
விபரீதமான ஆர்வக் கோளாறு!
சமீபத்தில், உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். திருமணம் நடந்த மண்டபத்தில், பலர் கூடியிருந்தனர். மணமகன், திருமாங்கல்யம் கட்டும் நேரத்தில், மணமகனின் நண்பர்கள் ஆர்வக் கோளாறில் கலர் பேப்பர் துண்டுகள் கொட்டும் பட்டாசு மற்றும் ரசாயனத்தால் தயாரித்த, கலர் புகை வரும் பட்டாசுகளை வெடித்தனர். இதனால், மண்டபம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
இருபதுக்கும் மேற்பட்ட மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்ததால், புகை வெளியே செல்ல முடியாமல், அங்கேயே சுற்றியது.
பெண்கள், குழந்தைகள், வயதானோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனே, அனைவரும் மண்டபத்தை விட்டு, வெளியேறி விட்டனர்.
என் தமிழ் சொந்தங்களே... இது போன்ற மங்களகரமான நிகழ்ச்சியில் ரசாயனம் கலந்த கலர் புகை வெடிகளை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். ரசாயனம் கலந்த புகை நம் உடல்நலத்தை பாதிக்கும். மங்கள நிகழ்ச்சியின் போது, அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கலாமே!
- த.முருகேசன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
இப்படியும் ஒரு திருட்டு!
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, வேதனையான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அது...
'என் மனைவிக்கு, 'ஹார்ட் அட்டாக்' வர, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். சிகிச்சை பலனளிக்காமல் அவள் உயிரிழந்தாள். உடலை, வெள்ளைத் துணியில் சுற்றி தந்தது, மருத்துவமனை நிர்வாகம்.
'வீட்டில், 'பார்மாலிட்டி'க்காக சேலை கட்டுவதற்காக, அவள் உடலிலிருந்த, 'காடா' துணியை அகற்றியபோது, அவள் தலையில் இருந்த அடர்த்தியான தலைமுடி முழுவதும் வெட்டப்பட்டு இருந்தது.
'மருத்துவமனையில் யாரோ அதை வெட்டி எடுத்திருக்கின்றனர்...' என்றார் நண்பர், கண்ணீர் மல்க.
'ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்தவரின் தலைமுடி வெட்ட வேண்டிய அவசியம் இல்லையே... அவர்களிடம் சென்று கேட்கவில்லையா?' என்றேன்.
அதற்கு, 'மனைவியை இழந்த துக்கத்தில், மருத்துவமனை நிர்வாகத்திடம் வாதாடும் தைரியமோ, பணமோ இல்லை. சிகிச்சைக்கு முன் பல பேப்பர்களில் கையெழுத்து வாங்கினர். அதில், இதற்கும் அனுமதி எழுதி வைத்தார்களோ என்னவோ, தெரியவில்லை.
'மனைவியின் தலைமுடியை திருடி விட்டனர் என்பது மட்டும் நிச்சயம்...' என்றார்.
அவரது வார்த்தைகள் மனதை உருக்கின. நுாறு கிராம் முடி, 300 ரூபாய் வரை, விற்பனையாவதால், மரணமடைந்தவரிடமிருந்து கூட சுரண்ட ஆரம்பித்து விட்டனர்.
அறிவு, விழிப்பு, துணிவு இவையே இனி நம்மை காப்பாற்றும் ஒரே மருந்து
கவனம் மக்களே!
- மகேஷ் அப்பாசாமி, கன்னியாகுமரி.
உறவுகளை வலுப்படுத்தும் அணுகுமுறை!
என் தோழி மகளின் கணவர், தன் மனைவியின் மீது அதிக கட்டுப்பாடுகளை விதித்து, அவளது செயல்களை கண்காணித்து, அடிக்கடி குறை கூறி வந்தார்.
தோழியின் மகள், இயல்பிலேயே அமைதியானவள் என்பதால், கணவரை அனுசரித்து, ஆரம்பத்தில் பொறுமையாகவே இருந்தாள்.
கணவரின் அடக்குமுறை அதிகமாகவே அவருடன் மனம் திறந்து பேசினாள். கடந்த ஆறு மாதத்தில், அவருடனான வாழ்க்கையில் தான் உணர்ந்தவற்றை, உணர்ச்சி பூர்வமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளாள்.
மேலும், 'நான் உங்களோடு மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். உங்களை குறை கூற விரும்பவில்லை. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து, அன்புடன் வாழலாம். அதற்கு, உங்கள் குணநலன்களை சற்று மாற்றிக் கொண்டு, எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்...' என்றும் கூறியுள்ளாள்.
அவளது இந்த மென்மையான, ஆனால் உறுதியான அணுகுமுறை, அவளுடைய கணவன் மனதை மாற்றி, அவளை புரிந்து கொள்ளவும் வைத்தது.
உடனடியாக, தன் போக்கை மாற்றி கொண்டதோடு, மனைவியிடம் மரியாதையுடன் நடந்து கொண்டார், அவள் கணவர். இதனால், அவர்களது உறவில், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவியது.
இந்த அணுகுமுறை, கணவன் - மனைவி உறவில் மட்டுமின்றி, எல்லா உறவுகளிலும் பயன்படும். எதையும் குற்றச்சாட்டு போல வைக்காமல், நல்ல புரிதலுடன் மென்மையாக பேசி, உறவுகளை வலுப்படுத்துங்கள்.
- வீ.குமாரி, சென்னை.

