PUBLISHED ON : மார் 02, 2025

மனைவியை சந்தேகித்து, தீயில் இறங்க பணிக்கிறான், ராமன். தீயில் இறங்கி, தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதன் பிறகு கூட, ஊராரின் சந்தேகத்தை காரணம் காட்டி, கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறான், கணவன்.
அங்கேயே குழந்தைகள் பெற்று, வனத்திலேயே வாழ்கிறாள். இரண்டு குழந்தைகள் வளர்ந்து, ஊர் திரும்பியதும் மடிகிறாள். - இது ராமாயணம்.
* ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன், தொழுநோயால் பாதிக்கப்படுகிறான். அதன் பிறகும், அவளுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. பண்ணாத குசும்பெல்லாம், அக்கிழடு செய்தும், அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில், ஒரு தாசியை பார்த்து, 'நான் அவளோடு கூட வேண்டும்..' என்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
தாசிக்கு கூலியாக, தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் துாக்கி, தாசியின் வீட்டுக்கு செல்கிறாள். - இது, நளாயினி கதை.
இவை எல்லாம் வடமொழி இலக்கியங்கள்.
* கணவன் செய்யாத குற்றத்திற்காக, கொலை செய்து விட்டது, அரசு. தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள். தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என, கெக்கலிட்டு சிரிக்கிறாள்.
ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று, நிதானித்து திரும்பி பார்க்கிறாள், அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா... என்று. - இது சிலப்பதிகாரம்.
* அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன், தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் வலக்கையில் வாங்கி, இடக்கையில் துார வீசிவிட்டு, சலனமற்று நடக்கிறாள்.
இளவரசனும், 'ஆசிட்' வீசவில்லை, ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். - இது மணிமேகலை!
* மனைவியை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்து செல்கிறான், கணவன். அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள். மலை உச்சியை எட்டியதும் தான் தெரிகிறது, தன்னை கொலை செய்ய கணவன் அழைத்து வந்திருக்கிறான் என்று. யோசிக்கிறாள்.
இறுதியாக கணவனிடம் பேசுகிறாள். 'நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள் தான். என் கணவர் நீங்கள். உங்களை, மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து, ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்கியம் கிட்டும் எனக்கு...' என்றாள்.
'அட அதனாலென்ன. தாராளமாக சுற்றி வா...' என, கணவனும் கூற, சுற்றுகிறாள். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில், தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். - இது குண்டலகேசி.
இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்.
ஓர் ஆண் என்ன செய்தாலும், அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதை சொன்னது தான், வடமொழி இலக்கியங்கள்.
அவன், ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அறம் தவறினால், அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பது தான், தமிழ் இலக்கியங்கள்.
உலகம் முழுவதும் பெண்களை காலுக்கு கீழே வைத்திருந்த காலத்தில், பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது, தமிழ் சமூகம்.
சங்க காலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களை கொண்டது, உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும் தான். உலக மொழிகளின் தாய் என கூறிக் கொள்ளும், கிரேக்கத்தில் கூட, ஏழு பெண்கள் தான் உண்டு.
தேவ பாஷை என கூறிக் கொள்ளும், சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது.
ஆனால், கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில், தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரை பொறித்து புழங்குமளவிற்கு, தமிழ் சமூகம் நாகரிகம் கொண்டது.
ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றி புகழ்ந்து கொண்டாடியது, நம் தமிழ் சமுகம்.
தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம், பெண்களை கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணி வேர்கள். அவர்களை கொண்டாடுவோம்.
புஷ்பலதா