PUBLISHED ON : மே 17, 2026

'செகண்ட் ஹேண்ட்' வாகனம் வாங்க போகிறீர்களா?
சமீபத்தில், தரகர் மூலம், 'செகண்ட் ஹேண்டில்' இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினார், என் ஆண் உறவினர் ஒருவர். சில நாட்கள் கழித்து, அந்த வாகனத்தை, இவர் பெயரில் பதிவு மாற்றம் செய்வதற்காக, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அந்த அலுவலக ஊழியர் இவரது, வாகனத்தின் பதிவு எண்ணை கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, 'இந்த வண்டி மேல, 22 ஆயிரம் ரூபாய் அபராதம் இருக்கு, சார். முதல்ல அதைக் கட்டினால் தான், உங்கள் பெயரில் பதிவு மாற்றம் செய்ய முடியும்...' என்று கூற, என் உறவினருக்கு கடும் அதிர்ச்சி.
இதற்கு முன்பு அந்த வாகனத்தை உபயோகப்படுத்திய நபர், பல சமயங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக போடப்பட்ட இந்த அபராதங்களை, அவர் கட்டியதே இல்லை என்று தெரியவந்தது. தரகரிடம் இதுபற்றி கேட்டபோது, 'எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை...' என்று கூறி விட்டார்.
எந்த வாகனமாக இருந்தாலும், 'செகண்ட் ஹேண்டில்' வாங்கும் முன், வண்டியின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று தீர விசாரித்து, பார்த்து, வாங்க வேண்டும்.
- ஆர்.பிரசன்னா, திருச்சி.
தாத்தா - பாட்டியின் போதனை!
'நீ உணவு உண்ணும் முன்பு, வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இருந்தால், 'நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?' என, முதலில் அவர்களிடம் கேட்டுவிட்டு சாப்பிடு...' என்று எனக்கு சிறுவயதில் சொல்லிக் கொடுத்தனர், என் தாத்தாவும், பாட்டியும்!
நான் கேலியாக, 'நான் அப்படி கேட்கவில்லை என்றால், யாரும் சாப்பிடாமல் இருந்து விடுவரா? பசித்தால் சாப்பிடத்தானே செய்வர்?' எனக் கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'சாதாரணமாக தோன்றும் இது ரொம்ப நல்ல பழக்கம். பெரியவர்களும், குழந்தைகளும் பசி பொறுக்க மாட்டார்கள். அவர்களுக்கு நேரத்தோடு உணவு கொடுப்பது அவசியம். இதனால், அவர்கள், இந்த வீட்டில் தானும் மதிக்கப்படுகிறோம், கவனிக்கப்படுகிறோம் என்று உணர்ந்து கொள்வர். இது, மன அமைதியை, சந்தோஷத்தை அவர்களுக்கு தரும்...' என்பர்.
அன்று அவர்கள் கூறிய அறிவுரையை, நான் திருமணமாகி வந்ததும், புகுந்த வீட்டில் கடைப்பிடித்தேன். இது, என் மாமனார்-மாமியாருக்கு மிகவும் பிடித்து போனது.
'என் மகன் கூட, எங்களிடம் இப்படிக் கேட்டதில்லை. சில நேரம் நாங்கள் கவனிப்பாரற்று இருக்கிறோமோ என, நினைத்து கண் கலங்குவதும் உண்டு. நீ வந்ததும் அந்த நினைப்பே இல்லை...' என, அவர்கள் கூற, நெகிழ்ந்து போனேன்.
என் வாழ்வில் எத்தனையோ உறவு பிரச்னைகள், இந்த ஒரு சிறு விசாரிப்பால் காணாமல் போயிருக்கின்றன. இந்த அருமையான பாடத்தை போதித்த, என் தாத்தா-பாட்டியை இன்றும் நினைத்துக் கொள்கிறேன்.
- பா.சுபானு, காரைக்குடி.
தீ விபத்திலிருந்து தப்பிக்க...
சமீபகாலமாக நகரங்களில் சில அடுக்குமாடி வீடுகள், கட்டும் போது, கதவு வைத்த ஜன்னல் இல்லாமல், கண்ணாடி மட்டும் வைத்து மூடி, ஜன்னலை திறக்க முடியாதபடி கட்டுகின்றனர். காரணம் கேட்டால், 'ஏசி' போட்டுக் கொள்ளலாம் என்கின்றனர்.
எதிர்பாராத விதமாக, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டால், வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறி, புகை வெளியே போக வழியில்லாமல் மூச்சு திணறி, உயிர் தப்ப முடியாமல் போகிறது.
'இதுபோன்ற நேரத்தில் தப்பிக்க, ஒரு டவலை, தண்ணீரில் நனைத்து, கண்களில் ஒற்றிக்கொண்டே வெளியே வந்தால், புகையால் எரிச்சல் குறையும், தப்பிக்கவும் முடியும்...' என்கின்றனர், தீயணைப்பு துறையினர்.
கதவுள்ள ஜன்னல் வைத்து வீடு கட்டுவோம். எதிர்பாராமல் தீ விபத்து நேர்ந்தாலும், புத்திசாலித்தனமாக தப்பித்துக் கொள்ளலாமே!
- வி.ஏ.லஷ்மிநரசிம்மன், சென்னை.
