PUBLISHED ON : மே 10, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன் தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்-
இ யக்குனர் ராம.நாராயணனின், 'தேனாண்டாள் பிலிம்ஸ்' அலுவலகம், விருகம்பாக்கம் சத்யா கார்டன் பின் பக்கம், 80 அடி சாலையில் இருந்தது. ஆரம்பகாலத்தில் இந்த இடத்தில், 'தேவர் பிலிம்ஸ்' சின்னப்பாதேவர், சொந்தமாக வளர்த்த விலங்குகளை இங்கே வைத்து வளர் த்தார். அந்த இடத்தை தான், பின்னாளில் குடியிருப்பாக கட்டினர்.
அந்தக் குடியிருப்பு ஒன்றில் தான், ராம.நாராயணன் அலுவலகம் இருந்தது. இந்த இடத்துக்கு அவர் போன ராசியோ என்னவோ, விலங்குகளை வைத்து அவர் எடுத்த படங்கள் எல்லாம், 'சூப்பர் ஹிட்!' எல்லா மொழிகளிலும் படங்கள் தயாரித்தார். ஒரியா மொழியில் கூட, அவரின் படங்கள் உருவானது. வெள்ளிக்கிழமைதோறும் அவரது படங்கள் வெளியாகும். இதனால், 'வெள்ளிக்கிழமை டைரக்டர்' என, ஒரு முறை எழுதினேன். அதைப் படித்துவிட்டு, 'வெள்ளிக்கிழமை டைரக்டர்ன்னு எழுதக்கூடாது. வெள்ளி விழா டைரக்டர்ன்னு எழுதி இருக்கலாமே...' என்றார், ராம. நாராயணன்.
'விநியோகஸ்தர்கள் விரும்பும் டைரக்டரா நான் எப்பவும் இருக்கணும்...' என்றவரிடம், 'விருது பெறக்கூடிய திரைப்படம் எடுக்கும் ஆசை இல்லையா?' என கேட்டேன்.
'சுமை படத்தோட அந்த எண்ணத்தை துாக்கி, துாரமாக போட்டுட்டேன். நமக்கு தேவை எப்பவும் நிம்மதி; அதுக்குத் தேவை பணம்...' என்றார்.
முன்னாள் முதல்வர், கருணாநிதியுடன், ராம.நாராயணனுக்கு, தனிப்பட்ட நட்பு உண்டு. அதனால், 1989ல், தி.மு.க., வேட்பாளராக, காரைக்குடி தொகுதியில் நிறுத்தப்பட்டார். மாபெரும் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் போனவரிடம், முன்னாள் முதல்வர், 'எம்.ஜி.ஆர்., உயிரோடு இருக்கும் வரை, ஏன் நீங்கள் அரசியலுக்கு வரவில்லை, பயமா?' என, கேட்டேன்.
'அப்படி எல்லாம் இல்ல. இப்ப கூட தலைவர் என்கிட்ட எதுவுமே கேட்காம வேட்பாளர்ன்னு அறிவிச்சிட்டார். என்னோட, 50வது படம், வீரன் வேலுத் தம்பி. கருணாநிதி தான் கதை-, வசனம். அடிக்கடி நான் அவரைப் போய் பார்க்கிறதில்லை. ஆனால், அவரே என் படம் பார்த்துவிட்டு போனில் கூப்பிட்டு பாராட்டுவார். சில சமயம், எஸ்.எஸ்.சந்திரன் கிட்ட சொல்லி அனுப்புவார். எனக்கு எப்பவும், எம்.ஜி.ஆரை பிடிக்கும். புதுசா படம் எடுக்க கதை வேணும்ன்னா அவர் படங்களைத்தான் போட்டு பார்ப்பேன்...' என்று கூறினார், ராம நாராயணன்.
போட்டிகள் நிறைந்த திரைப்பட துறையில் சவால்களை கடந்து, வெற்றிகரமான இயக்குனராக, ராம.நாராயணன் நம் தமிழ் மரபுகள் மற்றும் ஆன்மிகம் சார்ந்து அதிகம் சிந்திப்பார். நெற்றியில் விபூதி, குங்குமம் இல்லாமல் இருக்க மாட்டார்.
'பக்தி மார்க்கத்தில் நிறைய படம் பண்றீங்களே. ஆரம்பத்தில் கம்யூனிச சிந்தனை உள்ளவரா இருந்தீங்களே...' என, ஒரு முறை கேட்டேன்.
