PUBLISHED ON : ஜன 19, 2025

உலகில் பல பயங்கரமான இடங்கள் இருந்தாலும், பேய் - பிசாசுகள் வாழ்வதாக சொல்லப்படும் இடங்கள், பலரையும் கவர்ந்திழுக்கத்தான் செய்கிறது.
சிலருக்கு, இது ஒரு சாகச அனுபவமாகவும், ஒரு சிலருக்கு இதுபற்றிய கதைகளை கேட்டாலே, திகிலில் பயந்து நடுங்குவதும் உண்டு.
அந்த வகையில், உலகில் உள்ள அனைத்து பேய் வீடுகளிலும், மிகவும் பயங்கரமானதும், திகிலானதுமான ஒரு பங்களாவில், 10 மணி நேரம் தனியாக இருந்தால், மிகப் பெரிய பரிசு தொகையை வெல்லலாம்.
இதிலிருந்தே, அந்த வீட்டின் சூழ்நிலை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அந்த பங்களாவுக்குள் சென்ற பின் ஏற்படும் உணர்வுகள், எந்த ஒரு தைரியசாலியையும் நடுங்க வைக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்த மர்ம பங்களாவுக்குள் சென்றனர், பலர். ஆனால், இதுவரை ஒருவராலும், அங்கு முழுமையாக தங்கி பரிசை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டின், டென்னசி மாநிலத்தில் உள்ள மெக்கேமி மேனர் என்ற பங்களா தான், அந்த பேய் பங்களா.
போட்டியில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:
அந்த பங்களாவில் நேரடியாக பேய்கள் தெரியும். மனிதர்கள் மீது பேய்களின் தாக்குதல் நடக்கும். அந்தப் பயங்கரமான வீட்டில் தனியாக இருப்பது, உயிருடன் விளையாடுவதற்கு சமம்.
காலடி சத்தம் மற்றும் கிசுகிசுப்பு ஒலி கேட்டது. இருட்டான அந்த வீட்டின் மூலையில், நிழல்கள் நகர்வது போலவும், நாம் தனியாக இல்லை என்ற உணர்வு ஏற்படுவது போல் இருந்தது. திடீரென்று வெப்பநிலை குறைந்தது. பொருட்கள் தானாகவே நகர்ந்தது. விசித்திரமான வாசனை வீசுவது போல உணர்ந்தோம்.
கண்ணுக்குத் தெரியாத கைகள் தங்களைத் தொட்டது போல உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியே வந்த பின், அதுகுறித்து பயங்கரமான கனவுகள் கண்டோம்.
எங்கள் நகங்களை யாரோ பிய்த்தது போல் உணர்ந்தோம். எங்கள் பற்கள் வலுவாக இழுக்கப்பட்டது.
இப்படியெல்லாம், மிரட்சியோடு கூறியுள்ளனர்.
அந்த வீட்டிற்குள் சென்றவர்கள் மீது, பேய்களால் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் கடுமையாக காயமடைந்ததாகவும் செய்திகள் வந்தன.
இதுபோன்ற பயங்கரமான அனுபவங்களால் தான், மெக்கேமி மேனர் எனும் பங்களா, 'பேய் பங்களா' என்று புகழ் பெற்றுள்ளது.
திகிலான சாகச அனுபவத்தைத் தேடுபவர்கள் மட்டுமின்றி, பேய்கள் பற்றி ஆய்வு செய்பவர்களும், இன்னமும் அந்த வீட்டுக்கு வருகின்றனர்.
மெக்கேமி மேனர் வீட்டில், 10 மணி நேரம் தனியாக இருந்தவர்களுக்கு, 20,000 டாலர், அதாவது, இந்திய மதிப்பில், சுமார், 17 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
அந்தப் பணத்தை வெல்ல, தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தனர், பலர். ஆனால், பரிசை வெல்ல முடியாமல், பாதியிலேயே வெளியேறி விட்டனர்.
பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் நபர்களின் நலனுக்காக, இந்தப் போட்டியை நிறுத்த வேண்டும் என கோரினர், பலர்.
இறுதியில், இந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. ஆனால், அந்த வீடு, கடந்த ஓர் ஆண்டுக்கு முன், மீண்டும் திறக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது.
எம்.முகுந்த்
