PUBLISHED ON : அக் 27, 2024

திருச்சி - சென்னை அதிவிரைவு புறவழிச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது, அந்த சொகுசு கார். உள்ளே, 30 வயது மதிக்கத்தக்க சுதாகர், காதுகளில், 'ஹெட்போன்' அணிந்து, கண்களை மூடி, இளையராஜாவின் இசையை ரசித்துக் கொண்டிருந்தான்.
சென்னையை நெருங்கிக் கொண்டிருந்த அந்தக் கார், பரனுார் சுங்கச்சாவடி வந்ததும் வேகத்தைக் குறைத்தது. மெதுவாக வேகத்தடைகளில் ஏறி இறங்கி, ஊர்ந்து செல்ல, காரின் கண்ணாடிக் கதவைத் தட்டியது வளையல் அணிந்த கரம் ஒன்று.
வரும் கார்களை நிறுத்தி, பணம் வாங்கிக் கொண்டிருந்தனர், திருநங்கையர் சிலர். அதில் ஒருத்தி, சுதாகர் வந்த காரின் ஜன்னலை தட்டினாள். காரின் ஜன்னல் கதவை திறக்க, கையை உள்ளே நீட்டினாள், அந்த திருநங்கை.
''எதுக்கு காசு கேட்கறீங்க? இப்படி பிச்சை எடுப்பது உங்களுக்கு வெட்கமா இல்லையா?'' என்று கேட்டான், சுதாகர்.
''எதுக்கு வெட்கப்படணும். எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கின சமுதாயம் தான் வெட்கப்படணும். திருநங்கைன்னாலே ஏளனமான பார்வை. அசிங்கமான வார்த்தைகள். கொஞ்சம் கூட மரியாதை கிடையாது. யாரும் வேலை கொடுப்பது கிடையாது.
''ஆனா, எங்களுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கு இல்லை?'' என்று, கரகரப்பான குரலில் கேட்டாள், அந்த திருநங்கை.
''ஒத்துக்கறேன். உங்க நிலைமை புரியுது. உங்களுக்கு என் கம்பெனியிலே வேலை கொடுத்தா செய்யத் தயாரா?''
''சும்மா விளையாடாதீங்க, சார். உங்ககிட்ட இருந்து வேலையை நாங்க எதிர்பார்க்கலை. ஒரு நுாறோ, இருநுாறோ இல்லை அதிகபட்சம், 500 ரூபாயோ கொடுத்துட்டு கிளம்புங்க.''
''டிரைவர், காரை கொஞ்சம் ஓரம்கட்டி நிறுத்துங்க. நான் கொஞ்சம் இவங்களோட பேசணும்,'' என்று கூறி, காரை விட்டு இறங்கி சாலை ஓரம் நடந்தான், சுதாகர்.
அதற்குள் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த, திருநங்கையர் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர். கன்னத்தில் தட்டி, தலையில் கைவைத்து, ஆசிர்வதித்து கை நீட்டினர்.
''ஓ.கே., உங்களுக்கு தேவை பணம் தானே... அதை தர, நான் தயாரா இருக்கேன். அதுக்கு முன்ன எனக்கொரு பதில் தெரிஞ்சாகணும். இங்க இருக்கிறவங்கள்ல எத்தனை பேருக்கு, இப்படி பிச்சை எடுக்காம உழைச்சு, வேலை செஞ்சு சம்பாதிக்கணும்ன்னு ஆசை இருக்கு. இந்த பிழைப்பு வேணாம் அவமானம்ன்னு நினைக்கிறவங்க முன்னாடி வாங்க,'' என்றான்.
ஒன்றிரண்டு பேர் தயங்கி தயங்கி முன்னே வந்தனர்.
''உங்களுக்கு நிறைய தயக்கம் இருக்கு. பயப்படறீங்க. நமக்கு என்ன வேலை கிடைக்கும்ன்னு யோசிக்கிறீங்க. ஆனால், இதுல பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை. இப்ப திருநங்கையர் நிறைய பேர் படிச்சு, நல்ல வேலையில் இருக்காங்க.
