
* மறதியே வா...
என்னை உன் வசமாக்கிக் கொள்...
உன் அரவணைப்பில் தான்
நிம்மதி கிடைக்குமென்றால்
உன்னை நான் விடப்போவதில்லை!
* அறியா வயதில்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த தவறுகளை
என்னிடமிருந்து மறக்க செய்ததால்
குற்ற உணர்ச்சி இல்லாமல்
வாழ முடிகிறது!
* பருவ வயதில்
எனக்கு ஏற்பட்ட
புறக்கணிப்புகள்
ஏமாற்றங்கள்
மறதியால் மூழ்கடிக்கப்பட்டதும்
வாழ்க்கை பிடிப்பட்டது!
* கல்லுாரி நாட்களில்
நண்பர்களுடன் ஏற்பட்ட
வார்த்தை சண்டைகளும், மோதல்களும்
மறக்கடிக்கப்பட்டதால்
இனிய நட்பை தொடர முடிகிறது!
* குடும்ப வாழ்க்கையில்
உறவுகளுக்குள் ஏற்பட்ட
நெருடல்கள் மனக் கசப்புகள்
மறதி எனும் வரத்தால்
இன்றும் இனிதாக உறவாட முடிகிறது!
* வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
செய்த தவறுகளும்
மன உளைச்சல்களும்
மறதியால் மறந்து போனதால்
தெளிவான மனதுடன்
அனைவருடனும் அளவளாவ முடிகிறது!
* மீதமுள்ள வாழ்நாளையும்
பக்குவப்பட்ட மனதுடன் வாழ
உறவுகளுடனும், நட்பு வட்டத்துடனும்
இனிமையாக பயணிக்க மறதியே வா!
* மறதி நோயல்ல - அது இனிய வரம்!
செல்வி நடேசன், சென்னை.