUBLISHED ON : டிச 15, 2024

வாழ்க்கைக்கு பணம் தேவை; அதேசமயம், பணமே வாழ்க்கை கிடையாது.
இந்த எளிய தத்துவத்தை உணர்ந்து, சமுதாயத்தில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும். உங்களை வாழ்த்துவோர் குறைவாக இருந்தாலும், திட்டுவோர் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டு, பணத்தால் எதையும் செய்யலாம் என்று நினைத்தால், நிச்சயம் தோற்றுப் போய் விடுவோம்.
ஓர் ஊரில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தார், செல்வந்தர் ஒருவர். செல்வத்தின் பொருட்டு, பலரும் அவருக்கு தலை வணங்கினர்.
ஒருநாள், அந்த செல்வந்தர் இறந்து போனார். பூமியில் இருந்த அதே செருக்குடன் சொர்க்கத்திற்கு சென்றார்.
அங்கே, வாசலில் நின்றிருந்த காவலாளி, அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தான்.
'நான் மிகவும் நல்லவன்; நிறைய பேருக்கு உபகாரங்கள் செய்திருக்கிறேன்...' என்றார், செல்வந்தர்.
'எப்படி, எந்த விதங்களில் உபகாரங்கள் செய்துள்ளாய்?' என்று கேட்டான், காவலாளி.
'நான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், பசியால் வாடிய ஒருவருக்கு, 20 ரூபாய் கொடுத்து, உதவி செய்திருக்கிறேன். அப்புறம், வீடு கூட இல்லாமல், பிளாட்பாரத்தில் இருந்த ஒருவருக்கு, நேற்று, 10 ரூபாய் கொடுத்தேன்.
'இன்று கூட, இறப்பதற்கு முன், பிச்சைக்காரன் ஒருவனுக்கு, ஐந்து ரூபாய் தர்மம் அளித்தேன்...' என்று, தான் செய்த தான, தர்மங்களை பிரமாதப்படுத்தினார்.
இதைக்கேட்ட காவலாளி, கடவுளிடம் அனுமதி பெற்று வருவதாக கூறி, உள்ளே சென்றான்.
சற்று நேரத்தில் திரும்பி வந்தவன், 40 ரூபாயை செல்வந்தரிடம் கொடுத்தான்.
'நீங்கள் கொடுத்த, 35 ரூபாயுடன், ஐந்து ரூபாய் சேர்த்து கடவுள் உங்களிடம் திருப்பி தரச் சொன்னார். இப்போது, நீங்கள் நரகத்திற்கு செல்லலாம்...' என்றான்.
பணத்தால் எல்லாவற்றையும், எப்போதும் விலைக்கு வாங்கி விட முடியாது. அது, நிரந்தரமான முன்னேற்றமாகவும் இருக்காது!
- பி.என்.பி.,
அறிவோம் ஆன்மிகம்!
எந்த கோவிலாக இருந்தாலும், மூன்று முறை வலம் வர வேண்டும். சிவன் கோவிலில், நந்திக்கு வெளியே அனைத்து தெய்வ திரு உருவங்களை நினைத்து, நமஸ்கரிக்க வேண்டும்.