''டிரைவரா இருக்காங்க. படிச்சு நல்ல நிலைமைக்கும் வந்திருக்காங்க. அவங்களைப் போல பெரிய அளவுக்கு இல்லேன்னாலும் இப்படி ரோட்டுல கையேந்தி நிற்காம உழைச்சு சாப்பிடணும்ன்னு உங்கள்ல யாருக்கும் தோணினது இல்லையா?
''இப்ப அரசாங்கமும், எவ்வளவோ நல்ல திட்டங்களை உங்களுக்கு அறிவிச்சு, நடைமுறை படுத்திட்டு வருது. பழைய காலம் போல இப்ப இல்லை. நீங்களும் இந்த சமூகத்துல கவுரவமா வாழலாம். அதுக்கு ஒரு வாய்ப்பை நான் தரேன்.
''இந்தாங்க என் விசிட்டிங் கார்டு. இதை எடுத்திட்டு என் கம்பெனிக்கு வந்து பாருங்க. உங்க எல்லாருக்கும் கவுரவமான வாழ்க்கையை நான் உருவாக்கித் தரேன்,'' என்று கூறி, விசிட்டிங் கார்டுடன், 500 ரூபாய் தாளையும் வைத்துக் கொடுத்தான்.
'சாரே சோக்கா பேசினே. சரி, 10 நிமிஷம் உன் காலட்சேபம் கேட்டாலும் சுளையா, 500 ரூபாய் கிடைச்சது. ரொம்ப தேங்க்ஸ். அப்புறம் நீயும், உன் புள்ளைக்குட்டியும், உன் கம்பெனியும் ரொம்ப நல்லா சவுக்கியமா இருப்பீங்க...' என, சிரித்தபடி கலைந்து சென்றது, அந்த கும்பல்.
''சார், நான் தான் சொன்னேன்ல. இதுங்கல்லாம் கிராக்கிங்க. சொகுசா இப்படியே பணம் சேர்த்து பழகிருச்சுங்க. நீங்க காரிலேயே உட்கார்ந்திருந்து, ஐம்பதோ, நுாறோ கை நீட்டியதுகிட்டே கொடுத்திருந்தா போதும். இப்போ பாருங்க,'' என்று ஏளனமாக கூறினான், டிரைவர் மகேஷ்.
''முதல்ல யாரையும் மரியாதை குறைவா பேசறதை நிறுத்து, மகேஷ். எனக்கு பணம் பெருசில்ல. ஆனா, சமூகத்திலே ஒரு மாற்றத்தை கொண்டு வருவது தான் கஷ்டம். திருநங்கையா பிறக்கிறது யாரோட குற்றம்? அவங்க குற்றமா?
''மனுஷப் பிறப்பிலே மட்டும் தான் திருநங்கை, திருநம்பிங்க இருக்காங்களா? எல்லாப் பிறப்பிலேயும் இருக்கு. அங்கே எல்லாம் அப்படி பிறக்கிறவங்களை ஒதுக்கிடறது கிடையாது. மனித பிறப்பில் தான் இப்படி.
''காலம் காலமா திருநங்கையரையும், திருநம்பிகளையும் கேவலப்படுத்தி, கொச்சையாய் பேசி, அவங்களை பிச்சை எடுக்க வைச்சு, பாலியல் தொழிலுக்கு தள்ளி, அந்த பிறப்பையே பெரிய குற்றமாக்கி ஒதுக்கி, வைக்கிறாங்க.
''இப்பத்தான் கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருது. அவங்களையும் மனுஷனா மதிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. மாற்றம் வர வர, திருநங்கையரோட வாழ்வில் கொஞ்சம் ஏற்றம் ஏற்பட்டுகிட்டு இருக்கு.