'சிவப்பு மல்லி படம் பண்றப்ப, 'எரிமலை எப்படி பொறுக்கும்...' என்று, வைரமுத்துவை பாட்டு எழுத வச்சவன் நான். கம்யூனிச சிந்தாந்தம் மீது ஈர்ப்பு உண்டு. ஆனால், ஆன்மிகம் என்னோட ரத்தத்தில கலந்தது. மார்ச் மாசம் காரைக்குடியில நடக்கிற, முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு தவறாம போயிடுவேன். அந்த அம்மா மீது இருக்கும் பாசத்தில் தான், மீனாட்சி குங்குமம் என, முதல் படம் தயாரிச்சேன்...' என்றார்.
இ யக்குனர், ராம.நாராயணன் பற்றி எழுதும் போது, இயக்குநர், கே.பாலச்சந்தர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
ஒருமுறை தனிப்பட்ட முறையில், 'தாய்' வார இதழில் நான் எழுதிய கட்டுரையை படித்து, பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். பாராட்டு கடிதம் எழுதியதற்கு, நன்றி சொல்ல, பாலச்சந்தர் சாரை பார்க்கப்போனேன்.
நுால்வேலி படப்பிடிப்பின் போது, இயக்குனர், கே.பாலச்சந்தருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. மிகப்பெரிய வற்புறுத்தலுக்கு பின், என்னை வீட்டுக்கு வரச் சொன்னார்.
பேட்டி காண அவர் வீட்டுக்கு சென்றபோது, முதன் முதலில் கதை சொல்லப்போன அனுபவம் பற்றி, கேட்டபோது, அவர் கூறியது...
'கடந்த, 1949ல், என் கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். ஏதாவது ஒரு, 'டிபார்ட்மென்ட்'டில், வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவிற்கு, ஓர் விண்ணப்பம் போட்டேன். அதோடு, என் கல்லுாரியில் பேராசிரியர்களி டமிருந்து வாங்கிய பல சான்றிதழ்களை இணைத்திருந்தேன். நாடகம், விளையாட்டு, கல்வித்தரம் போன்றவற்றில் நான் சிறப்பான இடத்தை பெற்றிருந்ததற்கான அத்தாட்சிகள் அவை!
'சில நாட்களுக்கு பின், எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'தங்களுக்கு தற்போது வேலை தர முடியாத நிலையில் இருக்கிறோம். தங்களின் தகுதிக்கேற்ப வேலை அமையும் போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்...' என்று எழுதி இருந்தது. வழக்கமான, 'ரிக்ரட்' லெட்டர். கடிதத்தின் கீழ், 'காஸ்டிங் அஸிஸ்டென்ட்' ஆர்.கணேஷ் என்று கையொப்பமிட்டிருந்தது. 'தற்போது வேலை காலி இல்லை...'என்று தெரிவிக்கிற கடிதத்திலாவது, மதிப்பிற்குரிய, வாசன் கையெழுத்து இருக்குமென்று நினைத்து ஏமாந்தேன்.
'என்னுடைய வேலைக்கான முதல் விண்ணப்பமும் அதுதான். வேலை எதுவும் காலியில்லை என்று எனக்கு வந்த முதல் வருத்தக் கடிதமும் அதுதான். ஆனாலும், என் அபிமான ஸ்டுடியோவிலிருந்து வந்த கடிதம் என்பதால் அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.
'பல ஆண்டுகளுக்கு பின், அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையொப்பமிட்டிருந்தவர் பின்னாளில், மிகவும் பிரபலமாகிவிட்ட, ஜெமினி கணேசன் என்று.
'கமலஹாசனுக்கு அடுத்தபடியாக, என் இயக்கத்தில் அதிகப் படங்களில் நடித்தவர், ஜெமினி கணேசன் தான். எனக்கு வேலையில்லையென்று சொன்னவருக்குத்தான், என் படங்களில் நான் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்தால், வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
'ஜெமினி கணேசனை நான் முதலில் சந்தித்தது கூட மிகவும் சுவையான நிகழ்ச்சிதான்! 1962--63 ஆண்டு இருக்கலாம். நான், ஏ.ஜி.எஸ்., ஆபீஸில் வேலை பாத்துக் கொண்டே, நாடகங்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம்.
அப்போது சென்னை நகரில், நான் எழுதிய, 'மேஜர் சந்திரகாந்த்' நாடகம் அரங்கேறியிருந்த சம யம்...
- தொடரும்- ஆர்.பிரபாகரன்
