
மனநிலையை மாற்றும் மது தேவையா?
நண்பரை சந்திக்க, அவர் பணி புரியும் கம்பெனிக்கு சென்றிருந்தேன். கம்பெனிக்குள் நுழையும் போது, உள்ளிருந்து ஒருவரை இழுத்து கொண்டு வந்தனர்; நண்பரும் உடன் இருந்தார்.
என்னை பார்த்ததும் தனியாக வந்தார், நண்பர். அவரிடம், 'என்ன விஷயம். எதுக்கு அவரை இப்படி இழுத்துகிட்டு வர்றீங்க...' என, கேட்டேன்.
'காலையில், கம்பெனிக்கு வர்றப்பவே மது அருந்திவிட்டு வந்திருக்காரு. போதை ஏற ஆரம்பித்ததும் பக்கத்துல வேலை பார்த்துகிட்டிருந்த, பெண்ணின் கையை பிடிச்சு இழுத்துள்ளார். அந்தப் பெண் சத்தம் போட்டு, எல்லாரையும் கூப்பிட, பிரச்னை பெரிசாயிடுச்சு...' என்றார்.
'நல்லா வேலை செய்வாரு. எல்லார்கிட்டேயும் மரியாதையா பேசுவாரு. அவரா இப்படின்னு...' என்று அருகிலிருந்தவர் சொல்லி, தண்ணீரை எடுத்து அவர் முகத்தில் அடித்து, போதையை தெளிய வைத்தார். அங்கு வந்த மேனேஜர், 'இவரை வேலையை விட்டு அனுப்பி விடலாம்...' என்றார்.
ஆனால், அங்கு பணி புரியும் இன்னொரு பெண், 'வேண்டாம் சார். நல்ல மனுஷன், இரண்டு பெண் பிள்ளைங்க இருக்காங்க. இதுவரைக்கும் ஒருவார்த்தை கூட, தவறுதலா யார்கிட்டேயும் பேசியதில்லை. இந்த மது போதை தான், அவரை இப்படி செய்ய வைத்திருக்கிறது...' என்று சொல்லியதோடு, போதை நபரை பார்த்து, 'அண்ணா... இதுவரைக்கும் உங்களை யாராவது தப்பா நெனச்சிருப்பாங்களா. இப்ப பாருங்க, நீங்க மது குடிச்சிட்டு வந்ததால, உங்களோட நிலையே மாறிப்போச்சு. நீங்க மது குடிச்சதால, உங்க புத்தியே மாறிப்போய் எப்படி வந்து நிக்கறீங்க பாருங்க. இனி, மது குடிக்க மாட்டேன்னு, சத்தியம் பண்ணுங்க...' என்றாள்.
போதை தெளிந்த அவரும், கையெடுத்து கும்பிட்டு, 'இனிமே குடிக்கவே
மாட்டேன்...' என்று, சத்தியமும் செய்தார்.
ஆண்களே... பணிபுரியும் இடங்களுக்கு மது அருந்திச்சென்று உங்கள் மானத்தை இழக்காதீர்.
- ஜெ.ரவிக்குமார், காங்கயம்.
இப்படியும் வாழ்த்தலாமே!
சமீபத்தில், உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். தாலி கட்டுவதற்கு முன், அனைவரது கையிலும் ஒரு சிறிய பொட்டலம் கொடுத்தனர்.
அதில், அட்சதை போடுவதற்கான அரிசி இருந்ததுடன், கீழ்க்கண்ட வாசகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.
'ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல சுற்றம் சேர்ந்து, வாழையடி வாழையென பெருவாழ்வு பெற்று வாழ்க...' என, அச்சடிக்கப்பட்டு இருந்தது.
திருமணங்களில் தாலி கட்டி முடித்த பின், மணமக்களை அட்சதை துாவி வாழ்த்துவது வழக்கம்.
அந்த வாழ்த்தை அரிசியுடன் சேர்த்து மடித்துத் தந்தது, புதுமையாக இருந்தது.
மணமக்கள் தாலி கட்டி முடித்தபின், அனைவரும் ஒரு சேர, 'ஆல் போல தழைத்து...' என்ற வாழ்த்தை சொல்லி, மணமக்களை அட்சதை துாவி ஆசி வழங்கியது, மனதிற்கு நெகிழ்வாக இருந்தது.
- கா.பசும்பொன், மதுரை.
தேவை ஆரோக்கிய சிந்தனைகள்!
பொதுவாக, 'ஷாப்பிங்' செல்லும் போது, நிறைய கடைகளில், 'பில்' போடும் இடத்தில், சாக்லேட் வைத்திருப்பர். அதேபோல, பெரிய நிறுவனங்கள், ஹோட்டல் வளாகங்களின், 'ரிசப்ஷன்'களில், நிறைய சாக்லேட் ஒரு கிண்ணத்தில் இருக்கும். அது, 'பிராண்டட்' சாக்லேட்டுகளாக இல்லாமல், ஏனோ தானோ என்று, மலிவு விலை சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகளாக இருக்கும். ஒன்றை எடுத்து வாயில் போட கூட, யோசனையாக இருக்கும்.
சமீபத்தில், ரெடிமேட் ஆடை விற்பனை கடை ஒன்றில், 'பில்' போடும் இடத்தில் நின்றிருந்தேன். அருகில் ஒரு பெரிய கிண்ணத்தில், வேர்க்கடலை பர்பி பாக்கெட்டுகளை வைத்திருந்தனர். காசாளரிடம், 'பொதுவா சாக்லேட்டை தான் வைத்திருப்பர். நீங்கள் வேர்க்கடலை பர்பி பாக்கெட்டுகளை வைத்திருக்கிறீர்களே...' என்று கேட்டேன்.
அதற்கு, 'எங்கள் கடைக்கு வருபவர்கள், 90 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் வயதானவர்கள் தான். வெல்லம் மற்றும் வேர்க்கடலை நிறைந்த பர்பி, புரோட்டீன் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் தாராளமாக சாப்பிடலாம். மிக சத்தானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. திடீரென யாருக்காவது,'லோ சுகர்' மற்றும் பசி மயக்கம் வந்தாலும் உடனே எடுத்து சாப்பிட்டு விடலாம். சாக்லேட்டுக்கு பதில், இதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார், எங்கள் முதலாளி...' என, பெருமிதமாக சொன்னார்.
இந்த யோசனையை நடைமுறைப்படுத்திய முதலாளியையும், ஊழியர்களையும் பாராட்டினேன்.
ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் இந்த யோசனையை மற்ற கடைகளும், நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தலாமே!
- தனுஜா ஜெயராமன், சென்னை