''நானும், அவங்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புறேன். இன்னைக்கு என்கிட்ட விசிட்டிங் கார்டு வாங்கின, 10 பேருல, ரெண்டு பேராவது நாளைக்கு நம்ம கம்பெனிக்கு வேலை கேட்டு வருவாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு,'' என்ற சுதாகரை வியப்பாக பார்த்தான், டிரைவர் மகேஷ்.
அடுத்த நாள் காலை மணி, 10:00. செங்குன்றம் அடுத்திருந்த பண்டிக்காவனுாரில், அந்த மினரல் வாட்டர் கம்பெனி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எம்.டி., அறையில், 'லேப் -டாப்'பில் இயங்கி கொண்டிருந்தான், சுதாகர்.
வெளியே கேட்டில், மூன்று திருநங்கையர் வந்து நிற்க, வாட்ச்மேன் கோபால் அவர்களை விரட்டினார்.
''ச்சூ, போங்க. போனவாரம் தானே வந்து காசு வாங்கிட்டுப் போனீங்க. இப்ப எதுக்கு வர்றீங்க?''
''அண்ணே, அது நாங்க இல்லை. எங்களை, உங்க ஓனர் தான் வரச் சொன்னாரு.''
''என்னது, ஓனர் வரச் சொன்னாரா... சரி, சரி இங்கேயே நில்லுங்க. உள்ளே போன் செய்து கேட்டுட்டு அனுப்பறேன்,'' என்று, அறைக்குள் நுழைந்து, சூப்பர் வைசருக்கு போன் செய்தார்.
சில நிமிடங்களில், ''ஏய் யாரு நீங்க, என்ன வேணும்? ஓனரை பார்க்கணும்ன்னு சொன்னீங்களாமே? அதெல்லாம் முடியாது. ஆளுக்கு, 500 ரூபாய் தரேன், எடுத்துட்டு கிளம்புங்க,'' என்று, கோபமாக கத்தியபடி வெளியே வந்தார், சூப்பர்வைசர், மணி.
''உங்க ஓனர் தான் எங்களை வரச்சொன்னாரு. இதோ விசிட்டிங் கார்டு கொடுத்திருக்காரு பாரு,'' என, விசிட்டிங் கார்டை காட்டினாள், ஒரு திருநங்கை.
அதற்குள் தன் கையில் இருந்த, மொபைலில் இருந்து, சுதாகர் எண்ணுக்கு போன் செய்தாள், இன்னொரு திருநங்கை.
''சார், நான் அம்பிகா பேசறேன். பரனுார் டோல்கேட்ல நேத்து சந்திச்சீங்களே, அந்த திருநங்கை. உங்க கம்பெனி வாசல்ல நிக்கறோம் உள்ளே விட மாட்டேங்கறாங்க,'' என்றாள்.
அடுத்த நொடி சூப்பர்வைசர், மணியின் மொபைல் போன் ஒலித்தது. 'ஆன்' செய்து, ''சார்...'' என்றார்.
''அவர்களை, என் கேபினுக்கு அனுப்புங்க,'' என, சுதாகர் கூறியதும், பதில் பேசாமல் அவர்களை உள்ளே அனுப்பினார்.
உள்ளே நுழைந்த, மூவரையும் அமரச் சொன்னான், சுதாகர்.
''வெல்கம், என்னோட அழைப்பை ஏத்துக்கிட்டதுக்கு, தேங்க்ஸ். உங்களோட கல்வி தகுதிகள் என்ன, சர்ட்டிபிகேட்ஸ் இருக்கா?'' எனக் கேட்டான், சுதாகர்.
'சார், பிளஸ் 2 படிக்கும் போதே இப்படி ஆகிட்டோம். படிப்பை விட்டுட்டு இந்த தொழிலுக்கு வந்துட்டோம். படிக்க ஆசை இருக்கு. ஆனா...' என இழுத்தனர், மூவரும்.
