PUBLISHED ON : மார் 29, 2026

உறவினர்களை அரவணைக்கலாமே!
சமீபத்தில், நண்பர் ஒருவரை சந்திக்க, அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். நண்பரின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளில் முனைப்பாக இருந்தார். நண்பரது வீட்டில் நிறைய பேர் கூடியிருந்தனர். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவது பற்றி அவர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார், நண்பர்.
திருமண வரவேற்பு, அலங்காரம், விருந்தினர் உபசரிப்பு, சமையல் என, எல்லாவற்றிற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைத்தார். அந்த குழுவில் இடம் பெற்றவர்கள் அனைவருமே நண்பரின் நெருங்கிய உறவினர்களாகவே இருந்தனர். திருமண விழாவை சிறப்பாக நடத்த, அவர் செயல்பட்ட விதத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.
நண்பரின் மகள் திருமணத்திற்கு சென்ற போது, வாசலில் நின்று வரவேற்றது முதல் சாப்பாட்டு கூடத்துக்கு அழைத்து சென்றது வரை, அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து, மனம் நெகிழ்ந்தேன். சரியான திட்டமிடுதலுடனும், ஒருங்கிணைப்புடனும் அவர்கள் செயல்பட்டதால், திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இதற்கு பின்னரே, உறவினர்களின் முக்கியத்துவத்தையும், அருமைகளையும் உணர்ந்து கொண்டேன். உறவினர்களிடம் நெருங்கிப் பழகாமல் ஒதுங்கியே இருந்த நான், இனி அவ்வாறு இருக்கக்கூடாது என, தீர்மானித்து, செயல்படவும் ஆரம்பித்து விட்டேன்.
'நமக்கு ஒண்ணுன்னா சொந்தக்காரங்க தான் ஓடி வருவாங்க; அவங்களை உதாசீனப்படுத்தாதீங்க...' என, பல முறை, என் மனைவி சொல்லும்போதெல்லாம் அலட்சியமாக இருந்தவன், இப்போது புரிந்து கொண்டேன்.
எனவே, உறவினர்களை அரவணைத்து செல்லுங்கள் வாசகர்களே!
- பே.சண்முகம், செங்கோட்டை.
பெண்களின் வித்தியாசமான தண்டனை!
எங்கள் தெருவில் வசிக்கும் பெண்கள், தினமும் விடிகாலையில், தத்தம் வீட்டு வாசலைப் பெருக்கி, அழகாக கோலம் போடுவது வழக்கம்.
தினசரி அந்த வழியாக ஒருவன் வந்து, பெண்களைப் பார்த்து, கொண்டிருப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த, பெண்கள், அவன் எதேச்சையாக அத்தெருவழியாக வரவில்லை. தங்களை, 'சைட்' அடிக்க வருகிறான் என்று புரிந்து கொண்டனர்.
ஒரு நாள், அந்த நபருக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுத்தனர். எல்லா பெண்களும் சேர்ந்து, அவனை சூழ்ந்து நின்று சத்தமாக கைதட்டி, 'என்ன, கோலம் பார்க்க வந்தாயா? வாசல் பெருக்க கற்றுக்கொடுக்கட்டுமா?' என்று கேட்டு, கேலி செய்தனர். முழு தெருவாசிகளும் பார்த்து சிரிக்க, அவன், வெட்கப்பட்டு அங்கிருந்து ஓடிப்போனான்.
அதன் பின், அவன் அத்தெருவழியாக வருவதில்லை. இது, பெண்கள் கொடுத்த நல்ல பாடம். சண்டை, சச்சரவு தேவையில்லை. ஒன்றுபட்டால் தவறை திருத்தலாம்.
இதுபோல் தொல்லை கொடுப்பவர்களை, பெண்களே ஒன்றிணைந்து நாகரிகமாகவே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அப்படி செய்தால், யாரும் மீண்டும் தொந்தரவு செய்ய வரமாட்டார்கள்.
- அ.துரைமணி, நாகர்கோவில்.
தொழில்நுட்பமும் காலாவதியாகும்!
சமீபத்தில், புதிதாக தொழில் துவங்க முயன்ற நண்பரை சந்தித்தேன்.
அவர் துவங்கவிருக்கும் தொழில் பற்றி என்னிடம் கூறினார்.
அந்த தொழிலில் அனுபவம் பெற்ற, என் உறவினரிடம் அவரை அழைத்து சென்று, ஆலோசனை வழங்க சொன்னேன்.
'நீங்கள் துவங்க நினைத்த தொழில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வழக்கொழிந்து போகும் வாய்ப்பு இருக்கிறது.
'புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, 'லேட்டஸ்ட்' பொருட்களும், சேவைகளும் விரைவில் வரவிருக்கின்றன...' என்று விளக்கி, ஆதாரங்களையும் காட்டினார், உறவினர்.
'பொதுவாக மக்கள், கால மாற்றத்தை உணராமல், அவர்களின் கடின உழைப்பு, பணம், நேரத்தை, ஓர் இலக்கில் செலவிடுகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளில், வடிவமைப்பு சுழற்சி, தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் அமைப்பு போன்றவை, விரைவாக மாற்றம் பெறுகின்றன.
'விடாமுயற்சி வெற்றியை தரும் என்றாலும், தொழில்நுட்பமும் காலாவதியாகும் என்பதை புரிந்து, புத்திசாலித்தனமாக காலத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, வெற்றி கிடைக்கும்...' என்று, நிதர்சனத்தை விளக்கினார்.
இதைப் புரிந்து, வேறு தொழில் செய்ய யோசிப்பதாக கூறி, நன்றி தெரிவித்து விடைபெற்றார், நண்பர்.
- டி.எல்.குமார், விழுப்புரம்.
