
பத்து கிணறுகள், ஒரு குளத்துக்கு சமம்; 10 குளங்கள், ஒரு ஏரிக்கு சமம்; 10 ஏரிகள், ஒரு புத்திரனை தருவதற்கு சமம்; 10 புத்திரர்கள், ஒரு மரத்துக்கு சமம்.
எவர் ஒருவர், நற்கனிகள் பூத்துக் குலுங்கும் நல் மரங்களை நடுகிறாரோ, அவரிடம், தேவதைகளும், முனிவர்களும், கந்தர்வர்களும் தங்கி, அருள் புரிவர்.
'மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்...' என்றார், பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.
ஒரு அரச மரம் நட்டால், ஒரு ஆண்டு சொர்க்கலோக பதவி கிடைக்கும் என, விருஷ ஆயுர்வேத நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆண்டு கால சொர்க்க லோகவாசத்துக்கு, பல அரச மரங்கள் நட வேண்டும். அதிகளவில் ஆக்சிஜன் தரும் மரமாக, அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர், அரச மரத்தை சுற்ற சொல்லி இருப்பதில், மருத்துவ காரணங்கள் உள்ளன.
அரச மரத்தின் அதிக பிராண வாயுவால் சுவாசம் சுத்தமடைகிறது. அதனால், எண்ணம் சுத்தமடைகிறது; புத்தி தெளிவாகிறது; ஞானம் பிறக்கிறது.
புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம், ஒரு அரச மரம் தான். அதன் காரணமாகவே, அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில், நீதி வழங்கினர்.
ஆல மரம், வாக்கின் அடையாளம் என்றும், அதன் காரணமாகவே, வணிகர் பிரிவினரான, பனியாக்கள், அதன் அடியில் கூடி, தங்கள் வணிகத்தை நடத்தினர். எனவே தான் அம்மரத்தை, ஆங்கிலத்தில், 'பான்யன் ட்ரீ' என்று அழைத்தனர்.
ஆல மரம், மேகங்களை ஈர்த்து, அதிக மழையை தருவிக்கக் கூடியவை.
சாஸ்திரப்படி, இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு, கைலாயத்தில் ஒரு இடமும், கூடவே கந்தர்வ கன்னியரும் கிடைப்பர் என்றும், விருஷ ஆயுர்வேதம் நுால் கூறுகிறது.
தமிழகத்தில், மழை அதிகமாக பெய்த இடம், திருவாலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம், ஆல மரம் என்பதும், ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்வதும், இயற்கை தான்.
மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக, இலுப்பை மரத்தையும், அது ஆலையில்லா ஊருக்கு சர்க்கரை என, அதன் பூவையும் குறிப்பிடுவர்.
அரசு, ஆண் மலடையும் வேம்பு, பெண் மலடையும் நீக்கும் வல்லமை உடையது. இதன் காரணமாகவே, அரசுக்கும் - வேம்புக்கும் திருமணம் செய்யும், 'பெர்டிலிடி ரைட்ஸ்' உருவானது.
நுாறு ஆண்டுகள் வாழ, வேப்ப மர பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.
நெட்டிலிங்க மரங்களே, தமிழகத்தில், அசோக மரங்களாக கருதப்படுகின்றன. ஒலியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை இவை குறைக்கிறது.
புங்கை மரத்தை அதிகம் வளர்ப்பதால், தமிழ்நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம்.
பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தை சமாளிக்க, புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து, புங்கை எண்ணெய் தயாரிப்பது, ஒரு மாற்றாக அமையும். அதே நேரத்தில், மழையையும் பெற்றுத் தரும்.
ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி அருகருகே நட்டு, கூடவே, ஐந்து மா மரங்களையும் நடுவோர், நரகத்துக்கு போக மாட்டார்கள் என, விருஷ ஆயுர்வேத நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த காலத்தில், இவை போன்ற சுலோகங்கள் மூலமாகவே, சூழலியலை போற்றி வளர்த்திருக்கின்றனர்.
சொர்க்கம், நரகம் என்பதெல்லாம், நாம் வாழும் சூழலே என்பதையும், நம் வாரிசுகளின் நன்மைக்காகவே, இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும், அவை உணர்த்துகின்றன.
மரம் வளர்ப்பதால், சொர்க்கத்தையும், நம் வாரிசுகளை மரம் இல்லாத, நீர் இல்லாத, மாசடைந்த நகரங்களிலிருந்தும் காக்கிறோம்.
செஞ்சந்தன மரம், அணுக்கதிர் வீச்சை தடுக்க வல்லது. கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில், பாதுகாப்புக்காக, செஞ்சந்தன மரத்தை அதிகளவில் வளர்க்கலாம்.
நாம் அதிகம் கண்டிராத மரங்களான, மருதம், செராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம், வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நெட்டி, வேள்வேல், தழுதாழை, ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங்கொட்டை, எட்டி மற்றும் இயல்வாகை ஆகிய அரிய வகை மரங்களின் மருத்துவ குணங்களை மட்டும் அறிந்துள்ளோம். எனவே, அவற்றை நாம் அதிக அளவில் வளர்த்து, மீட்டெடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
இப்படி, நமக்கு வாழ்வு தரும் மரங்களை படித்தறிவதுடன், பாரம்பரிய மரங்களை வளர்த்து, பாதுகாப்பதும், ஒவ்வொருவரின் கடமையுமாகும்.
இனி ஒரு விதி செய்வோம், அதில் எங்கும் மரம் வளர்ப்போம்!
- புஷ்பலதா