''வாய்ப்பை நான் ஏற்படுத்தி தரேன். இந்த ப்ளாண்ட்ல கிளீனிங், வாட்டர் பில்லிங்க்ல உங்களுக்கு வேலை போட்டு தரேன். மாதம், 20 ஆயிரம் சம்பளம், மாதம் இரண்டு நாள், 'லீவ்' எடுத்துக்கிடலாம். சம்பளம் பிடிக்க மாட்டோம்.
''விட்டுப் போன, உங்க படிப்பை தொடரவும் உதவி செய்யறேன். பிரைவேட்டா, பிளஸ் 2 எழுதி முடிங்க. அப்புறம் ஓப்பன் யூனிவர்சிட்டிலே டிகிரி படிக்கலாம். வேலை நேரம் போக, மிச்ச நேரத்திலே படிச்சு முடியுங்க.
''உங்களுக்கு தங்க இடம், கம்பெனியிலேயே, 'அலாட்' பண்ணிக் கொடுத்திருவோம். அதுக்கு நீங்க, எதுவும் பணம் தர வேண்டியதில்லை. உங்களுக்கு இந்த கம்பெனியில வேலை செய்ய சம்மதமா?'' என்று கேட்டான், சுதாகர்.
'சம்மதம் சார். வேலையும் கொடுத்து, படிக்கவும் உதவி செய்து, தங்கவும் இடம் கொடுக்கிற உங்க நல்ல மனசுக்கு கம்பெனி நல்லா வளரும், சார். நாங்க நாளையிலிருந்து வேலைக்கு வந்துடறோம், சார்...' என்றனர், மூவரும்.
அன்று மாலை, சுதாகர் ஆபிசிலிருந்து கிளம்பும் சமயம், சூப்பர்வைசர் மணி, அக்கவுன்டன்ட், மேனேஜர் மற்றும் சில ஊழியர்கள் ஒன்றாக கேபின் முன் வந்து நின்றனர்.
''சார், நீங்க, செய்யறது நல்லா இருக்கா. இப்படி இந்த மூணு, திருநங்கையரை கம்பெனியிலே வேலைக்குச் சேர்த்திருக்கீங்க. அவங்க கூட நாங்க எப்படி வேலை பார்க்கிறது?'' என்றார், சூப்பர்வைசர் மணி.
''திருநங்கையரா இருந்தா என்ன? அவங்களோட வேலை செய்யறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?'' என்றான், சுதாகர்.
''அதில்லை சார், அவங்கல்லாம் இழி பிறப்பு சார்.''
''எது சார் இழி பிறப்பு? திருநங்கையா பிறக்கிறது அவங்க குற்றமா. அவங்களை சமூகத்திலே ஒதுக்கி வைச்சே, இழிநிலைக்கு தள்ளி விடறீங்க பாருங்க, நீங்க தான் இழி பிறப்பு.''
''சார், நீங்க எது வேணா சொல்லுங்க. அவங்க கூட வேலை செய்ய எங்க மனசு ஒத்துக்காது. திருநங்கையர் கூட ஒண்ணு மண்ணா பழக முடியாது. அவங்களை கூட சேர்த்துக்க முடியாது. இந்த ஊரும், உலகமும் எங்களை கேவலமா பார்க்கும்.''
''அப்படியா, திருநங்கையர் கூட சேர்ந்து வேலை பார்க்க மாட்டீங்க. ஆனா, ஒரு திருநம்பி முதலாளிக்கு கீழே வேலை பார்ப்பீங்களா?'' என்று, சுதாகர் கூற அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.
''நான் உங்க முதலாளி, சுதாகர். பிறக்கும் போது, சுதா தான். என்னோட, 15 வயசு வரைக்கும் நான் பொண்ணாத்தான் இருந்தேன். அப்புறம், ஆணா மாற ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா என்னோட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பிச்சுது.
''என் செயல்கள், என் குரல் எல்லாம் ஆணின் தன்மையா மாற்றம் அடைய உடைந்து போனேன். ஆனா, என்னை பெத்தவங்க என்னை கைவிடலை. என்னைப் புரிஞ்சிக்கிட்டு, என் தன்னம்பிக்கையை வளர்த்து என்னை ஆளாக்கி விட்டாங்க.
