PUBLISHED ON : செப் 01, 2024

* எட்டாக்கனியையும்
எட்டிப்பறிக்க வைத்திருப்பாரே...
ஏழ்மை நிலையை
தவிடு பொடியாக்க வைக்கும்
வித்தையை கற்று
கொடுத்திருப்பாரே!
* தேசத் தலைவர்களையும்
விரல் பிடித்து
வழி நடத்திச் சென்றிருப்பாரே...
தேசம் என்ற உணர்வையும்
தன் விரல் கொண்டு பிசைந்து
ஊட்டியிருப்பாரே!
* அமிர்தமெது நஞ்செதென
பிரித்தறியச் செய்திருப்பாரே...
அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
அனைவரின் உணர்விலும்
ஏற்றியிருந்திருப்பாரே!
* உலகம் உருண்டை என்றென
உணர வைத்திருப்பாரே...
ஒன்றே குலமெனவும்
ஒருவனே தேவனெனவும்
காதுகளில் ஓதியிருப்பாரே!
* முயற்சி தன் மெய்வருத்த
கூலி தருமென
முயல வைத்திருப்பாரே...
நம்பிக்கை சிறகுகளை
தோள்களில் கட்டி வானில்
ஏற்றி விட்டிருப்பாரே!
* தூணிலும் இருப்பான்
கடவுளென
தெளிவூட்டி இருப்பாரே...
பிச்சைப் புகினும் கற்கை நன்றென
எடுத்துரைத்திருப்பாரே!
* எழுத்து அறிவித்தவன் இறைவன்
என்ற பட்டத்தை தாங்கியும்
தலைக்கனமில்லாமல்
தரணியில் வலம் வந்து
கொண்டிருக்கும்
ஆசிரியர் அவரே!
- மு.கவுந்தி. சென்னை