''எங்க குடும்ப உறவுகள் எல்லாம், என்னையும், என் பெற்றோரையும் கேலியா பார்த்துச்சு. ஆனா, அப்பாவும், அம்மாவும் என்னை விட்டுக் கொடுக்கல.
''என் தன்னம்பிக்கையை வளர்த்தார், அப்பா. முறையா மருத்துவ சிகிச்சைகள் செய்து, என்னை ஒரு முழு ஆணா மாத்திட்டார். என்னை, எம்.பி.ஏ., படிக்க வைத்து, இன்னைக்கு பிசினஸ்மேனாவும் உருவாக்கி, 50 பேருக்கு முதலாளியாகவும், உயர்த்தி விட்டிருக்கார்.
''உங்க முதலாளி, சுதாகர் ஒரு திருநம்பி. அவர்கிட்ட இத்தனை நாள் வேலை செய்து சம்பளம் வாங்கி சாப்பிட்டிருக்கீங்க. உங்க சாப்பாடும், வாழ்க்கையும் கசந்திருச்சா.
''காலம் எவ்வளவோ மாறிடுச்சு. திருநங்கையர் சாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எஸ்.ஐ., மேயர், செய்தி வாசிப்பாளர், ஐ.ஏ.எஸ்., ஆபீசர் மற்றும் பரதநாட்டிய பள்ளி முதல்வர்ன்னு, பல துறைகளில் சாதிச்சிட்டிருக்காங்க.
''காகிதப் பூவா இன்னமும் அவங்களை ஒதுக்காம, மனுஷங்களா பார்த்து பழகுங்க. சமூகம்ங்கிறது யாரு? நாம் தான். மாற்றம் ஒவ்வொருத்தர்கிட்டே இருந்து துவங்கினா, சமூகமும் மாறத் துவங்கும்ன்னு நம்பறேன்,'' என்று, சுதாகர் பேச பேச, அவர்களுள் ஒரு இனம்புரியாத மாற்றம் துவங்கியிருந்தது.
'சார், எங்களை மன்னிச்சிருங்க. ஏதோ அறியாமையில தவறாப் பேசிட்டோம். திருநங்கையரைப் பற்றிய தவறான புரிதல், அப்படி பேச வைச்சிருச்சு. அவங்களும் எங்களோட சகோதர, சகோதரிகளா நினைச்சு அவங்க உயர ஒத்துழைப்போம்...' என்றனர்.
சுதா என்ற சுதாகர் கண்களில் நீர் திரண்டது. இனி, காகிதப் பூக்கள், மணக்க ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை அவனுக்குள் துளிர்த்தது.
எஸ்.சுரேஷ் பாபு
வயது: 50. படிப்பு: இளங்கலை வணிகவியல், டிப்ளமோ இன் கம்ப்யூட்டர். பணி: அர்ச்சகர்.இதுவரை, 25க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல்வேறு தமிழ் வார இதழ்களில் வெளியாகி உள்ளன. சிறுவர்களுக்காக, 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். பல சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.தமிழ் இதழ்கள் நடத்திய சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு, பரிசு பெற்றுள்ளார். லட்சியம்: டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், முதல் பரிசு பெறுவதும், பிரபல எழுத்தாளராவதும் இவரது லட்சியம். கதைக்கரு பிறந்த விதம்: நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்த போது, சுங்கசாவடி அருகில், சில திருநங்கையர் பிச்சையெடுப்பதை பார்த்ததில் ஏற்பட்ட கரு. பல துறைகளில் திருநங்கையர் முன்னேறி வரும் நிலையில், இவர்கள் ஏன் பிச்சையெடுக்க வேண்டும், ஏதாவது வேலையில் சேர்ந்து முன்னேறலாமே என்ற ஆதங்கத்தில் பிறந்த கதை இது என்கிறார்.